Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, January 30, 2016

டிஃபன் பாக்ஸ்!

சரியாகப் பதினொரு மணிக்கெல்லாம் மருத்துவமனையில் இருக்க வேண்டும். இந்த நகரத்திலேயே மிகவும் புகழ்பெற்ற மனநல மருத்துவமனை அதுதானென்று மகள் சொன்னாள். எங்களுக்கு இந்த ப்ராஜெக்ட் கிடைத்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகியிருக்கிறது. பெரும்பாலும் ஒரு ப்ராஜக்டினை முடிப்பதற்கு குறைந்தபட்சமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக எடுத்துக் கொள்வோம். இந்த முறை இரண்டே வாரங்களில் முடிவடைந்துவிடும் போலத்தான் இருக்கிறது.

" மொத்தமா எவ்ளோ பேசிருக்க?"

"எட்டு லட்சம்ப்பா"

"அட்வான்ஸ் கொடுத்துட்டாங்களா?"

"போனவாரத்துலயே 2 லட்சம் கொடுத்துட்டாங்க. ப்ராஜெக்ட் சக்சஸா முடிஞ்சா மீதிப் பணத்தைத் தந்துடறதா சொல்லிருக்காங்க"

இரண்டு வாரங்களில் எட்டு லட்சத்திற்கு அப்படியென்ன ப்ராஜெக்ட், அதுவும் மனநல மருத்துவமனையில்? நானும் என் மகளும் பெரிய பெரிய மருத்துவ உபகரணங்களை விற்பதிலோ அல்லது வேறெதேனும் மருந்துக் கம்பனிகளிலோ வேலை பார்க்கவில்லை.  இத்தனைக்கும் என் மகளும் நானும் சேர்ந்து செய்யும் முதல் ப்ராஜெக்ட் இதுதான். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னதாக எனக்கு இந்த டிஃபன் பாக்ஸ் கிடைத்து, அதைக் கொண்டு இப்படியும் சம்பாதிக்கலாமென்று தெரியவந்ததிலிருந்து இப்போது வரைக்கும் நான் ஒருவன் மட்டுமே இந்த பிசினஸைச் செய்துவருகிறேன். இதை பிசினஸ் என்று கூறமுடியாதுதான். சேவையென்று கூறலாம். யாரோ ஒருவருக்குப் பயன்பட்டாலும் அது சேவைதானே?

அப்படியென்ன சேவை இது? என்னிடம் ஒரு டிபஃன் பாக்ஸ் இருக்கிறது. இதை ஒரு மூன்று அமாவாசைகள் மூடி வைத்திருந்துவிட்டு, மூன்றாவது அமாவாசை அன்று நண்பகல் பனிரண்டு மணிக்கும் முன்பாகத் திறந்தோமானால் யார் அதைத் திறக்கிறார்களோ அவர்கள் முழுப் பைத்தியமாகிவிடுவார்கள். சந்தேகமே வேண்டாம். உண்மைதான். இது வரையிலும் எத்தனையோ நபர்களை இப்படிப் பைத்தியமாக மாற்றியிருக்கிறேன். கடந்த ஆறேழு வருடங்களாக நானும் என் குடும்பமும் செல்வச் செழிப்பாக வாழ்ந்து வருவதற்கு இந்த டிபஃன் பாக்சின் அதிசயச் சக்திதான் காரணம். டிபஃன் பாக்சைத் திறக்கிறவர் பைத்தியமாகிவிடுவார் என்பதையே நம்பமுடியாதுதான். ஒரு பேச்சுக்கு அதனை நம்பினாலும், இப்படிக் கெட்ட சக்தியைக் கொண்ட ஒரு அதிசயப் பொருளைக் கொண்டு எப்படிச் சம்பாதித்து வாழ முடியும்? உண்மையில், நல்ல பலன்களைத் தரும் அதிசயப் பொருளாக இது இருந்திருந்தால் கூட இத்தனை சம்பாதித்திருப்போமா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது. நம் ஊரில் அடுத்தவனின் வளர்ச்சியில் சிரிப்பவர்களைக் காட்டிலும், வீழ்ச்சியில் சிரிப்பவர்கள்தானே அதிகம்? நம்மூரில் மட்டுமில்லை. உலகெங்கிலும் இருக்கும் எல்லா மனிதர்களுமே இப்படித்தான். பொறாமையும் மனித மனத்தில் விளைகிற விசயம்தானே?

நாங்கள் போய்க்கொண்டிருக்கும் இந்தப் ப்ராஜெக்டும் கூடப் பொறாமையால் உருவானதுதான். இந்த நகரத்தில் இருக்கும் மிக முக்கியமான, மிகப் பிரபலமான மனநல மருத்துவரான இவரைப் பைத்தியமாக்கிவிடுவதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான் எட்டு லட்சம் ரூபாய் பிசினஸ் பேசியிருக்கிறோம். எங்களிடம் இருக்கும் இந்த டிபஃன் பாக்ஸைப் பற்றித் தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவானவர்களே. நாங்கள் இப்படியொரு சேவையைச் செய்கிறோம் என்று மட்டும் ஒரு சிலருக்குத் தெரியும். எங்களிடம் சொல்லிவிட்டால், அவர்கள் காட்டும் அந்தக் குறிப்பிட்ட நபரை மூன்று மாதங்களுக்குள்ளாக எப்படியும் பைத்தியமாக்கிவிடுவோம் என்பது மட்டுமே எங்களின் க்ளையண்டுகளுக்குத் தெரியும். எப்படிப் பைத்தியமாக்குகிறோம் என்பதோ, எதனால் அவர்களின் எதிரிகள் பைத்தியமாகிறார்கள் என்பதோ என்னையும், என் குடும்ப உறுப்பினர்களையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. எங்களிடம் ஏதோ அதிசயச் சக்தி இருக்கிறது என்று மட்டும் பேசிக்கொள்கிறார்கள். பில்லி, சூனியம், பேய், பிசாசு வேலைகளாக இருக்குமென்றும் கூடச் சிலர் சந்தேகிப்பதுண்டு. ஆனால், டிபஃன் பாக்ஸைப் பற்றி எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது. 

ஒரு ப்ராஜெக்டை ஏற்றுக் கொண்டதிலிருந்து நாங்கள் யாரைப் பைத்தியமாக்க ஒப்புக் கொண்டோமோ அவர்களுடன் எப்படியாவது நெருங்கிப் பழக ஆரம்பித்துவிடுவோம். இந்த டிபஃன் பாக்ஸின் அதிசயச் சக்தி வேலை செய்ய வேண்டுமானால் மூன்று அமாவாசைகள் வரையிலும் காத்திருக்க வேண்டும். அதற்காகத்தான் ஒரு ப்ராஜெக்டை ஒப்புக் கொண்டதிலிருந்து மூன்று மாதங்கள் காலக்கெடு கேட்பது. அந்த மூன்று மாத காலத்திற்குள் எங்களது டார்கெட்டுடன் நாங்கள் நெருக்கமாகிவிடுவோம். அந்த மூன்றாவது அமாவாசை தினத்தன்று பகல் பனிரண்டு மணிக்கும் முன்பாக எங்களது டார்கெட்டை எப்படியாவது அந்த டிபஃன் பாக்ஸைத் திறக்குமாறு செய்துவிடுவோம். அப்படித் திறந்துவிட்டால் போதும். எங்களின் ப்ராஜெக்ட் முடிவடைந்துவிடும். அந்த டிபஃன் பாக்ஸைத் திறந்த அந்த நபர் அன்றிலிருந்து முழுப் பைத்தியம்தான். கடந்த ஏழு வருடங்களாக டிபஃன் பாக்ஸைத் திறந்துவிட்ட எல்லா மனிதர்களுமே இப்போது வரையிலுமே பைத்தியமாகத்தான் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு சில தடவைகள் மட்டும் எங்களின் திட்டம் பலிக்காமல் போயிருக்கிறது. அதாவது அந்தக் குறிப்பிட்ட நாளில் நாங்கள் எங்களது டார்கெட்டைச் சந்திக்க முடியாமல் போனதாலோ அல்லது வேறெதேனும் காரணங்களாலோ அப்படி நேர்ந்ததுண்டு. அப்படி ஆகிவிட்ட சமயங்களில் அடுத்த மூன்றாவது மாதம் வரையிலும் காத்திருந்து சில ப்ராஜெக்ட்டுகளை முடித்திருக்கிறோம். அதனால்தான் எங்களின் சேவைக் கட்டணம் இப்பொழுதெல்லாம் லட்சங்களில் போய்க் கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களாக எந்தப் ப்ராஜெக்டும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்காக எங்களுக்கு வருத்தமெல்லாம் இல்லை. ஏனென்றால், அந்த டிபஃன் பாக்ஸிற்குச் சக்தி கிடைப்பதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறபடியால் எப்படியும் ஏதேனுமொரு ப்ராஜெக்ட் கிடைக்குமென்று காத்திருந்தோம். அப்படியாகக் கடந்த வாரத்தில் கிடைத்ததுதான் இந்த மனநல மருத்துவரது ப்ராஜெக்ட். இந்த நகரத்தில் இருக்கும் மற்றொரு மனநல மருத்துவர்தான் எங்களது க்ளையண்ட். எங்களது நகரத்தில் இருக்கும் இரண்டாவது பெரிய மனநல மருத்துவர் அவர். அவர் சொல்லித்தான் இவரைப் பைத்தியமாக்குவதற்காக, முழு அமாவாசை நாளான இன்று, டிபஃன் பாக்ஸுடன் கிளம்பிவிட்டோம்.

************
கதை சொல்லியின் மகளான நான் கடந்த ஒரு வாரத்திற்கும் முன்பாக எங்களது டார்கெட் என்று கதை சொன்னவர் கூறிய, இந்த நகரத்திலேயே மிகவும் புகழ்பெற்ற மனநல மருத்துவரைச் சந்தித்தேன்.

" எனக்கு எதும் பிரச்சினை இல்ல டாக்டர். எங்க அப்பாவுக்குத்தான்"

" என்ன பிரச்சினை? "

" அது வந்து... அவருக்கு என்னமோ ஆகிடுச்சு டாக்டர். திடீர் திடீர்னு என்னென்னமோ ஒளர்றாரு.."

" என்ன ஒளர்றாரு? "

" அடிக்கடி ஏதோ டிபஃன் பாக்ஸைப் பத்திச் சொல்றாரு.."

" டிபஃன் பாக்ஸைப் பத்தியா? உங்க வீட்டுல டிபஃன் பாக்ஸ் எதுவும் காணாம போயிடுச்சா? தெளிவா, பொறுமையா சொல்லுங்க."

