முன்குறிப்பு : குழந்தைகளுக்கான சிறுவர் நீதிக் கதைகள் வரிசையிலான எனது முதல் சிறுகதை முயற்சி இது.
முன்னொரு காலத்தில் மயிலூர் என்னும் சிற்றூரில் விவசாயி ஒருவர் வசித்துவந்தார். காலையில் எழுந்ததும் தனது மாடு, கன்றுகளை தோட்டத்திற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அவர் தனது வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் பித்தளைப் பாத்திரங்கள் சிலவற்றை வைத்திருந்தார். அவற்றில் தங்கப் பாத்திரத்தை மட்டும் தன்னிடமிருந்த அழகான பெட்டியொன்றில் வைத்துப் பாதுகாத்துவந்தார்.
சில நாட்களுக்குப் பிறகு தங்கப் பாத்திரங்களை மட்டும் தனியாக எடுத்து அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் வீசியெறிந்துவிட்டு, தங்கப் பாத்திரம் இருந்த பெட்டியில் பித்தளைப் பாத்திரத்தை எடுத்து வைத்துவிட்டு வழக்கம்போலவே தோட்டத்திற்குச் சென்றுவிட்டார்.
தன்னைத் தங்கம் இருந்த இடத்தில் வைத்ததற்கு பித்தளைக்கு ஆணவம் ஏற்பட்டது. தங்கத்தைப் பலவாறு ஏளனம் செய்தது. தங்கம் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல் அமைதியாக இருந்தது.
பித்தளையின் இந்த ஏளனத்தை வெள்ளிப் பாத்திரம் கவனித்துக் கொண்டிருந்தது. அதுவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தது.
சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே வந்த திருடன் அங்கிருந்த முக்கியமான பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பித்தளைப் பாத்திரத்தைத் தங்கப் பாத்திரமென நினைத்து, அதனைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டான்.
மாலையில் வீடு திரும்பிய அந்த விவசாயி தனது வீடு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும், ஊரெல்லாம் பேசப்பட்ட அந்தத் திருடனின் வேலையாகத்தான் இருக்குமென்று ஊகித்துக் கொண்டு வேக வேகமாக வந்து குப்பைத் தொட்டியைப் பார்த்தார்.
அங்கே அவர் தூக்கி வீசிய தங்கப் பாத்திரம் அமைதியாகக் காத்திருந்தது. அதைப் பார்த்ததும் நிம்மதியடைந்தார் விவசாயி. இந்தத் தங்கப் பாத்திரத்தைப் பாதுகாப்பதற்காகத்தான் அவர் அதனைக் குப்பையில் வீசி எறிந்தார் என்பதை தங்கமும், வெள்ளியும் புரிந்துகொண்டன.