Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Friday, February 12, 2016

சிமோனிலா கிரஸ்த்ரா

சிமோனிலா கிரஸ்தா வாசித்தேன். வளரும் அல்லது வளர்ந்துவிட்ட எழுத்தாளர் மாதவன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இணைய இதழ்களில் வெளிவந்த மாதவனின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். பெயரிடப்படாத சிறுகதை என்கிற கதை மட்டும் சிறுகதைத் தொகுப்பிற்காகப் புதிதாக எழுதியிருப்பார் போலும். பார்வதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இரண்டாவது படைப்பான இந்தச் சிறுகதைத் தொகுப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய முக்கியமான சிறுகதைத் தொகுப்பு.

மாதவனின் எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவர் மொழியைக் கையாளும் விதம். மிக இயல்பாகவும், எளிமையாகவும் அதே சமயம் ஆர்வமூட்டும் விதமாகவும் இருக்கும் அவரது மொழிநடை அடிக்கடி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒன்றிரண்டு கதைகளை நான் ஏற்கெனவே வாசித்திருந்தாலும் மொத்தமுள்ள 15 கதைகளில் 13 கதைகள் எனக்குப் புதியவை. ஏற்கெனவே வாசித்த இரண்டு கதைகளையும் மறுபடியும் படித்துப்பார்த்தேன். அதே சுவாரஸ்யம். முடிவு தெரிந்தும் திரும்பவும் பார்க்கும் படத்தினைப் போல அதே வசீகரத்துடன் இழுத்துச் செல்லும் அந்த மொழிநடைக்காகவே மறுபடியும் படித்தேன்.

சிறுகதைகள் பல்வேறு தளங்களில், வகைமைகளில் எழுதப்படுகின்றன. முன்னுரையில் வா.மு.கோமு குறிப்பிட்டிருந்ததைப் போலவே கிட்டத்தட்ட பதினைந்து கதைகளுமே வெவ்வேறு தளங்களை மையமாகக் கொண்டவையாக எனக்குத் தோன்றியது. ஒவ்வொரு வகையிலுமே நிச்சயம் பாராட்டத்தக்க கதையாக அந்தக் கதைகள் அமைந்திருப்பதாகவே தோன்றியது.

ஒரு பழங்கதை, கருக்கல், பெயரிடப்படாத சிறுகதை, சிமோனிலா கிரஸ்த்ரா, ஜெமியின் காதலன் ஆகிய கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். நிச்சயம் சலிப்பினைத் தராதவையாக இருக்கும். என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சிறுகதைகளில் ஒரு பழங்கதையும், பெயரிடப்படாத கதையும் எப்பொழுதும் நினைவிலிருக்கும்.

கருக்கல் கதையில் வரும் எளிய மனிதர்களும், அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கான பிரச்சினைகளும், சட்டென வெளியேற முடியாத இயல் வாழ்க்கையின் கிடுக்கிப் பிடியும், அதனை எதிர்கொள்ளும் மனிதர்களின் கையறு மனநிலையும், அதில் மாட்டிக் கொண்டாலும் அன்பானவர்களுக்காக எத்தகைய துன்பத்தையும் தாங்கிக் கொள்ளலாம் என்கிற செல்வியின் மன நிலையும் அன்பாலான உலகத்தைக் காட்டுகிறது.

சம்சாரி மற்றும் கலந்துரையாடல் ஆகிய கதைகள் கதைத் தொகுப்பிற்கான திருஷ்டிக் கழிப்பிற்காக சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பது என் அனுமானம். மீதமுள்ள 13 கதைகளும் நிச்சயம் ஒரு அட்டகாசமான வாசிப்பிற்கானவை என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக கதை சொல்லல் முறையில் புதுப்புது வடிவங்களை முயற்சித்து, அதில் வாசிப்பாளர்களை ’அட’ போட வைக்கும் மாதவனின் எழுத்து பாராட்டப்பட வேண்டியது.

ஏற்கெனவே படிக்காதவர்கள் இந்த (சிமோனிலா கிரஸ்த்ரா ) இணைப்பில்  புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம். ஏற்கெனவே படித்தவர்கள் மறுபடியும் வாங்கிப் படிக்கலாம். அல்லது உங்களது நண்பர்களுக்குப் பரிசாக அனுப்பலாம். ஒரு நல்ல எழுத்தாளரை உங்களின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திய மகிழ்ச்சி உங்களுக்கும், ஒரு நல்ல எழுத்தைப் படித்த மகிழ்ச்சி உங்கள் நண்பர்களுக்கும் ஏற்படும் என்பதை மிகத் தைரியமாகவே, மிகு மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன்.