" அதில்ல டாக்டர். அவர்கிட்ட எதோ டிபஃன் பாக்ஸ் இருக்கிறதாகவும், அதைத் திறக்கிறவங்க பைத்தியம் ஆகிடுவாங்கன்னும் சொல்லுறாரு டாக்டர். அடிக்கடி வீட்டுல இருக்கிற ஒரு டிபஃன் பாக்ஸை எடுத்து வந்து முன்னாடி நீட்டி, இதத் திறந்திடாத, திறந்துட்டா பைத்தியம் பிடிச்சுக்கும்னு சொல்றார். குறிப்பா அமாவாசைல அந்த டிபஃன் பாக்ஸைத் திறக்கறவங்க பைத்தியம் ஆகிடறதாகவும், அத வச்சு நாம மத்தவங்க கிட்ட அவங்களோட எதிரிகளைப் பைத்தியம் ஆக்குறதுக்கு பணம் வாங்கிக்கலாம்னு சொல்றார். எனக்கு ஒரே பயமா இருக்கு. பைத்தியம் ஆகிட்டு வர்றாரோன்னு டென்சனா இருக்கு டாக்டர்."

" ரொம்பவே கவனமா பாத்துக்க வேண்டிய கன்டிசன்தான். எத்தன நாளா இப்படி நடந்துக்கிறாரு?"

" இப்ப ஒரு ரண்டு மாசமாத்தான் . அந்த டிபஃன் பாக்ஸை வச்சு லட்ச லட்சமா சம்பாதிச்சதாகவும், அதன் மூலமா நாங்க வசதியா வாழ்றதாகவும் சொல்றார். அந்த டிபஃன் பாக்ஸோட அந்த கெட்ட சக்தி மூலமா ஏழெட்டு வருசமா இப்படி நிறையப் பேரைப் பைத்தியமாக்கினதாகவும், அத ஒரு பிசினசாகவே செஞ்சுட்டு வர்றதாகவும் அடிக்கடி ஒளர்றாரு டாக்டர். அவரு பைத்தியமாகிட்டாரா டாக்டர்?"

" கண்டிப்பா ட்ரீட்மென்ட் எடுத்துக்க வேண்டிய சிச்சுவேசன்தான். இப்படியே விட்றாதீங்க. எங்க இருக்கார் அவர்? ஏன் கூட்டிட்டு வரலையா? "

" வீட்லதான் டாக்டர் இருக்காரு. இப்படி சைக்யாட்ரிஸ்ட் கிட்ட கவுன்சிலிங்குக்குப் போகனும்னு கூப்பிட்டா கண்டிப்பா வரமாட்டார் டாக்டர்."

" வேற எதாச்சும் சொல்லிக் கூட்டிட்டு வரப் பாருங்க. பேசண்ட்ட நேர்ல பார்த்து விசாரிச்சாத்தான் என்னால எதுவும் சொல்லமுடியும். நேர நேரத்துக்கு சாப்பாட்டுக்கிறாரா? சரியா தூங்குறாரா?"

" சாப்பாடு, தூக்கமெல்லாம் நார்மலாத்தான் இருக்கு டாக்டர். ஆனா, ஏன் இப்படிப் பண்ணுறார்னுதான் தெரியல. ரொம்ப பயமா இருக்கு டாக்டர்."

" ஒன்னும் பயப்பட வேண்டாம். நாளைக்குக் காலைல அவரைக் கூட்டிட்டு வாங்க. ஒரு நாலஞ்சு நாள் இங்க இன்பேசண்ட்டா வச்சு கவனிச்சுக்கிட்டா சரி பண்ணிடலாம். இதவிட மோசமான கேசெல்லாம் பாத்திருக்கோம்."

" நாளைக்குக் கூட்டிட்டு வர்றது சிரமம் டாக்டர். என்னதான் க்ளினிக் வாசல் வரைக்கும் வந்தாலும், அதுக்கு அப்புறம் தெரிஞ்சுட்டு, எங்கிட்ட சண்டைப்போட்டுட்டு திரும்பிப் போய்டுவார் . இதுக்கு முன்னாடி ஒரு தடவ வேறொரு சைக்யாட்ரிஸ்ட் கிட்டப் போகும்போது அப்படித்தான் நடந்துக்கிட்டாரு."

" அவர அப்படியேவும் விட முடியாதே? "

" மயக்க மாத்திரை, தூக்க மாத்திரை எதுவும் கொடுத்து தூக்கிட்டு வந்துடலாமா டாக்டர்? "

" அந்த லெவலுக்கெல்லாம் போக வேண்டாம். ஒன்னு பண்ணுங்க. அவரு வழிலையே போய் கூட்டிட்டு வாங்க. அவர் எதோ டிபஃன் பாக்ஸ்ஸ வச்சு பைத்தியமாக்கி சம்பாதிக்கறதா ஒளர்றாருன்னு சொன்னீங்கள்ல, அப்படி ஒருத்தரப் பைத்தியமாக்கனும்னு சொல்லி, அந்த டிபஃன் பாக்ஸையும் எடுத்து அவர் கைல கொடுத்துட்டு இங்க கூட்டிட்டு வந்துடுங்க. அப்புறம் நான் பார்த்துக்கிறேன். டோன்ட் வொர்ரி"

" அப்படியே சொன்னாலும் அவர் அமாவாசை அன்னிக்குத்தான் அந்த டிபஃன் பாக்ஸோட சக்தி வேலை செய்யும்னு சொல்லி, அமாவாசையன்னிக்குப் போலாம்னு சொல்லுவார் டாக்டர்." 

" அப்டியா. இருங்க, இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அமாவாசை வருதான்னு பார்ப்போம். இல்லன்னா தூக்க மாத்திரை கொடுத்து தூக்கிட்டு வந்துடலாம். உங்களுக்குப் பின்னாடி இருக்கிற காலண்டர்ல எப்போ அமாவாசைன்னு பாருங்க."

" இன்னும் ஒரு வாரத்துல அமாவாசை வருது டாக்டர். ஃப்ரைடே"

" குட். அப்போ ஒன்னும் பிரச்சினையில்லை. ஃப்ரைடே அன்னிக்கே கூட்டிட்டு வாங்க. மயக்கப்படுத்திக் கூட்டிட்டு வர்றது பெரிசில்ல. ஆனா, அதனாலயே அவர் மேலும் பயந்துக்கலாம். அதுக்காகத்தான் இப்படி."

"தேங்க் யூ டாக்டர். நீங்கதான் அவரோட டார்கெட்டுனு சொல்லித்தான் கூட்டிட்டு வரப்போறேன். தப்பா நினைச்சுக்காதீங்க டாக்டர். எனக்கு வேற வழி தெரியல"

" டோன்ட் வொர்ரி. இந்த மாதிரி நாங்க நிறையப் பார்த்திருக்கோம்."

******

எவ்வளவு பெரிய மருத்துவமனை! எத்தனை எத்தனையோ மனநலம் குன்றியவர்களைத் தேற்றி அனுப்பியவரென்று பெயரெடுத்தவர். பாவம். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரே பைத்தியமாகப் போகிறார். இத்தனை நாளும் எத்தனையோ மனிதர்களை இந்த டிபஃன் பாக்ஸைத் திறக்க வைத்துப் பைத்தியமாக்கியிருக்கிறேன். ஆனால், இன்று மட்டும் ஏனோ கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இருந்தாலும் செய்துதானே ஆக வேண்டும். காசு வாங்கியாயிற்றே. அடுத்தது எங்கள் டோக்கன்.

" குட்மார்னிங் டாக்டர். இவர்தான் எங்க அப்பா"

" வாங்க வாங்க. ப்ளீஸ் சிட் டவுன். என்ன விசயம்? "

" தெரில டாக்டர். அப்பாதான் உங்களப் பார்க்கனும்னு சொன்னார். " 

என் மகள் டாக்டரிடம் ஏதோ சைகை செய்யவும், அவரும் தலையசைத்துக் கொண்டு என்னிடம், " சொல்லுங்க சார், என்ன விசயம்?"

" அது வந்து... எதுக்கு உங்களப் பார்க்கனும்னு சொன்னேன்னா... வந்து வந்து.. மறந்துடுச்சு.."

" நல்லா யோசிச்சுப் பாருங்க."

" ஒரு நிமிசம் டாக்டர். உங்களப் பார்க்கனும்னு தோணினவுடனே ஒரு காகிதத்தை எடுத்து எதுக்காகப் பார்க்கனும்னு நினைக்கிறேன்னு ஒரு பேப்பர்ல எழுதினேன். அத எங்க வச்சேன்? பாக்கெட்லயும் காணோம். ஆ, இந்த டிபஃன் பாக்ஸ்ல வச்சேன். இருங்க திறந்து எடுத்துப் பார்க்கிறேன்."

" ஹவ் ஸ்வீட் யூ ஆர். வெரி ப்ரேவ்" என்று கூறிக் கொண்டே என் மகளைப் பார்த்துக் கண் ஜாடை காட்டிக் கொள்கிறார். பாவம். இப்பொழுது இந்த டிபஃன் பாக்ஸை அவரிடம் நீட்டித் திறக்கச் சொல்லப் போகிறேன். அப்புறம் முழுப் பைத்தியம்தான்.

" என்னால் திறக்க முடியல டாக்டர். நீங்க திறந்து பாருங்களேன்"

" குடுங்கப்பா நான் திறக்கறேன்... "

"நோ.. டாக்டர் தான் திறக்கனும். உங்கிட்டவெல்லாம் காட்டமாட்டேன்.."

என் மகள் டாக்டரைப் பார்க்க, டாக்டரும் என் மகளைப் பார்த்து மீண்டும் கண் ஜாடையில் பொறுமையாக இருக்கச் சொல்கிறார். 

" குடுங்க சார். நானே திறந்து பார்க்கிறேன்... அவ்ளோ டைட்டாவா இருக்கு..?"

******

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு ஒருநாள் காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தபோது அந்தச் செய்தியைப் பார்க்க நேரிட்டது. எங்கள் நகரின் பிரபல மனநல மருத்துவர் என்று பெயரெடுத்த அந்த மருத்துவர் கடந்த இரண்டு தினங்களாக வினோதமாக நடந்து கொள்வதாகவும், என்ன காரணமென்றே தெரியாமல் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு, நகரின் இரண்டாவது பெரிய மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு பெட்டிச் செய்தி கண்ணில் பட்டது.

