Tuesday, September 27, 2011

மறுபிறவி

முன்குறிப்பு : அதீதம் இதழில் வெளிவந்த எனது சிறுகதை இது.

எமனுக்குக் கொஞ்சம் கூடக் கருணை என்பதே கிடையாது. எத்தனை எத்தனை உயிர்களை எடுக்கிறான்? எவ்வளவு முக்கியமான நேரத்திலெல்லாம் எள்ளவும் கருணையில்லாம் அமாவாசை இருட்டில் மின்சாரத்தைப் பிடுங்கியதுபோல உயிரைப் பிடுங்குவதில் அப்படியென்ன சந்தோசமோ தெரியவில்லை. இதற்கு விதியின் விளையாட்டு என்று பெயர் வேறு. மூடர்கள். எமலோகத்திற்குச் செல்லும் எவரேனும் இதைப்பற்றிப் பேசியிருந்தால் இப்படியெல்லாம் நிகழுமா என்ன?

இப்படித்தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் ராமசாமியின் உயிரையும் எடுத்துகொண்டுவிட்டான் அந்தப் படுபாதகன். ராமசாமி அப்படியென்ன தவறு செய்தார்? அட போன் மாதம்தானே தனக்கு 92 வயது பிறந்துவிட்டதென்று வெள்ளைப் பனியனும், பச்சைக் கோமணுமுமாக தட்டில் மிட்டாயுடன் ஊரெல்லம் கொடுத்துக்கொண்டிருந்தார். அதற்குள் இந்தப் பாவியின் பார்வை பட்டுத் தொலைந்துவிட்டது. எல்லாம் விதியென்று சொல்லியே சமாளித்துக் கொள்ளவேண்டியுள்ளது.

நம்பியூரில் ராமசாமியைப் பற்றி தெரியாதவறே இருக்க முடியாது. மிகவும் நல்லவர். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மட்டுமே பக்கத்துவீட்டுக் கோழிகளை லபக் என்று பிடித்துக் குழம்பு வைப்பார். அந்தப் பாவத்தை அடுத்தவருக்குத் தரக்கூடாதென திருடிய கோழி முழுவதையும் தானே தின்று தீர்ப்பார். அட குழம்பு வெந்துவிட்டதா என்று சோதனை கூட அவரேதான் செய்வார். ஒருமுறை தவறுதலாக அவரது மனைவி ஒரு துண்டினை எடுத்து வாயில் போடும்போது பார்த்துவிட்டார். அன்றிலிருந்து திருட்டுக்கோழி சமைப்பதற்கென்றே தனியொரு அறையை ஏற்படுத்திக்கொண்டுவிட்டார்.

சில சமயங்களில் ஆடுகளையும் திருடுவார். ஆனால் ஏழ்மையான கன்னங்கள், உடல்கள் ஒட்டிப்போய் எலும்பும் தோலுமாய் இருக்கும் ஆடுகளென்றால் இவருக்குத் தனிக் கருணையுண்டு. அவற்றை உயிரே போகும் நிலையிலும் திருட நினைக்க மாட்டார்.வாஞ்சையுடன் தடவிக்கொடுப்பார். அந்தத் தடவலில் சீக்கிரமே கொழுப்பேறி பெரிதாக வளர்ந்து தன் கைக்கு அகப்பட வேண்டும் என்ற கருணை இருக்கும். நல்ல கொழுத்த ஆடுகளென்றால் உடனே அதற்கென நாட்களைக் குறித்துவிடுவார். அதன் கொட்டத்தை அடக்கப்போவதாக இவருக்கு நினைப்பு. அதிலும் அடுத்தவர் வீட்டு ஆட்டின் கொட்டத்தை அடக்குவது அவர்களை அடுக்குவதாகவே எண்ணிக்கொள்வார்.