Sunday, February 8, 2015

எலி - முதல் நாவல்

"நினைவழுத்தச் சுழல் வெளிகளின் எல்லையில்லா வெம்பரப்பில்" என்று ஆரம்பித்து எனது முதல் நாவலை எழுதிக் கொண்டிருக்கும்போது என் வலது கன்னத்தில் யாரோ சடாரென்று அறைந்தார்கள். அறைந்தால் சடாரென்று கேட்க வாய்ப்பில்லை என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் எதற்கு அறைந்தார்கள் என்று கேட்பதற்கு முன்னதாகவே அடுத்த கன்னத்தைக் காட்ட வேண்டுமென்று எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருப்பதால் அறை வந்த திசையில் எனது வலது கன்னத்தைக் காட்டியவாறே எழுதுவதைத் தொடர்ந்தேன். சில நொடிகள் தாமதத்திற்குப் பிறகு மீண்டும் வலது கன்னத்திலேயே அறை விழுந்தது. இந்த முறை சடாரில்லை. இதென்ன புதுப் பழக்கம்? ஒரு கன்னத்தில் அறைந்தால் அடுத்த முறை மறுகன்னத்தில் அறைய வேண்டும் என்ற இலக்கணம் கூடத் தெரியாத மூடன் எவன் என்றறிவதற்காக எழுதுவதை நிறுத்திவிட்டுத் திரும்பினேன். யாருமில்லை. உண்மையிலேயே யாருமில்லை; ஆனால், அடித்தது உண்மை. வலித்ததும் உண்மை. நான் என் நாவல் எழுதும் வேலையில் அதிகக் கவனத்துடன் இருந்ததால் அதிசயமாக விழுந்த இந்த அறையினைப் பற்றிக் கவலை கொள்ளாமல் அருகிலிருந்த ஹெல்மெட் ஒன்றினை எடுத்துத் தலையில் கவிழ்த்துவிட்டு மீண்டும் எழுதுவதைத் தொடர்ந்தேன்.

"அகப்படிம காட்சிச் சித்திரங்களின் கூரிய நனவோடையின்" - மறுபடியும் அதே வலது கன்னத்தில் சடார். ஹெல்மெட்டைத் தாண்டியும் சாத்தியமாகியிருந்தது. என்னுடைய பிரச்சினையெல்லாம் ஏன் வலது கன்னத்தில் மட்டுமே அறை விழுகிறது என்பதாக இருந்தது. இடது கன்னத்தைத் தொட்டுப் பார்த்தேன். அங்கே இடது கன்னம் இல்லை. இந்த இடத்தில் பெருமளவில் அதிர வேண்டும். நான் ஏற்கெனவே அதிர்ந்து முடித்துவிட்டதால் இப்பொழுது உங்கள் முறை. என்னுடனேயே இருந்த இடது கன்னம் எங்கே போயிருக்கும்? கண்ணாடியில் பார்த்தேன். அங்கே இடது கன்னம் இருந்த இடத்தில் " என்னை எழுதுவதாக இருந்தால் தமிழில் எழுது. வேறொரு பாஷையில் எழுதாதே" என்ற வார்த்தைகள் மட்டும் ப்ளாஷ் ஆகிக் கொண்டிருந்தன. ஆமாம், எலி நாவல் தான் எப்படி எழுதப்பட வேண்டுமென்று தானே முடிவெடுத்துக் கொண்டது. அதன் பிறகாகத்தான் எலியை எளிய வடிவில் எழுத ஆரம்பித்தேன்.


மேற்சொன்ன கதை நம்பும்படியாக இல்லை; அதுதானே? நம்பும்படியாக இருந்தால் அது எப்படி Fantasy ஆகும்? எலி கற்பனை மற்றும் மிகு கற்பனை வகையினைச் சார்ந்த நாவல். கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் தத்துவம் கலந்த த்ரில்லர் கதை. முற்றிலும் குழந்தைகளுக்கான கதைக்களமென்றாலும் அனேக இடங்களில் Black humor வகையில் முயற்சித்திருக்கிறேன். முதல் நாவல் என்பதால் நிச்சயமாய்க் குறைகளும் கலந்தே இருக்கலாம். அந்த வகையிலும் இது முக்கியமானது. ரியல் டைம் நாவல் என்றும் கூறலாம். 

முதல் நாவல் என்பதால் எனக்குத் தெரிந்த ஒரே மொழியான தமிழில்தான் எழுதியிருக்கிறேன். உங்களுக்குத் தமிழ் தெரிந்திருக்காவிட்டாலும் வாங்கிப் படிக்கலாம். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழைக் கற்றுக் கொண்டு படிப்பதானாலும் மகிழ்ச்சியே.



இணையம் சார்ந்தே எனது வாசிப்பும் எழுத்தும் ஆரம்பமானது என்பதால் இணையத்தில் எனக்கு முதலில் அறிமுகமான நண்பர் பரிசல்காரன் முன்னுரை எழுதியுள்ளார். எலி நாவலில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பகுதி அது. முன்னுரை என்பதால் நாவலின் துவக்கத்திலேயே பதிப்பித்துள்ளோம். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களில் எலி நாவலை நீங்கள் வாசிக்கலாம். பின் அட்டைக்குப் பிறகாக வேறெதையும் பதிப்பிக்க வேண்டாமென்பதில் பதிப்பாளர் தீவிரமாக இருந்ததால் பின் அட்டைக்கு முன்பாகவே நாவலை முடித்திருக்கிறேன். தமிழில் இது ஏற்கெனவே செய்யப்பட்ட முயற்சிதானென்றாலும் எலி நாவலில் இது கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறது.

எலி நாவல் கடந்த 7-02-2015 அன்று திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் சாரு அவர்களால் வெளியிடப்பட்டது. வா.மு.கோமு உடனிருந்தார்.



இனி புத்தகத்தைப் படிக்கப்போகும் உங்களின் விமர்சனங்களை எதிர்நோக்கியபடி காத்திருப்பதுதான் எனக்கு அழகு. எலி நாவலினைப் புத்தகமாக உருவாக்கியதில் என் பங்கினை விடவும் அனேகம் பேரின் உழைப்பும், வாழ்த்தும் இருக்கிறது. எல்லோரைப் பற்றியும் தனியாகப் பதிவதே நான் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும். எலி நாவல் தற்பொழுது விற்பனையாகிவருகிறது.

எலி நாவலினை வாங்க - இங்கே கிளிக் செய்யவும்.

பதிப்பகம் :  நடுகல்.
பக்கங்கள் : 152.
விலை : Rs.130/-