" அப்பா, நம்ம ரண்டு பேரும் சேர்ந்து பண்ணின முதல் ப்ராஜெக்ட் க்ரேட் சக்ஸஸ். பேலன்ஸ் ஆறு லட்சம் கிரெடிட் ஆகிடுச்சு. அந்த டிபஃன் பாக்ஸ வழக்கம்போலவே அன்டர்கிரவுண்ட்ல வச்சுப் பூட்டிட்டேன். அடுத்த ப்ராஜெக்ட் கிடைச்சு, மூனு மாசம் ஆகுற வரைக்கும் அது அங்கயே இருக்கட்டும்." என்று சிரிக்கிறாள் மகள்.

Sunday, January 3, 2016

இறக்கை

இப்படியெல்லாம் நடக்குமா என்ன? சாதாரணமாகச் சொல்லப்போனால் முடியை வளரவைப்பதற்கே ஒவ்வொருவரும் எத்தனையோ பிரயாசைகளைச் செய்துவரும் சூழலில் வெட்டித்தனமாகக் கற்பனை செய்ததற்கே இப்படி நேர்ந்துவிடுமா? நேர்ந்துவிட்டதே! இதைத் தலையெழுத்து என்று சொல்லி விலக்கிவிடமுடியுமா என்ன? விலக்கிவிடுவதானால் விலகிவிடலாமே? இப்படியெல்லாம் நடக்குமென்று முன்பே தெரிந்திருந்தால் இப்படியொரு கற்பனையை நான் ஏன் செய்யப்போகிறேன்? கற்பனைகள் நம் கட்டுப்பாட்டில் நிகழ்வதில்லை என்றாலும் ஒரு முயற்சியாவது செய்து கவனத்தைத் திருப்பியிருக்கமாட்டேனா? ஒரு நிமிடக் கற்பனை என் வாழ்க்கையையே பணயமாய்க் கேட்கிறதே?

அப்படியென்ன நிகழ்ந்துவிட்டது எனக்கு? ஒன்றுமில்லை. ஆனால் என் வாழ்க்கையே ஒன்றுமில்லாமல் போய்விட்டது. சொல்கிறேன் கேளுங்கள். அதற்கு முன்னர் நீங்களும் ஒரு கற்பனைக்குள் வரவேண்டும்.

பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்திருக்கிறீர்கள். பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகத்தானே காத்திருப்பார்கள் என்று கேட்கலாம். எல்லோரும் அப்படியல்ல. சரி விடுங்கள். அந்தப் பேருந்து நிறுத்தத்திலேயே உங்களுக்கு மிக அருகிலேயே ஒரு அழகான பெண்ணும் நிற்கிறார். அழகென்றால் நீங்கள் கதைகளிலும், வர்ணனைகளிலும் படித்த அந்த அழகான பெண். இப்போது உங்கள் உடலில் உயிரியல் மாற்றங்கள் ஏற்பட்டு, அந்த உந்துதலினால் என்னென்னவோ கற்பனைகளைச் செய்கிறீர்கள். என்னென்ன கற்பனைகள் என்று என்னைக் கேட்டால்? உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் கற்பனை செய்கிறீர்கள். சமூக ரீதியாக மறுக்கப்பட்டவைகளையும், நமக்கு நாமே போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகளாலும் நாம் விரும்பியதை அடையமுடியாத நிலையில் நமது ஆசைகளைக் கற்பனைகளின் வழியாகத்தானே நிறைவேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. கற்பனைகளிலும் ஒரு வசதியிருக்கிறது. உண்மையில் நடப்பவைகளினால் ஏற்படும் பின்விளைவுகள் கற்பனையில் ஏற்படவாய்ப்பில்லை. இதைத்தான் கற்பனையின் பலமென்று நான் நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். ஆனால் இப்படி நடக்குமென்று நானா கண்டேன்? 

பேருந்து நிறுத்தத்தில் நீங்கள் கண்ட பெண் சில மாதங்களுக்குப் பின்னர் உங்களைத் தேடி வந்து, நீங்கள் அன்று செய்த கற்பனையினால் தான் கருவுற்றிருப்பதாகக் கூறினால் அப்போது என்ன செய்வீர்கள்? “எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்” என்று பாடிக்கொண்டு, ஆரஞ்சு மிட்டாயும், கல்கண்டும் வாங்கி வருவோர் போவோரிடம் கொடுப்பீர்களா ? அப்படி ஒரு நிலை உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? இதனைக் கற்பனை செய்யவும் முடியுமா? நான் ஏன் அப்படிக் கற்பனை செய்யப்போகிறேன்? நான் ஒழுக்கமானவன் என்றுதானே இப்போது சிந்திக்கிறீர்கள்? நானும் கூடத்தான் ஒழுக்கமானவன்.

இந்தியக் கலாச்சாரத்தில் ஒழுக்கமானவன் என்பதற்கு ஒரே ஒரு அர்த்தம்தானே உள்ளது? ஆணோ பெண்ணோ திருமணம் வரையிலும் கன்னித்தன்மையுடன் இருப்பது மட்டும்தானே நமக்குக் கூறப்படும், போதிக்கப்படும் ஒழுக்கவியல் நெறிமுறைகள்? காமம் குறித்துப் பேசக்கூடாது, அது தவறென்று சொல்லவேண்டும், உள்ளூர விரும்பினாலும் வெளி உலகில் காமத்தில் எனக்கு ஈடுபாடில்லை என்று கூறிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதானே? இதெல்லாம் இருந்தாலே ஒழுக்கமானவன்/ள் என்ற முத்திரைக்குத் தகுதியாகிவிடுகிறோம் இல்லையா? மற்றபடி பொது இடங்களில் எச்சில் துப்பலாம், மலக் கழிக்கலாம், குப்பைகளைக் கண்ட இடத்திலும் வீசி எறியலாம், பொதுச் சுவர்களில் கிறுக்கி வைக்கலாம், பூசணிக்காய்களையும், மதுக்குடுவைகளையும் நடு ரோட்டில் உடைத்துவைக்கலாம். இதெல்லாம் ஒழுக்கமானவன் என்கிற எனது முத்திரைக்கு எந்தவிதத்திலும் பங்கம் விளைவிக்காது. இதுதானே நமது கலாச்சாரம்? இதிலும் காதலர்களை முறைத்துப்பார்ப்பதும், வீட்டிலிருந்து தள்ளிவைப்பதும், அவர்களது உரிமைகளைப் பறிப்பதும், சாதி மாறியோ மதம் மாறியோ திருமணம் செய்துகொண்டவர்களை கொன்றுவிடுவதும் கூட அதி உயர் ஒழுக்கசீலர்கள் அல்லது கலாச்சாரக் காவலர்கள் என்ற முத்திரையைப் பெறத்தானே? இந்தியாவில் இதைவிடவும் ஒருத்தன் ஒழுக்கமானவனாக இருந்துவிடமுடியுமா? இதையெல்லாம் பின்பற்றும் நானும் ஒழுக்கமானவன்தான். இப்பொழுது எதற்கு ஒழுக்கத்தைப் பற்றிய பேச்செல்லாம். நான் ஒழுக்கமானவனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு சிறு கற்பனையால் என் வாழ்க்கைதான் நரகமாகப் போகிறதே?

ஏன் எனக்கு மட்டும் இவ்விதம் நேர்ந்தது? இது எல்லோருமே கற்பனை செய்து பார்க்கிற ஒன்றுதான். கற்பனை செய்கையில் வானம் ஒரு புண்ணியதேசமாகத் தோன்றியது. ஆனால் கற்பனை உண்மையான போது மொத்த உலகமும் எனக்கு அந்நியமாகப் போய்விட்டதே? எப்படி இந்த உலகத்தினை எதிர்கொள்ளப்போகிறேன்?

ஆமாம். எனக்கு இறக்கை முளைத்துவிட்டது. 

இது ஏதோ உவமையென்று நினைத்துவிடவேண்டாம். உவமைகளிலும், உருவகங்களிலும் மட்டுமே படிக்கிற இந்த வாக்கியம் இப்பொழுது என் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது. உண்மையிலேயே எனக்கு இறக்கை முளைத்துவிட்டது. இதுதான் என் சோகத்திற்கும் இந்தப் புலம்பல்களுக்கும் காரணம்.

இறக்கை முளைத்தால் பறக்க வேண்டியதுதானே, எதற்காகப் புலம்பித் திரிகிறான் என்றா நினைக்கிறீர்கள்? கற்பனை செய்துகொண்டிருக்கையில் இறக்கை இருந்தால் எப்படியெல்லாம் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று உங்களைப் போலத்தான் நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையாக முளைத்துவிட்ட பிறகு இது பெரும் சுமையாக அல்லவா தெரிகிறது. இறக்கைகள் சுமையென்று கூறவில்லை. இறக்கை முளைத்ததால் என் வாழ்க்கையே சுமையாகப் போனதாகக் கூறுகிறேன்.

நேற்று இரவு தூங்கப் போகும்போதுதான் இந்தக் கற்பனை எனக்குள் உதித்தது. எனக்கும் குருவிகளுக்கு இருப்பதைப் போல இறக்கைகள் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்குமென்று நினைத்துக் கற்பனை செய்து கொண்டிருந்தேன். வானத்தில் பறப்பது என்பது எத்தனை இனிமையானதாக இருக்க வேண்டும்? பேருந்திற்காகக் காத்திருக்க வேண்டாம்; ஏன் என் இறக்கைகளை முதலீடாகக் கொண்டு நானே கூட ஒரு அதி விரைவுத் தபால் துறையினைத் துவங்கி என் வாழ்க்கையினை ஓட்டிவிடலாம் என்றுகூட நினைத்தேன். இதற்காகவே தூங்கும்போது வழக்கமாகக் கடவுளிடம் கேட்கும் சாதாரண வரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு “எனக்குக் குருவிகளுக்கு இருப்பதைப் போன்ற இறக்கைகள் வேண்டும்” என்று கும்பிட்டுக் கொண்டு தூங்கச் சென்றேன். 

என் வாழ்க்கையில் கடவுளிடம் கேட்ட எதுவுமே நிறைவேறியதில்லை. நானும் பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள்  வேண்டும் என்ற வரத்தினைத் தவிர வேறெந்த வரத்தையும் கேட்டதில்லை. அது ஒருபோதும் நிறைவேறியதும் இல்லை. ஒருவேளை கடவுளே கூட பரீட்சையில் மதிப்பெண் பெறாததால் அவரது பெற்றோர்களுக்குப் பயந்து, உலக வாழ்க்கையைத் துறந்துவிட்டுக் கடவுளாக மாறியிருக்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். 