ஆனாலும் மிகவும் நல்லவர். திங்கள் , சனிக்கிழமைகளில் யாரைப் பற்றியும் அடுத்தவரிடம் புறம் பேசமாட்டார். மற்ற நாட்களில் மட்டும் தான் கேட்ட செய்தியைப் பற்றி கொஞ்சம் கற்பனை செய்து அடுத்தவர் காதுகளில் போட்டு வைப்பார். அதிலும் அடுத்தவருக்குத் தீங்கு செய்யும் நோக்கம் இருக்காது. நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்திலேயே இது போன்ற செய்திகளைப் பரப்புவார். உதாரணத்திற்கு யாரேனும் ஒரு ஆணும் பெண்ணும் பொது இடத்தில் நின்று பேசிக்கொண்டால் “ அவுங்க ரண்டு பேரும் கூட்டிட்டு ஓடிப் போயிட்டாங்க!” என்று கொஞ்சம் மட்டும் கற்பனை கலந்து சொல்வார். கேட்டால் கற்பனை செய்வது நல்லதென்பார். இப்படி அருமையான மனிதரையும் விட்டுவைக்கப் பொறுக்கவில்லை அந்த எமனுக்கு.

மூக்குப்பொடி என்றால் கொள்ளைப் பிரியம் ராமசாமிக்கு. ஒருமுறை உள்ளூர் மளிகைக் கடையில் கடைக்காரன் ஏமாந்த சமயமாகப் பார்த்து ஒரு டஜன் மூக்குப்பொடி டப்பாக்களை அபேஸ் செய்திருக்கிறார். பீடி , மூக்குப் பொடிக்கெல்லாம் செலவு செய்யக்கூடாதென்பதும் அவரது கொள்கைகளில் முக்கியமான ஒன்று. யாரேனும் தெரிந்தவரை வழியில் பார்த்தால் அப்படியே நலம் விசாரிக்கும் சாக்கில் நான்கைந்து பீடிகளை இனாமாக வாங்கி வைத்துக்கொள்வார்.பீடிக்கு அடிமையொன்றும் இல்லை. யாருமே வரவில்லையென்றாலும் கடைக்குப் போய் பீடியெல்லாம் வாங்கிவிடமாட்டார். ஆனால் இதுவரையிலும் அப்படியொரு துர்ப்பாக்கிய நிலை வந்ததில்லை. யாரேனும் ஒருவர் ராமசாமி குடிக்க வேண்டிய பீடிகளை வாங்கிக் கொண்டுதானிருக்கின்றனர்.

வீரத்திலும் ஊர் மெச்சும் வீரர்தான். செத்த பாம்புகளை இரண்டடி தூரத்திலிருந்தே கல்லால் அடித்தே கொன்றுவிடுவார். இதுவரை இப்படி எத்தனையோ பாம்புகளைக் கொன்றிருக்கிறார். பாம்புகள் மட்டுமா என்ன? ஒரு முறை வெறி பிடித்த நாயைத் துரத்தியடித்ததே இவரது வீரத்தை இன்னும் பத்துத் தலைமுறைகளுக்குச் சுமந்து செல்லும். அப்பொழுது இவர் ஒரு அரசுப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார் அவ்வளவுதான். நூறடி தூரத்தில் வந்த இந்த நாயைக் கண்டு இவர் அலறிய அலறலில் மிரண்டு போய் அந்த பேருந்தின் ஓட்டுனர் தாறுமாறாக வண்டியைச் செலுத்தி அந்த நாய் மீது விட்டுவிட்டார். இவரது சாதுர்யத்தை ஊரே கொண்டாடியது. அவர் புகழ் பாட ஆரம்பித்தால் நொடிகள் மணிக்கணக்கில் உருளும்!

உயிரை எடுத்ததுதான் எடுத்தான், ஒரு பத்து நிமிடம் கழித்தாவது எடுத்துத் தொலைத்திருக்கலாம். சரியாக புதையலப் பற்றிச் சொல்லிமுடிக்கும் முன்பா பெட்ரோல் தீர்ந்து நின்று போன வண்டியைப் போல உயிரைப் பிடுங்கவேண்டும்? எமனுக்குக் கொஞ்சமும் அறிவே கிடையாது. ஒரு பத்து நிமிடம் விட்டிருந்தால் அவனுக்கு என்ன குறைந்துவிடப் போகிறது? எல்லாம் கலிகாலம்.