இறக்கை வேண்டுமென்று கேட்டதெல்லாம் ஏதோ ஒரு மயக்கநிலையில்தான். தினமும் சாமி கும்பிடவேண்டுமென்பது அம்மாவின் அறிவுரை. “ என்னனு சாமி கும்பிடறது?” என்று என் சின்ன வயதில் நான் கேட்ட கேள்விக்கு “ நல்லாப் படிக்கணும்னு கும்பிடு” என்ற பதில் கிடைத்தது. அதையே கடந்த பதினேழு வருடங்களாக இன்றுவரையிலும்... இல்லை நேற்றுவரையிலும் கடைப்பிடித்துவந்தேன். கடவுள் மீது எனக்கு அவ்வளவு பெரிய மரியாதையோ நம்பிக்கையோ இல்லை. இருந்தாலும் அம்மாவின் அறிவுரைக்காக இதனைச் செய்துவந்தேன். நல்லாப் படிக்கணும் என்று இத்தனை நாட்களாக நான் கேட்ட வரத்திற்கு எந்தப் பதிலும் இல்லாமல், நேற்றுப் புதிதாகக் கேட்ட வரத்தினை உடனே கொடுத்திருப்பதன் நோக்கம்தான் என்ன? ஒருவேளை சுயமாகக் கேட்கும் வரங்களை மட்டும் கொடுப்பதென்பது கடவுள் உலகின் கொள்கைகளா?

ஆனாலும் இந்தக் கடவுள் செய்திருக்கும் செயல் நகைக்கத்தக்க செயலாகவல்லவா இருக்கிறது? ஒரு கணிப்பொறியைப் போலவோ இல்லை எந்திரத்தைப் போலவோதானே இப்பொழுது செய்திருக்கிறார். அவருக்கு உண்மையில் மூளையில் ஏதேனும் கோளாறா அல்லது கடவுள் என்பதே ஒருவித இயற்கை எந்திரமா? பின்னே, குருவிகளுக்கு இருப்பதைப் போன்ற இறக்கைகள் வேண்டுமென்றால் அதே அளவில் இரண்டு இறக்கைகளை என் தோள்பட்டையில் முளைக்கவைத்திருப்பதன் நோக்கம் என்ன?

குருவிகளைப் போன்ற இறக்கை வேண்டுமென்றால் நீங்கள் என்னவென்று புரிந்துகொள்வீர்கள்? குருவிகளைப் போலப் பறப்பதற்கு இறக்கை வேண்டுமென்று கேட்பதாகத்தானே புரிந்துகொள்வீர்கள்? ஆனால் கடவுள் செய்திருக்கும் இந்தக் கூத்தை என்னவென்பது? என் இரண்டு தோள்பட்டைகளிலும் சிட்டுக்குருவிக்கு இருக்கிற இறக்கையின் அளவிற்கு இரண்டு இறைக்கைகள் முளைத்துள்ளன. தூரத்திலிருந்து பார்த்தால் என் தோளில் இரண்டு பல்லிகள் எட்டிக் குதிப்பதற்காக காத்திருப்பதைப் போலத் தோன்றும். அட, பறப்பதற்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருந்தால் வெயில் காலங்களில் இதை விசிறியாகவாவது பயன்படுத்தியிருப்பேனே? இப்போது முளைத்திருக்கும் இந்த இறக்கையால் எனக்கு என்ன பயன்? பயன் இல்லாவிட்டாலும் தொலைகிறது. இதனால் எனக்கு ஏற்படப்போகும் தொல்லைகளைக் கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்துவிடும்.

இப்பொழுது அதிகாலை ஐந்து மணியாகிறது. இன்னும் சிறிது நேரத்தில் நான் எனது அன்றாட வேலைகளைத் துவங்கியாகவேண்டும். அன்றாட வேலைகளென்றால் படிப்பது, குளிப்பது, பள்ளிக்குக் கிளம்புவது இவைதான். ஆனால் இப்பொழுது எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையை நான் யாரிடம் போய்ச் சொல்லுவேன்? யாருக்கு இது புரியப்போகிறது?

அம்மாவிடமோ அப்பாவிடமோ சொன்னால் என்ன செய்வார்கள்? அழுவார்கள். குழம்பிப்போவார்கள். மருத்துவரிடம் கூட்டிச் செல்வார்கள். மருத்துவருக்கு என்ன தெரியும்? அவர் என்னிடம் என்னவெல்லாம் கேட்பார்? காய்ச்சலடிக்கையில் எப்படி இருக்கிறதென்பதைக் கூட என் அப்பாதான் மருத்துவரிடம் சொல்லுவார். இப்பொழுது கேட்கப்போகும் கேள்விகளுக்கு என் அப்பாவுக்கும் கூட பதில் தெரியாதே? பின்னே, அவருக்குத்தான் இறக்கை முளைத்ததில்லையே? அப்பாவை விடுங்கள்; மருத்துவருக்கு மட்டும் இறக்கை முளைத்திருப்பது குறித்து என்ன தெரிந்திருக்கப் போகிறது? கால்நடை மருத்துவர் என்றால் கூட இறக்கைகளைப் பற்றி எதையேனும் படித்திருப்பார். இவருக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை இறக்கைகளை வெட்டிவிட முயற்சிக்கலாம். ஆனால் இறக்கையை வெட்டினால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்? இது உடனடியாகச் செய்கிற காரியமும் இல்லவே?

மருத்துவரிடம் போவது மட்டுமல்ல எனது பிரச்சினை. அத்துடன் முடிந்துவிடுமானால் விட்டுவிடலாம். அதனையடுத்து இந்தச் செய்தி அதிவிரைவாகப் பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையம் என்று உலகெங்கிலும் பரவிவிடுமே? உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்து பத்திரிக்கையாளர்கள் கையில் காகிதத்தையும், ஒலிவாங்கியையும் எடுத்துக் கொண்டு “ உங்களுக்கு இறக்கை முளைச்சதப் பத்தி என்ன நினைக்கிறீங்க? “ என்ற ஒரே கேள்வியை ஓராயிரம் வகைகளில் கேட்டுக் கொண்டு என் வீட்டு வாசலில் வந்து நிற்பார்களே, அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்லுவேன்? ஏற்கெனவே படித்ததை மனப்பாடம் செய்து கொண்டுபோய் பரீட்சையில் எழுதமுடியாத என்னிடம் புத்தகத்தையே கொடுக்காமல் கேள்வியைக் கேட்டால் என்ன செய்வேன்?

இப்படிக் கேள்விகேட்பதைத் தாண்டியும் மேலும் எண்ணற்ற பிரச்சினைகளை நான் எதிர்கொண்டாக வேண்டுமென்றுதான் எனக்குப் பயமாக இருக்கிறது. முதலில் என்னை வீட்டில் இருப்பதற்கு அனுமதிப்பார்களா என்பது முதலில் நான் எதிர்கொள்ளப்போகிற பிரச்சினை. சாதாரணமாக மரபணுக் குறைபாட்டினால் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாமல் மூன்றாம் பாலினமாக மனித இனத்தில் பிறந்தவர்களையே வீட்டில் வைத்துக் கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டும் இந்த உலகத்தில் நான் வேறொரு உயிராகவல்லாமா மதிக்கப்படுவேன்? பிறகெப்படி என்னை வீட்டில் வைத்துக் கொண்டிருப்பார்கள்? என்னை மனித இனத்திலிருந்தே கூடத் தள்ளிவைக்கலாம். எனக்குப் புதுப் பெயர் ஒன்றினை வைக்கலாம். மிருகக்காட்சி சாலையில் கொண்டுபோய் கூண்டுக்குள் அடைத்துவைத்து பொதுமக்களுக்கு என்னை அதிசய விலங்கென்று காட்சிப்படுத்துவார்கள். அதைவிடக் கொடுமை அங்கே வரும் குழந்தைகள் செய்யும் அட்டூழியங்களும், அதற்குப் பெற்றோர் தரும் பதில்களுமாகத்தான் இருக்கும்.

“ அம்மா, இதென்ன?”

“ இதுதான் இறக்கை மனிதன்”

“ கடிக்குமா?”

“ கிட்டப்போனா கடிச்சுவச்சிடும், இங்க இருந்தே பாரு”

“ இந்த முறுக்கைக் குடுத்தா திங்குமா? “

“வீசிப்பாரு. தின்னாலும் திங்கும்”

இதுவரையிலும் அவன் இவன் என்று அழைக்கப்பட்ட என்னை, அது இது என்று அழைக்கப்படப்போவது எத்தனை கொடுமையானதாக இருக்குமென்று நினைத்தாலே தற்கொலை எண்ணம் வந்துதொலைக்கிறது. இதைவிடவும் கொடுமை அங்கே மிருகக்காட்சிச் சாலையில் எனக்குத் துணியெல்லாம் கொடுத்து அடைத்துவைப்பார்களா இல்லை மற்ற மிருகங்களைப் போலவே... கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. இந்தக் கற்பனைதானே எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்?

இதுமட்டுமல்ல; இன்னும் எத்தனையோ பிரச்சினைகளை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்னும் சிறிது நேரம்தான். ஆறுமணிக்கெல்லாம் நான் கதவைத்திறந்தாக வேண்டும். பின்னர் நான் மனித இனத்திலிருந்து புதிதான ஒரு இனத்திற்கு மாற்றப்படலாம். நானும் மனிதன் தானென்றால் ஏற்றுக்கொள்ளவா போகிறீர்கள்? நீங்களாவது பிற உயிர்களுக்கு இருப்பது போன்று நமக்கும் இருந்தால் வசதியாக வாழலாமென்று கற்பனை செய்யாமல் இருங்கள். இந்தத் துன்பம் என்னோடு போகட்டும். இன்று மாலைக்குள் நான் மிருகக்காட்சிச் சாலைக்கோ அல்லது அருங்காட்சியகத்திற்கோ மாற்றப்படலாம். வந்துபாருங்கள். முறுக்கு, லட்டுக்களை எடுத்துவந்தால் தருவதைப் போல கையைப் பாசாங்கு செய்து கொண்டு திரும்பவும் கூண்டுக்கு வெளியே இழுத்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் போன்ற மனிதர்களுக்கு இது விளையாட்டு. என் போன்ற விலங்குகளுக்கு இது விளையாட்டென அறிந்துகொள்ள ஆறாவது அறிவுகூடக் கிடையாது.

Tuesday, March 3, 2015

வலி - ஒரு சிலாகிப்பு!

சமீபமாக சிறகு இணைய இதழில் வலி என்றொரு சிறுகதையை வாசிக்க நேர்ந்தது. பொதுவாக ரியலிசம் அதாவது எதார்த்தம் சார்ந்த கதைகளைப் படிப்பதென்றால் எனக்குப் பிடிக்காது. ஏனோ தெரியவில்லை. பிடிக்காது. ஓரிரு சமயங்களில் படிக்க நேரும் சிறுகதைகளின் கதைக்கருவோ அல்லது எழுத்து நடையோ கூடக் காரணமாக இருக்கலாம். அப்படிச் சில சமயங்களில் படித்த கதைகளால் எதார்த்தக் கதைகளின் பக்கமாகப் போவதில்லை. அதுவுமில்லாமல் எனக்குக் கற்பனை அல்லது மிகை கற்பனை வகையிலான கதைகள் எழுதுவதில் அதிக விருப்பமென்பதாலும் இந்த ஒவ்வாமை இருந்திருக்கலாம். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னர் படித்த வலி சிறுகதை அதை விமர்சிக்கும் அளவிற்குக் கொண்டுவந்துள்ளது. பொதுவாக சீரியசாக எழுதுவது எனக்கு வராதென்பதால் இதுபோன்ற விபரீத முயற்சிகளைச் செய்வதில்லையென்றாலும் இந்தச் சிறுகதை எனக்குள்ளும் ரியலிசம் சார்ந்த கதைகளை வாசிக்கவும், எழுதவும் தூண்டியதாலும் இந்தச் சிலாகிப்பு.

ஹரிஷ் கணபதி எழுதிய வலி சிறுகதை சிறகு இதழில் வெளியாகியிருந்தது. ஃபேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட ஒரு சிறுகதை. பெண்களின் menturation period சார்ந்த சிறுகதை. ஆனால், கதை அவர்கள் எதிர்கொள்ளும் உடலியல் வலி சார்ந்ததல்ல. உடலியல் வலியினை மையப்படுத்தியிருக்குமானால் இந்தச் சிலாகிப்பு தேவையில்லை. காரணம், அது இயற்கை. அது எதிர்கொண்டே ஆக வேண்டிய ஒன்று. 

செக்ஸ் குறித்தும், சக மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் எந்தவிதமான புரிதலும் இல்லாமல்தான் பெரும்பாலான திருமணங்கள் நடந்தேறுகின்றன. பெரும்பாலான என்பதை அழுத்தியே சொல்லலாம். இந்தக் கதையின் மையமும் அதுவாகத்தான் இருக்கிறது.

menturation சமயத்தில் உறவுக்கு அழைக்கும் தன் கணவன் பிரபாவின் கையைத் தட்டிவிடுவதிலாகட்டும், அதனால் மறுநாள் எந்தத் தொடர்புமில்லாமல் சுடுசொற்களை வாங்கிக் கொள்வதிலாகட்டும், மறுநாள் இரவும் அதே தொல்லையினால் மறுபடியும் கையைத் தட்டிவிடும்போது பிரபா கேட்கும் கேள்வியும் நமக்கு வலியை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக ரகுவின் நினைவு குறித்த கனவும், அதில் பிரபா சமையல் செய்வதான காட்சியும்தான் என்னை இந்தச் சிலாகிப்புக்கு இழுத்துவந்தது. menturation நாட்களில் ஒரு பெண் எதிர்கொள்ளும் மற்ற பிரச்சினைகளை விடவும் அவளைப் புரிந்துகொள்ள வேண்டிய கணவனின் புரியாமைதான் இங்கே மையப்படுத்த வேண்டிய விசயமாகிறது. அதே நாட்களில் அவள் மேற்கொள்ளும் அன்றாடக் கடமைகளையும், சமூகம் சார்ந்த பிரச்சினைகளையும் மிகத் தெளிவாக, குழப்பாமல், வலிந்து சோகத்தைத் திணிக்காமல் இயல்பாக எழுதப்பட்டிருப்பதே இந்தக் கதையின் வெற்றியாக நான் கருதுகிறேன்.

என்னளவில் இந்தச் சிறுகதை சர்வநிச்சயமாகக் கொண்டாடப்பட வேண்டியது. அதற்கான எல்லாத் தகுதிகளும் இருப்பதாகவே தோன்றுகிறது. குறிப்பாக வலி என்பது மனம் சார்ந்த ஒன்று. இயல்பாகக் கிடைக்க வேண்டிய ஆறுதல் கிடைக்குமாயின் உடல் சார்ந்த எந்த வலியையும் சர்வசாதாரணமாகக் கடந்துவிடமுடியும். அதுதான் இங்கே சிக்கல். அதிலும் மூடி மறைக்கப்பட்ட, வெளியில் பேசக்கூடாத விசயமாக மறைத்து வைக்கப்படும் - அதே வேளை ஒவ்வொரு ஆணும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய - இந்த விசயங்கள் புரிதலில்லாத ஆண்களைக் கணவர்களாகப் பெற்ற ஒவ்வொரு பெண்ணையும் எவ்விதத்தில் பாதிக்கிறது என்பது மிகத் தெளிவாகவே விவரிக்கப்பட்டுள்ளது. இக்கதை பேசும் உளவியல் விசயங்களும், கதை தாண்டிய சிந்தனையும் குறிப்பிடத்தகுந்தவை.

கதையை வாசிக்க - வலி - எழுதியவர் - ஹரிஷ் கணபதி.

Friday, February 14, 2014

அவதூறு!

அது அவதூறுதான். அதை அவதூறாகத்தான் கருத வேண்டும். அவதூறல்லாமல் வேறென்ன?
செய்யாத ஒன்றைச் செய்ததாகவும்நடக்காத ஒன்றை நடந்ததாகவும் கூறிப் பழி கூறுவதை என்னவென்பது?


எனக்குச் சைவ உணவுகளைக் காட்டிலும் அசைவ உணவுகள் அதிகமாகப் பிடிக்கும்தான். தினமும் மூன்று வேளைக்குமே அசைவ உணவென்றாலும் சந்தோசம்தான். அதற்காக மனிதக் கறியையுமா தின்பேன்?இப்படியெல்லாமா ஊருக்குள் என்னைப் பற்றிச் செய்திகளைப் பரப்புவீர்கள்?உங்களைப் பார்த்து யாராவது மனிதக் கறி வேண்டுமா என்று கேட்டால் நீங்கள் தலையை ஆட்டிக்கொண்டு அவர்கள் பின்னால் செல்வீர்களா என்னஇல்லை ஒரு கிலோ என்ன விலை என்று கேட்டு வாங்கிவந்து வீட்டில் சமைப்பீர்களா ?கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல் இப்படியா அவதூறு பரப்புவதுஎன்னைப் பற்றி என்னவென்று நினைக்கும் இளைய தலைமுறை?

எனக்கு அவதூறு பரப்புபவர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை. அதெப்படி ஒருவரைப் பற்றிய கெட்ட விசயங்கள் மட்டும் இவ்வளவு வேகமாகப் பரவி விடுகிறதுநல்ல செய்திகளென்றால் சம்மந்தப்பட்டவர்களே வந்து குறிப்புகளைச் சொல்லி, நெளிந்து பின் இறுதியாக அவர்கள் வாயாலேயே சொன்னால்தான் புரிகிறது. தவறான விசயங்கள் மட்டும் வாயைத் திறக்கும் முன்பே தெரிந்துவிடுவது எப்படி?


எல்லோருக்குமே தவறானது என்று சொல்லப்படுவதைச் செய்யும் ஆவல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் யார் முதலில் செய்கிறதுயாரோ ஒருவர் முதலில் செய்தால்தானே அவன் அவ்ளோ பெரிய தப்புப் பண்ணினான்நான் இந்தச் சின்னத் தப்புத்தானே பண்ணினேன் என்று தப்பிக்க முடியும்.

தவறென்பதும்,சரியென்பதும் நீங்களே உருவாக்கிக் கொண்ட வட்டம்தானேவட்டத்தையும் நீங்களே வரைந்துகொள்கிறீர்கள்பின் அதைத் தாண்டக்கூடாதென்ற விதியையும் உருவாக்கிக்கொள்கிறீர்கள்பின் யார் முதலில் விதியை மீறுவதென்றும் எதிர்பார்க்கிறீர்கள்உங்களுக்கு விதியை மீறும் எண்ணமில்லாவிட்டால் விதியை யார் மீறினால் என்னமீறாவிட்டால் என்ன? இப்படியிருந்துவிட்டால் அவதூறுகள் அவ்வளவு வேகமாகப் பரவிவிடுமா என்ன?

அப்படியென்ன அவதூறு செய்துவிட்டார்கள் என்றா கேட்கிறீர்கள்நீங்கள் யாரோ எவரோஇருந்தாலும் நான் இதைச் சொல்லியாக வேண்டும். நான் மாமிசத்திற்கு ஆசைப்பட்டு அது கிடைக்காமல் போனதால் மாமிசத்திற்காக மனிதனைக் கடித்தேனாம். இப்படித்தான் ஊரெல்லாம் பரப்பிவிட்டிருக்கிறார்கள். இதைப் படித்தபோது எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. திட்டமிட்டுப் பரப்பிவிடப்பட்ட மிகப் பெரிய பொய் இதுவென்று நான் யாரிடம் சொல்லமுடியும் ?நான் சொல்வதை யார் கேட்பார்கள்?

முதலில் நான் யாரென்று உங்களுக்குச் சொல்லவேண்டுமே. உங்களுக்கு இலக்கியத்தில் ஈடுபாடிருந்தால் நகுலனின் “ ஒரு ராத்தல் இறைச்சி” என்ற சிறுகதையைப் படித்திருப்பீர்கள். அக்கதையில் வரும் நவீனன் என்னும் எழுத்தாளர் வளர்த்த நாய்தான் நான். அந்தக் கதையைப் படித்திருந்தால் என் வழக்கு உங்களுக்கு இன்னேரத்திற்கெல்லாம் புரிந்திருக்கும். படிக்காவிட்டால் என்ன நானே என் வாழ்க்கையையும் வளர்ந்தவிதத்தையும் கொஞ்சம் சுருங்கச் சொல்கிறேன்கேட்டுவிட்டு யார் பக்கம் நியாயமிருக்கிறதென்று சொல்லுங்கள்.