ராமசாமியின் உடலிலிருந்து உயிர் பிரிந்ததும் அவருக்கு அவரது நினைவுகள் அப்படியே இருந்ததுதான் ஆச்சர்யம்.அவர் இறந்துவிட்டதை அவரால் உணர்வதற்கே சில நிமிடங்கள் பிடித்தது. படங்களில் காட்டுவது போல தன்னை யாரோ இரு கொம்பு முளைத்த அரக்கர்கள் வந்து அழைத்துச் சென்று எமனிடம் விடுவார்கள் என்று நினைத்தார். ஆனால் அப்படியொன்றும் நிகழவில்லை. சரி ஒருவேளை இன்று அவர்கள் விடுப்பில் சென்றிருக்கலாம் என்று நினைத்தவாரே எங்கோ பயணிப்பது போலக் கற்பனை செய்துகொண்டார். எப்படியும் எமலோகம் என்பது நிச்சயமாக புகை மூட்டத்துடன் இருக்கும் என்பது அவரது கற்பனை. அதுவரை தூங்கலாம் என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டிருந்த போது திடீரென ஒரு குரல். திகைத்துப் போய்விட்டார் ராமசாமி. ” இது எந்த இடம் ? “

” எந்த இடம்னா ? “ குரலின் கேள்வி

“ இல்ல நான் செத்துப் போயிட்டேன். அதான் இது எமலோகமா இல்ல சொர்க்கமா, நரகமா ? “ ஆச்சர்யம் அகலாமல் கேட்டார் ராமசாமி.

” எமலோகம் , சொர்க்கம் , நரகம்னுலாம் ஒன்னுமே இல்ல”

“ அப்ப சொர்க்கத்துல ஊர்வசி, ரம்பை , மேனகை எல்லாம் நடனமாடுவாங்கனு சொல்லுறது ? “ எப்போது எந்தக் கேள்வியைக் கேட்பது என்ற விவஸ்தை இல்லாமல் கேட்டுத் தொலைத்துவிட்டார் ராமசாமி.

“ காலம் காலமாக பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் உங்கள் ஆணாதிக்க சிந்தனையில் உதித்த மிக மோசமான கற்பனை. அவர்கள் எதற்காக நடனமாட வேண்டும்? இங்கே ஆண், பெண் என்ற பேதமெல்லாம் இல்லை! “

நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு ராமசாமி கேட்டுக்கொண்டதற்கு இணங்க புதையலைப் பற்றி அவரது குடும்பத்திற்கு அறிவிக்கும் வரையில் பூமியில் வாழ அனுமதியளிக்கப்பட்டது.

அன்றைய தினத்தின் எல்லா உயிர்களும் பிறந்திருந்தன. ஒரே ஒரு ஆட்டைத் தவிர!

அன்று இரவு நம்பியூருக்கு அருகில் இருந்த மற்றொரு ஊரான செவியூரில் ஒரு வளமான குடும்பத்தில் வாழ்ந்து வந்த ஆடொன்று மூன்று குட்டிகளை ஈன்றெடுத்தது. அதில் ஒரு குட்டியாக நமது ராமசாமி பிறந்திருந்தார். என்னதான் ஆட்டுக் குட்டியாகப் பிறந்திருந்தாலும் ராமசாமிக்கு அவரது பழைய நினைவுகள் அழிக்கப்படாமலும் தான் புதையலைப் பற்றிய செய்தியை தனது குடும்பத்திற்கு எடுத்துக் கூறாவே வந்திருப்பதும் ஞாபகத்தில் இருந்தது. தனது சகோதரர்களான மற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் பார்த்தார். ஒருவேளை அவர்களும் மறு ஜென்மமோ என்று நினைத்தவர் சரி போகப் போகப் பேசிப் பழகிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு எழுந்து நிற்க முயன்றது அந்த ஆட்டுக்குட்டி.