என்னை எப்பொழுது என் தாயிடமிருந்து பிரித்து நடுரோட்டில் விட்டார்கள் என்பது எனக்கு ஞாபகமில்லை. அப்பொழுது பசியால் அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த சிறுவர்களால் துன்புறுத்தப்பட்டது மட்டும் ஞாபகம் இருக்கிறது. சிலர் கல்லால் அடித்தார்கள்சிலர் குச்சியால் விரட்டினார்கள்சிலர் அவர்கள் வைத்திருந்த பெரிய நாயை ஏவி விட்டார்கள்அவையும் தன் இனமான இன்னொரு இளம் தலைமுறை என்பதைக் கூட யோசிக்காமல் தன் எஜமானர்களின் உத்தரவின்படி என்னைக் குதறின. இப்படியாகவும்இன்னும் கொடுமையாகவும் கழிந்தது முதல் சில நாட்கள்.

துன்பங்களே வந்துகொண்டிருந்தால் பூமி உருண்டை என்று கலீலியோ சொன்னது பொய்யாகிவிடுமே. பூமி உருண்டையென்பது மெய்யாகும் விதமாக என்னையும் ஒருவர் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.அவர் வேறு யாருமல்ல;என் மேல் அவதூறு பரப்பியிருக்கும் எழுத்தாளர் நவீனன் தான். என் மேல் அவதூறு பரப்பவே அவர் என்னை வளர்த்தார் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் அப்படியும் இருக்கலாம்.

எனக்கும் அவருக்குமான உறவுஒரு மனிதன் சாகக் கிடக்கும் நாயின் மேல் காட்டும் பரிதாபமாகத்தான் ஆரம்பித்தது. இவர் இப்படி அவதுறு பரப்புவேன் என்று அன்றே சொல்லியிருந்தாலும் நான் இவரோடுதான் வந்திருப்பேன். பின்னே என்னைத்தான் எல்லோரும் கல்லால் அடித்தார்களே?வேறென்ன செய்யமுடியும் நான்அப்பொழுது எனக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் கொடுத்ததற்காக இப்படி அவதூறு பரப்பலாமா என்னநாய்க்கு எதற்கு உடையென்றா கேட்கிறீகள்ஒரு கிழிந்து போன சட்டையை என்னிடம் கொடுத்தபோது இதையேதான் நானும் கேட்க நினைத்தேன். ஆனால் வெளியே என் குரலோ வள் வள்” என்று வந்ததாக ஞாபகம்.


எனக்கு ராஜூ என்று கூடப் பெயர் சூட்டியிருந்தார். ஆனால் என்னை ராஜூ என்று அழைப்பதை விடவும் ஸ்கோ ஸ்கோ” என்று அழைப்பதே பெருமையாக இருக்கும். என்னை ராஜூ என்றழைத்தாலும் சரிஸ்கோ என்றழைத்தாலும் சரி நன்றாக வாலையாட்டுவேன். இதற்காகவெல்லாம் நான் வேதனைப்படவில்லை.

அவரோ தனிமையில் இருந்தார். அவரது காதலி அவரைக் கலியாணம் செய்துகொள்ளவில்லை. நான் அவரது வீட்டிற்குச் சென்ற இரண்டாவது வருடத்தில் அவரது பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்துபோயினர். இதற்கெல்லாம் அவர் அசந்ததாகத் தெரியவில்லை. அடிக்கடி என்னுடன் பேசவும் செய்தார். அவர் பேசியதில் முக்கியமாக “ மஹாலட்சுமி தியேட்டரில் கைதி வந்திருக்கிறது. பார்க்கலாமாஎன்ன சொல்கிறாய்? “ உனக்குக் கதை பிடிக்குமா?குறுநாவல் பிடிக்குமா? “ என்றெல்லாம் கேட்பார். நானும் அவரின் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலாக வாலையாட்டுவேன். கேள்விகள் என்றில்லைஎன்னைப் பார்த்து இருமினாலும்தும்மினாலும்விரட்டினாலும்கத்தினாலும் கூடவாலாட்டுவேன். உங்கள் வீட்டு நாயும் இதையெல்லாம் செய்கிறதுதானே?


செய்யாவிட்டால் நல்ல மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள்.

ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் அந்தப் புதுப் பழக்கம் வந்தது. ஒருநாள் அவரது வேலைக்காரர் - அல்லது எனக்குச் சோறுபோடுபவர் என்றும் சொல்லலாம் - எனக்கு மாமிசம் வாங்கிவந்திருந்தார். நான் முதல் முதலாகஅன்றுதான் மாமிசத்தைக் கண்ணால் பார்த்தேன் என்று சொல்லவேண்டும். இது ஏதோ புதிய உணவாகத்தான் தெரிந்தது. ஆனாலும் அதன் சுவையை என்னால் மறக்கமுடியவில்லை. இந்த உணவையே தினமும் ஏன் இவர்கள் தருவதில்லை என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனாலும் அவர்கள் போடுவதைத்தானே நான் தின்றாக வேண்டும்அதுதானே ஒரு அடிமையின் மிக முக்கியக் கடமை?

எப்படியோ மாமிசத்தின் சுவை என் வாயில் ஒட்டிக்கொண்டது. அவர்களையும் குறை சொல்வதற்கில்லை. அடிக்கடி மாமிசம் வாங்கிப் போடத்தான் செய்தனர். ஆனால் இதில்தான் என்னைப் பற்றிய அவதூறுக்கான முதல் அத்தியாயம் தொடங்குகிறது.


நவீனன் எழுதியிருக்கும் அந்தக் குறிப்பில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எனக்கு இறைச்சி நாளாம். இறைச்சி வேண்டித் தவம் கிடந்தேனாம். இறைச்சி கிடைக்கும் வரை நான் அவரையே சுத்திச் சுத்தி வந்தேனாம். எப்படியெல்லாம் திரித்திருக்கிறார்நான் தினமும்தான் அவரைச் சுத்திச் சுத்தி வந்தேன். தினமும்தான் அவரை நக்கினேன். அதையெல்லாம் அவர் எப்படி மறந்தார்இதை விடுங்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் இறைச்சிக்காகக் காத்திருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறாரேநாய்களுக்கு வெள்ளியும் சனியும் எப்படித் தெரியும்அது தெரியாமல் நானெப்படிக் காத்திருக்கமுடியும் ?

நீங்களாக ஒன்றைப் பிறருக்குக் கொடுத்தால் அவர் உங்களிடமிருந்து அதைப் பெற்றுக் கொள்ளக் காத்திருப்பதாகவும்அவரின் ஒவ்வொரு செயலையும் உங்களின் உபகாரத்தோடு சம்மந்தப்படுத்திப் பார்த்து மகிழ்வதும்,உங்களை நீங்களே தர்மப்பிரபுவாக நினைத்துக்கொள்வதும்உயர்ந்தவரென்று பிறர் பாராட்டவேண்டுமென்பதுதானே உங்களின் நோக்கம்?

இதைவிடக் கொடுமையென்னவென்றால் நவீனன் அவரது குறிப்பில்எனக்கு இறைச்சி போடும் முன்னதாக அவருக்குக் காபி கொடுக்கப்படுவதைப் பார்த்து நான் நினைத்துக் கொள்வதாக ஒரு யூகம் செய்திருக்கிறார். அதுவும் தவறு. எனக்கு இறைச்சி வருவதற்கு முன் அந்த வேலைக்காரன் அவருக்குக் காபி கொடுப்பான். அதனை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்பொழுது நான் உங்க மனிதஜாதியே இப்படித்தான். எதிரில் ஒரு நாலு கால் மிருகம் பட்டினி கிடப்பது மறந்துவிடும். உங்களுக்கு இரண்டு கால் தான். இருந்தாலும் நீங்கதான் பிரதானம் என்கிற திமிர்” என்று சொல்வதுபோல் இருக்கிறதென்று யூகித்திருக்கிறார். நான் ஒருநாளும் இப்படி நினைத்ததில்லை. சொல்லப்போனால் அவர் காபி குடிக்கும்போது அந்தக் காபியில் எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் நன்றாக இருக்குமென்று வேண்டுமானால் சில சமயம் நினைத்ததுண்டு.

எனக்கு வயதாக வயதாக என் எஜமானனின் மேல் அதிக பற்றுதல் உண்டானதென்னவோ உண்மைதான். அடிக்கடி அவரது காலை நக்குவது எனக்கு மிகப்பிடிக்க ஆரம்பித்தது. அவரது காலை நக்காவிட்டால் எதையோ இழந்ததாகவே உணர்வேன். இதைப் பற்றியும் ஒரு யூகம் செய்திருக்கிறார். அதுதான் அவர் என்னைப் பற்றிச் செய்த மிகச் சரியான யூகம். அதையும் அந்தக் குறிப்பிலேயே எழுதியிருக்கிறார். நான் அவரது காலை நக்குவதையும்அவர் அதைச் சகிக்காமல் என்னை அடிப்பதையும் பற்றி அந்தக் குறிப்பில் நீ ஏன் என்னை அடிக்கிறாய்? நீ இறைச்சி வாங்கித் தருவதற்கென்றா நான் இதைச் செய்கிறேன்நானோ நாய் ஜென்மம். மனிதன் காலை நக்குவதில் அதுவும் உன்னைப் போல் தயை காட்டுபவர்களின் காலை நக்குவதில் எங்களுக்கு ஒரு தனி ருசி. நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றவாறு எழுதியிருக்கிறார். இது உண்மைதான். எல்லா நாய்களுமே தன் எஜமானனை நக்கத்தானே செய்கின்றன.

ஆனால் அதற்குப் பிறகு அவர் ஏனோ எப்பொழுதுமே கான்வாஷ் ஷூ அணிந்து கொண்டேயிருந்தார். அவரது ஷூவையும் நான் நக்கத்தான் செய்தேன். அவரது காலைக் காட்டிலும் அவரது ஷூ இன்னும் நன்றாகவே இருந்தது. இது இப்படியே போய்க்கொண்டிருந்தது.

இதற்குப் பிறகுதான் என் மீதான அவதூறின் இறுதிக்கட்டம் தொடங்கியது. ஒருநாள் அவரது நண்பரொருவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். இருவரும் என்னென்னவோ பேசிக்கொண்டேயிருந்தார்கள். நீண்ட நேரத்திற்குப் பிறகு அவரது நண்பர் என்னைப் பார்த்து எதையோ சொன்னார். பின் இருவரும் சென்றுவிட்டனர்.


அதற்குப் பிறகு ஒருவாரம் நான் அந்த வீட்டில் இருந்தேன். பின் எங்கிருந்தோ வந்த ஒரு வண்டியில் நிறைய நாய்கள் அடைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூண்டில் என்னையும் ஏற்றிவிட்டார்கள். எதற்காக என்று இதுவரைக்கும் தெரியவில்லை.