நாட்கள் நகர்ந்தன. ராமசாமி என்ற மனிதர் ஆட்டுக்குட்டியாக மறுபிறவி எடுத்திருப்பதை யாருமே கண்டுகொண்டதாகவோ அல்லது அதை நினைத்து ஆச்சர்யப்பட்டதாகவோ தெரியவில்லை. ராமசாமிக்கு நம்பிக்கை இருந்தது. யாரேனும் ஒருவருக்காவது தான் தான் ராமசாமியின் மறுபிறவி என்று தெரிவிக்கவேண்டும் என்று பலவாறு சிந்திக்கலானார். என்னதான் ஆட்டுக்குட்டியாகப் பிறந்திருந்தாலும் அவரது மனம் மனித மனமல்லவா ? அவரால் ஆட்டுக்குட்டியின் அன்றாட நடவடிக்கைகளைச் சரியாகச் செய்யமுடியவில்லை. ஒரே இடத்தில் மலம்,ஜலம் கழிப்பது அவருக்குப் பெரிய அருவருப்பை உண்டாக்கியது. ஆட்டுப் புழுக்கை அவ்வளவு துர்நாற்றம் இல்லாவிட்டாலும் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டார். பின்னர் புல்லை மேய்வது , ஓய்வு நேரத்தில் அதை லாவகமாக வாய்க்குக் கொண்டுவந்து அசை போடுவது என்று பல வேலைகளைக் கற்றுக்கொள்ள மிகச் சிரமப்பட வேண்டியிருந்தது. இவர் மனிதனாக இருந்தபோது ஆடுகளைப் பார்த்து “ இதுகளுக்கு என்ன திங்க வேண்டியது, தூங்க வேண்டியது. வேற என்ன வேலை இருக்குது?” என்று திட்டியது ஞாபகம் வரவே அதைத் தவறென உணர்ந்து கன்னத்தில் போட்டுக்கொள்ள நினைத்து கைகளைத் தூக்கினார். முன்னிரு கால்களும் நிலத்தில் டொம் என்று அடித்து வலியை உண்டாக்கியது.

எத்தனையோ முயற்சிகளைச் செய்துபார்த்தார் ஆடாகிப்போன ராமசாமி. ஒன்றும் பலிக்கவில்லை. கடைசிக் கட்ட நடவடிக்கையாகத்தான் இந்த முயற்சியை மேற்கொண்டார். இருந்தும் ஒருவகையில் பயமாக இருந்தது. ஒருவேளை தான் வாயைத் திறந்து பேசி, பேசும் ஆடென்று யாரேனும் சர்க்கசுக்கு அழைத்துச் சென்றுவிட்டால் என்ன செய்வதென்றும் ஒரு புறம் பயமாக இருந்தது. அந்த பயத்தினால்தான் இத்தனை நாட்களாகப் பேசமால் வேறு வழிகளில் முயன்று கொண்டிருந்தார். என்ன செய்வது ? வேறு வழியில்லையே! எனவே வாயைத்திறந்து தான் யாரென்பதையும் எதற்காக பூமிக்கு வந்திருக்கிறேன் என்பதையும் சொல்லிவிடவேண்டுமென நினைத்தார்.

அன்று விடிந்ததும் ராமசாமி தான் பேச வேண்டியதை மீண்டும் மீண்டும் மனதிற்குள் சொல்லி மனப்பாடம் செய்துகொண்டார். என்ன ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தே இந்த முடிவிற்கு வந்திருந்தார். ஆனால் தான் பேசுவதால் தன் கொம்பை முறிக்கும் அளவுக்கு இப்படியொரு ஆபத்து வருமென்று கருதவில்லை. காலையில் வழக்கம்போல ஆட்டுப்புழுக்கைகளை அள்ளுவதற்காக ஆட்டின் சொந்தக்காரர் வந்திருந்தார். அவரிடம் நைசாக காதுகளில் சொல்லிவிடலாம் என்று நினைத்த ராமசாமி அவரின் காதருகில் சென்று “ என் பேரு ராம்சாமி , நான் போன ஜென்மத்துல நம்பியூர்ல இருந்தேன். ஒரு புதையல் பத்தி சொல்லுறதுக்காகத்தான் மறுபடி பொறந்து வந்திருக்கேன். நீ மட்டும் என்ன அங்க கொண்டுபோய் விட்டா உனக்கும் புதையல்ல பாதி குடுக்கச் சொல்லுறேன்! “ என்று சொன்னார். ஆனால் வெளியில் “ மேஏஏஏஏ” என்ற சத்தம்தான் வந்தது. ஆடு வளர்ப்பவரின் காது ஜவ்வு பிய்ந்து போனது போல ஆகிப்போனது. பக்கத்திலிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தன்னால் முடிந்த மட்டும் ராமசாமியாகிய ஆட்டை அது ராமசாமி என்ற தெரிந்துகொள்ளும் ஆர்வமின்றி அடிக்கலானார். அந்த அடியில் ராமசாமியின் முன்பிறவியில் இல்லாத வசதியான கொம்புகளில் ஒன்று முறிந்து போயிற்று.

ஆனால் அந்தக் கத்தலில் ராமசாமிக்கு அவருக்கே தெரியாத நன்மை வரும் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரது காட்டுக்கத்தலில் காது ஜவ்வு கிழிந்துபோன ராமசாமியின் முதலாளி அவரை விற்றுவிடுவதென்று முடிவுக்கு வந்திருந்தார். அந்த வாரத்தில் ஒருநாள் ராமசாமி சந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ராமசாமியின் போன ஜென்ம ஞாபகத்தின்படி இது ஆட்டுச் சந்தை என்பதை அறிந்து கொண்டார். ராமசாமிக்குத் திடீரென ஒரு பயம் வந்தது. ஒருவேளை தன்னை யாரேனும் கசாப்புக் கடைக்கு வாங்கிச் சென்றுவிட்டால் தான் வந்த லட்சியம் என்னாவது என்று கண்ணீர்வடித்தார். ராமசாமிக்கு நொடிக்கு நொடி பயமாக இருந்தது. அப்பொழுதுதான் ராமசாமியின் ஊரில் கசாப்புக்கடை வைத்திருக்கும் ஒரு வியாபாரி வந்து ராமசாமியின் விலையைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ராமசாமி முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டார். எப்படியும் தன்னை அந்த கசாப்புக்கடைக்காரன் வாங்கிச் சென்றுவிடுவான் என்று பயந்து நடுங்கினார். போன ஜென்மத்தில் திருடித் தின்ற ஆடுகள் , கோழிகள் எல்லாம் நினைவுக்கு வந்தன. இருந்தாலும் கடைசியாக ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாம் என்று பேசுவதற்காக முயற்சித்தார். இந்த முறையும் ”மேஏஏஏஏ” தான். ஒரு ”ஜூன்” கூட வரவில்லை. ராமசாமியின் கடைசி முயற்சியும் தோல்வி. ஆனால் கடவுள் அவரைக் கைவிடவில்லை. கசாப்புக்கடைக்காரன் விலை படியாமல் போய்விட்டான். பெருமூச்சு விட்டுக்கொண்டார் ராமசாமி. அப்போது அவருக்கு இன்னொரு ஆச்சர்யம் நடந்தது. ராமசாமியின் போன ஜென்மத்து மகன் அங்கே வந்துகொண்டிருந்தான். சொல்லிவைத்தாற்போல அவரசர அவசரமாக ராமசாமியை விலைக்கு வாங்கிக்கொண்டு அவரின் புது ஓனராகிக்கொண்டான்.