நடந்தது இதுதான்.

ஆனால் நவீனனின் குறிப்பில் அந்த நண்பர் வந்தது வெள்ளிக் கிழமை என்றும்,அன்று எனக்கு இறைச்சி நாளென்றும்நீண்ட நேரமாகியும் எனக்கு இறைச்சிபோடாததால் நான் என் எஜமானனான நவீனனை இறைச்சிக்காகக் கடித்து விட்டதாகவும் எழுதியிருக்கிறார். எத்தனை பெரிய அவதூறுஇறைச்சிக்காகச் சொந்த எஜமானனையே கடித்துவிடும் அளவிற்கா நான் மோசமாகிப் போனேன். என் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இந்தப் பழியை நான் எப்படிப் போக்குவது?

கடந்த 45 வருடங்களாக என்னைப் பற்றி மக்களிடம் பரவியிருக்கும் இந்த
மாயப்பிம்பத்தை நான் எப்படி உடைத்தெரியப் போகிறேன்எனக்கு யார் நீதி சொல்லப் போகிறார்கள்நீங்களா ?


பின்குறிப்பு : இக்கதை வெட்டிபிளாக்கர்ஸ் நடத்திய சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்டது. இக்கதையில் வரும் ஒரு ராத்தல் இறைச்சி கதையைப் படிக்க இங்கே தொடவும்! 

Monday, October 24, 2011

நகல் (சவால் சிறுகதை - 2011)

முன்குறிப்பு : இந்தப் பதிவு பரிசல்காரர் அவர்களின் சவால் சிறுகதைப் போட்டிக்கான எனது சிறுகதை.

’படியெடுத்தல்’ என்னும் குளோனிங் உலக நாடுகள் பலவற்றிலும் பரவலாக அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் இந்தியாவில் மட்டும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டிலிருந்து அறிவியல் கண்டுபிடித்த பெரும்பாலானவை ஆக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதை விட அழிவிற்காகவே பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வளர ஆரம்பித்த குளோனிங் என்கிற உயிரியல் துறை இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அசுர வளர்ச்சியடைந்து மாபெரும் அழிவு சக்தியாகப் பரிணமிக்கத் தொடங்கியிருந்தது. 

சென்னையின் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளால் வீட்டிலிருந்து கிளம்பிய அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஐ.ஜி அலுவலகம் முன்பாக வந்து நின்றான் விஷ்ணு. அவனது உருவத்தை உள்வாங்கிய அந்தத் தானியங்கிக் கதவு “ வணக்கம் விஷ்ணு! 2040 ஆம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி தங்களின் வருகை பதிவு செய்யப்பட்டது “ என்று ஒலித்தவாறு தனது வாயைத்திறந்து விஷ்ணுவை விழுங்கிக்கொண்டது. 

விஷ்ணு காவல்துறையின் மிகமுக்கிய உளவாளி. பெரும்பாலான வழக்குகளை மிக எளிதாக முடிப்பதற்கு உதவியிருக்கிறான். அவனது அபாரத் திறமையைக் கண்டு வியந்த ஐ.ஜி சரவணனுக்கு இவன் மீது தனி மரியாதை இருந்தது.

ஐ.ஜி அலுவலகத்திற்குள் நுழைந்ததும் எஸ்.பி கோகுல் எதிர்ப்பட்டார்.

“ஹே , கோகுல் ! அந்த பேங்க் கேஸ் என்னாச்சு ? “

” அது பயங்கரக் குழப்பமா இருக்கு. மேனேஜரக் கேட்டா அந்த பணம் ட்ரான்ஸ்பர் ஆன ஏழு நாளும் நான் ஊர்லயே இல்ல. யாரோ கடத்தி வச்சிருந்தாங்கனு சொல்லுறாரு. ஆனா இரண்டு நாள் தான் லீவு எடுத்தாரு , மத்தபடி அவர் தினமும் வந்தார்னு பேங்க் ஸ்டாப்ஸ் சொல்லுறாங்க. அவர் வந்திட்டு போனதுக்கான எல்லா ஆதாரமும் இருக்கு. அவர் நான் வரலைனு சத்தியமே பண்ணுறார். என்ன பண்ணுறதுனே தெரியல! “ அலுப்பாகக் கூறினார் கோகுல்.

" அது பத்தி ஒரு க்ளூ கிடைச்சிருக்கு, இரு தலைய பார்த்துட்டு வந்திடறேன்” என்று கோகுலின் பதிலை எதிர்பாராமல் ஐ.ஜி சரவணனின் அறைக்குச் சென்றான் விஷ்ணு.

விஷ்ணு உள்ளே நுழைந்ததையும் , கோகுலுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு தன் அறை நோக்கி வருவதையும் வீடியோவில் பார்த்துக்கொண்டிருந்த ஐ.ஜி.சரவணன் புன்னகையுடன் விஷ்ணுவை வரவேற்றார்.

” என்ன விஷ்ணு, கோகுல் என்ன சொல்றான் ? “

“ பேங்க் கேஸ்ல ஒன்னுமே புரியலனு பொலம்பிட்டிருக்கான்! “

“ அந்தக் கேசுல இவன் ரொம்ப குடையுற மாதிரி தெரியுது, கொஞ்சம் குழப்பிவிடேன்! “ என்று மர்மமாய்ப் புன்னகைத்தார் ஐ.ஜி.

“ கண்டிப்பா பாஸ்! அதுக்குத்தான் க்ளூ கிடைச்சிருக்குனு சொல்லிட்டு வந்திருக்கேன். இப்பப் பண்ணப்போற குழப்பத்துல அந்தக் கேஸ் பக்கமே தல வச்சுப் படுக்க மாட்டான்! “ என்று கண்ணைச் சிமிட்டியவாறே விடைபெற்றான் விஷ்ணு.

ஐ.ஜி அறையிலிருந்து வெளியேறி தனது அறையை அடைந்து கோகுலை எப்படிக் குழப்பலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது எதிரிலிருந்த குளிர்பதனப் பெட்டி கண்களில் பட்டது. அதன் பெயரான Swathika என்பதை முதலில் எழுதிக்கொண்டான்.  தொடர்ந்து அதன் மாடல் எழுத்தான W என்பதையும் எழுதிக்கொண்டான். பின்னர் உள்ளிருந்த குளிர்பானமான HUSK (2030 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட குளிர்பானம்) என்பதின் முதல் எழுத்தையும் அதன் எண்ணிக்கையையும் சேர்த்து H2 என்று எழுதினான். பிறகு இரண்டாவது வரிசையில் இருந்த Fanta பாட்டில்களையும் அதன் எண்ணிக்கையையும் சேர்த்து 6F என்றும் எழுதிக்கொண்டு பிரிண்டரின் வாய்ஸ் சென்சாரில் அந்த இரு வாசகங்களையும் கூறினான். மறுநொடி இரு துண்டுச் சீட்டுகளை வெளியில் துப்பியது. ஒன்றில் “ Mr.கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு “ என்றும் மற்றொன்றில் “ Sir, எஸ்.பி கோகுலிடன் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். - விஷ்ணு” என்றும் வந்திருந்தது.

இரு துண்டுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டு தன் அறையிலிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான். “ இது சரியா இருக்காதே! “ என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு அறையின் மத்தியிலிருந்த மற்றொரு இருக்கைக்குச் சென்றான். எதிரில் இருந்த டேபிளில் இரு துண்டுச்சீட்டுக்களையும் எடுத்து வைத்தப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவனது iPhone  “ Vishnu Informer " காலிங் என்றது.

“ இதென்னடா இது, நம்ம போன்ல இருந்து நம்மளுக்கே கால் வருது! “என்று நினைத்தவாறே அழைப்பை ரிசீவினான். எதிர்முனையில் கோகுல்.

“ யோவ், என்னோட போன எடுத்துட்டுப் போயிட்ட. உன் போன் இங்க இருக்கு. இதுக்குத்தான் ஒரே மாடல் போன் வாங்கக் கூடாதுங்கிறது! “ 

“ இரு வரேன். உன் க்ளூவும் எடுத்துட்டு வரேன்! “ என்றாவாரே கிளம்பளானான் விஷ்ணு. இவை எல்லாவற்றையும் விஷ்ணுவின் தலைக்கு மேலிருந்த கேமரா இந்தக் கண்ணில் வாங்கி அந்தப் பக்கமிருந்த ஹார்ட் டிஸ்கில் சேமித்துக்கொண்டிருந்தது.

எஸ்.பி கோகுலிடம் அவனது போனையும், க்ளூவையும் கொடுத்துவிட்டு “ இதுதான் எனக்குக் கிடைச்ச க்ளூ, எப்படியாவது ட்ரை பண்ணு. எனக்கு அவரசமா ஒரு வேலை இருக்கு! “ என்று கூறிவிட்டு மீண்டும் தன் அறைக்குள் நுழைந்துகொண்டான் விஷ்ணு.

”அப்பாடா! எப்படியோ ஒரு தொல்லை தொலைஞ்சது! “ என்றவாரே ஆயாசமாய் இருக்கையில் அமர்ந்து டையைக் கொஞ்சம் இறக்கிவிட்டுக்கொண்டே மேலே நிமிர்ந்ததும் அதிர்ந்தான்.

“அடச்சே! இத எப்படி மறந்தேன்? “ என்றவாரே ஆத்திரத்தில் ஒரு சுத்தியலை எடுத்து மேலே சுற்றிக்கொண்டிருந்த கேமராவின் கண்களைக் குருடாக்கினான்.

சட்டென கணினையை ஆன் செய்து மெயின் சர்வரிலிருந்து காவல்துறை உயரதிகாரிகளைப் பற்றிய தகவல்களை டவுன்லோடினான். தரவிறக்கும்போதே நேரடியாகத் தனது தொலைபேசியிலிருந்த மெமரிக்கார்டிற்கும் தகவல்களைப் பறிமாற்றிக்கொண்டு “ BOSS " என்றா எண்ணிற்கு அழைத்தான். எதிர்முனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும் கான்பிரன்ஸ் மூலம் ஐ.ஜி.சரவணனையும் தொடர்புகொண்டு

“Boss, எனக்குக் கொஞ்சம் ஆபத்து. எஸ்.பி.கோகுல குழப்ப நினைச்சு நான் எடுத்த பிரிண்டவுட் எங்க கேமராவுல பதிவாகிருச்சு. என்ன செய்யட்டும்? “

“ உடனே புறப்பட்டு நம்ம லேபுக்கு வந்துடு, ஐ.ஜி க்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே ? “

“ இல்ல சார், நோ ப்ராப்ளம்! “ 

“ சரி வா “ என்று இணைப்பைத் துண்டித்தார் டாக்டர் ரஃபி.