ராமசாமிக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் தனது மகனைப் பாசத்துடன் தழுவிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போகவே அவனது கால்களை லேசாக நக்கினார். ஆட்டின் வடிவில் இருப்பது தன் தந்தை என்று அறியும் ஆர்வமில்லாத அந்த முட்டாள் மகன் அவரை கயிற்றில் கட்டி இழுத்துச் செல்ல ஆரம்பித்தான்.என்னதான் ஆடென்றாலும் தன்னைத் தன் மகனே கயிற்றில் கட்டி இழுத்துச் செல்வதை நினைத்து வெட்கப்பட்டார் ராமசாமி. அதை விட வேறென்ன செய்யமுடியும் அவரால் ? இருந்தாலும் வீட்டிற்குச் சென்றதும் எப்பாடு பட்டேனும் புதையல் இருக்கும் இடத்தைக் காட்டிவிட வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டார்.

ராமசாமியைக் கூட்டிக்கொண்டு நேராக புதையல் இருக்கும் இடத்திற்குச் சென்றார் அவரது மகன். ராமசாமிக்கு ஆச்சர்யம். எப்படி நாம் நினைப்பது போலவே இவன் நடந்துகொள்கிறான்.? ஒரு வேளை நாம் மறுபிறவி என்பதை இவன் அறிந்துகொண்டானோ என நினைத்து மறுபடியும் அவனது காலை நக்கினார். இந்த முறை ஒங்கி அறைந்து விட்டான் அவரது மகன். ராமசாமிக்கு மறுபடியும் குழப்பம். சரி ஆனது ஆகட்டும் என நினைத்துக் கொண்டு அவனது பின்னே ஆடாகவே சென்றுகொண்டிருந்தார் ராமசாமி.

புதையில் இருக்கும் இடத்தை அடைந்ததும் அங்கே சிலர் குழி தோண்டிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் ராமசாமிக்கு அதிர்ச்சி. எப்படி தனக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியம் இவர்களுக்குத் தெரிந்தது? அதையெல்லாம் விடுத்து இதை எடுப்பதற்கு எதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறார்கள்? குழப்பத்தில் இருந்த ராமசாமிக்கு “ ஏன்டா ஆடு வாங்கிட்டு வரதுக்கு இவ்ளோ நேரமா ? சீக்கிரமா வெட்டி தலைய உள்ள போடுங்க. பலி குடுத்துட்டுத்தான் புதையல வெளிய எடுக்கனும்! “ என்ற அவரது மற்றொரு மகனின் குரலைக் கேட்டுப் பதறிப்போனார். உடல் தானாகவே நடுங்க ஆரம்பித்தது. இப்போது பதறி என்ன செய்வது ? ஆடாக இருந்தாலும் உயிர் பயம் இல்லாமலா இருக்கும் ? எப்படித் தப்பிப்பது என்று சிந்திப்பதற்குள் அவரது ஆட்டுருவத்தின் தலை தனியாக குழிக்குள் வீசப்பட்டது.

இந்த முறையும் ராமசாமியின் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஒன்றை மட்டும் அவர் புரிந்துகொண்டார். ஆடுகள் ஆடுகளாகவே பார்க்கப்படுகின்றன. ஆடுகள் தாத்தாக்களாகப் பார்க்கப்படுவதில்லை!

8 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ரொம்ப நாளைக்கு அப்புறமா வந்துருக்கிரே ம்ம்ம் கதை சூப்பரா இருக்கு மக்கா, வாழ்த்துக்கள்...!!!

Unknown said...

nice story...

good narating..

vaalga valamudan.

Prabu Krishna said...

நல்லா இருக்கு அண்ணா.

Mohamed Faaique said...

கதையின் நீதி ஒவ்வொரு நீதிமன்றத்திலும் பொன்னால் பதிக்கப் பட வேண்டும்....

Rathnavel Natarajan said...

அருமை செல்வா.

Madhavan Srinivasagopalan said...

எதப் பாத்து காப்பியடிச்ச..
இத நா வேற எங்கயோ படிச்சிருக்கேன்..

Unknown said...

நம்பியூரு தாத்தனெ இப்படி கொன்னு புட்டியே பங்காளி!கதை சூப்பரு!!

Sivamjothi said...

மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்-bible
http://sagakalvi.blogspot.com/2011/12/blog-post_30.html