சரியாக அரைமணி நேரத்தில் விஷ்ணு ரஃபியின் லேபுக்கு வந்துசேர்ந்தான்.

“ என்ன விஷ்ணு ? ஒன்னும் பிரச்சினை இல்லையே ? “

“ இல்ல பாஸ். போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவிட்டு வந்துட்டேன்! “

“ எங்க மண்ணத் தூவுனீங்க ? நாங்கதான் வந்துட்டோமே! “ என்றவாறு துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார் எஸ்.பி.கோகுல்.

” கோகுல், கிட்ட வராதீங்க. நான் நினைச்சா இந்தக் கட்டிடத்த இப்பவே தரை மட்டமாக்கிடுவேன். இந்த லேபோட நாலு மூலைலையும் நியூக்ளியர் வெப்பன்ஸ் இருக்கு. எல்லாமே சக்தி வாய்ந்த புளூட்டேனியம் - 239 குண்டுகள். உங்களால இந்த சிட்டியே நாசமா போகனுமா ? “ என்று மிரட்டினார் டாக்டர் ரஃபி.

“அது முடியாது பாஸ், எல்லாத்தையும் புடுங்கிட்டேன்! ( கொஞ்சம் லோக்கல் தமிழில் பேச நினைத்து புடுங்கிட்டேன் என்றான்) “ என்றான் விஷ்ணு.

“ விஷ்ணு! என்ன சொல்ற ? “

“ ஆமா பாஸ், சாரி இனி எதுக்கு பாஸ்னு நடிச்சிட்டு ? உங்க லேபோட டோட்டல் கண்ட்ரோல் என் கைல. இனி நீங்க நேரா ஜெயிலுக்குப் போலாம்”

” நீங்களும்தான் மிஸ்டர் விஷ்ணு! “ என்றார் எஸ்.பி.கோகுல்.

” நான் எதுக்கு ? “

” உங்களுக்கும் ஐ.ஜி. சரவணனுக்கும் , டாக்டர் ரஃபிக்கும் இருந்த தொடர்ப நாங்க கண்டுபிடிச்சிட்டோம். ஐ.ஜி ய அரெஸ்ட் பண்ணியாச்சு. இந்த போட்டோல

இருக்கிறது கூட என்னை டைவர்ட் பண்ண நீங்க போட்ட ப்ளான்னு ஐ.ஜி எங்கிட்ட சொல்லிட்டார்”

” நீங்க அரெஸ்ட் பண்ணினது ஐ.ஜி னா இங்க இருக்கிறது யாரு ? “ அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு அறையைக் காட்டிக் கேட்டான் விஷ்ணு.

அறையைத் திறந்து பார்த்த எஸ்.பி.கோகுல் சற்றே அதிர்ந்தார். அறைக்குள்ளே ஐ.ஜி சரவணனைப் போல ஒருவரும் விஷ்ணுவைப் போல ஒருவரும் இருந்தனர்.

“ இங்க என்ன நடக்குது ? இவுங்க யாரு ? அச்சு அசலா ஐ.ஜி மாதிரியே இருக்கார் ? “ கேள்விகளை அடுக்கினார் கோகுல்.

” இவர்தான் உண்மை. நீங்க அரெஸ்ட் பண்ணியிருக்கிறதுதான் மாதிரி! “ விஷ்ணு பதிலளித்தான்.

“ ஒன்னும் புரில! தயவுசெஞ்சு விளக்கமா சொல்லுங்க“

” நான் சொல்லுறத விட டாக்டர் ரஃபி சொன்னா புரியும்னு நினைக்கிறேன்! “

டாக்டர் ரஃபி தொடரலானார். ” க்ளோனிங் துறைல எனக்கு 2030ல நோபல் பரிசு கிடைச்சது. அதாவது ஒரு மனிதனோட உயிருள்ள ஒரு செல்லை மட்டுமே வச்சுட்டு செல்களின் வளர்ச்சிய துரிதப்படுத்தினா வெறும் 7 நாள்ல அவர மாதிரியே அச்சு அசலான இன்னொரு மனிதனை உருவாக்கிடலாம்கிறதுதான் அந்த ஆராய்ச்சி.குளோனிங் முறை ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ஏழு நாள்ல ஒரு மனிதனை உருவாக்கலாம்கிற என்னோட ஆராய்ச்சிக்காகத்தான் நோபல் பரிசு குடுத்தாங்க. ஆனா இந்தியாவுல க்ளோனிங் செய்யக்கூடாதுனு தடை இருந்ததால அரசாங்கத்துக்குத் தெரியாமதான் இந்த லேபக் கட்டினேன். என்னோட கடந்த பத்து வருட ஆராய்ச்சியின் பயனா வெறும் இரண்டே நாள்ல ஒரு க்ளோன் மனிதனை உருவாக்குற அளவுக்கு வளர்ந்திட்டேன். அதே சமயத்துல அந்த மனிதனோட சிந்திக்கும் ஆற்றல கட்டுப்படுத்தி நாம சொல்லுற வேலைய செய்ய வைக்க திட்டம் போட்டேன். அதையும் கண்டுபிடிச்சேன். அத டெஸ்ட் பண்ணிப்பார்க்கத்தான் அந்த பேங்க் மேனேஜரக் கடத்தி அவர் மாதிரியே ஒரு க்ளோன் உருவாக்கி அந்த க்ளோன் மூலமா அந்த பேங்க்ல இருந்த பணத்த கொள்ளையடிச்சேன். அது வெற்றிகரமா முடிஞ்சதால இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா அதுக்கு போலீஸ் நம்ம கைல இருந்தா வசதியா இருக்கும்னு நினைச்சு போலீஸ் ஐ.ஜி. சரவணனை கடத்தி அவரோட க்ளோன போலீஸ் ஐ.ஜி யா மாத்தினேன். அதே சமயத்துல விஷ்ணு வும் என் கைல மாட்டினார். ஒருவேளை இவர் உண்மையைக் கண்டுபிடிச்சிடுவாரோன்னு பயந்து இவரோட க்ளோனையும் உருவாக்கி அந்த க்ளோன் மூலமா எல்லோரையும் கவனிச்சுட்டு வந்தேன். ஆனா நான் உருவாக்கின விஷ்ணுவோட க்ளோன் எப்படி எனக்கு எதிரா மாறிச்சுனுதான் தெரியல? “ சோகமாய் முடித்தார் ரஃபி.

அது எப்படினு நான் சொல்லுறேன் என்றவாரு ஆரம்பித்தான் அசல் விஷ்ணு. ”உங்க முன்னாடி இப்ப நின்னுட்டிருக்கிறது நீங்க தயாரிச்ச V1 (விஷ்ணு 1 ) க்ளோன் இல்ல. உங்க பாசைல சொல்லப்போனா இது V ஜீரோ. அதாவது நீங்க தயாரிக்கிறதுக்கு முன்னாடியே நான் தயாரிச்ச என்னோட க்ளோன் இது. எனக்கு அந்த பேங்க் கேஸ்ல கிடைச்ச கொஞ்ச தகவல்களை வச்சு சில விசயங்களைக் கண்டுபிடிச்சேன். அதே சமயம் ஐ.ஜி யும் ஒரு ரண்டு நாள் லீவு போட்டார். ஆனா எனக்குத் தெரியாம அவர் லீவு போட்டு நான் பார்த்ததில்ல. சோ அவர் லீவு முடிஞ்சு ஆபீசுக்கு வந்ததும் அவர பாலோ பண்ண ஆரம்பிச்சேன். அவர் ஆபீஸ் முடிஞ்சதும் நேரா உங்க லேபுக்குத்தான் வந்தார். உங்க லேபுக்கு முன்னாடி இருந்த உங்க பேர பத்தின செய்திகளைத் தேடினபோதுதான் நீங்க ஒரு க்ளோனிங் எக்ஸ்பர்ட்னு தெரிஞ்சிக்கிட்டேன். உடனே அந்த பேங்க் மேனேஜரப் போய்ப் பார்த்தேன். அவரும் தன்னை திடீர்னு ஒருநாள் கடத்திட்டுப் போய் உடம்புல இருந்து கொஞ்சம் சதைய வெட்டிட்டு ஒரு ரூம்ல போட்டு அடைச்சு வச்சிருந்ததாவும் , ஏழு நாளுக்கு அப்புறம் திறந்துவிட்டுட்டதாகவும் சொன்னார். அப்பவே நான் இது கண்டிப்பா க்ளோனிங் மேட்டராத்தான் இருக்கும்னு சந்தேகப்பட்டேன். ஆனா அதுக்கு முன்னாடியே நான் என்னோட க்ளோன தயாரிச்சிருந்தேன். உங்க க்ளோன்ஸ் மாதிரி சிந்திக்கத் தெரியாத க்ளோன் இல்ல இது. என்னை மாதிரியே ரொம்ப நல்லா சிந்திக்கும் திறன் வாய்ந்த க்ளோன். என்னோட க்ளோனான இப்ப உங்க முன்னாடி நின்னுட்டிருக்கிற விஷ்ணுவ ஆபீசுக்குப் போகச் சொல்லிட்டு நானா ப்ளான் பண்ணி உங்க கைல சிக்கினேன்” என்று முடித்தார் விஷ்ணு.

“ ஆனா நான் உங்கள கடத்தின ரண்டு நாள்ல உங்களோட க்ளோன தயாரிச்சு உங்க ஆபீசுக்கு அனுப்பி வச்சேனே ? “ குழப்பமாகக் கேட்டார் ரஃபி.

“ அந்தக் குளோனப் பிடிக்கிறதுக்குத்தான் இத்தன ட்ரிக்ஸ் பண்ணினேன். நீங்க என்னைக் கடத்தின இரண்டு நாள்ல என்னை மாதிரியே ஒரு க்ளோன் தயாரிச்சு எங்க ஆபீசுக்கு அனுப்புவீங்கனு தெரியும். அது ஆபீஸ் டைம் போக மிச்ச நேரம் இங்க தான் இருக்கும்னு தெரியும். சோ நீங்க தயாரிச்ச V1-அ கடத்தி என்னோட வீட்டுல அடைச்சு வச்சிட்டுத்தான் என்னோட க்ளோன் அதாவது இப்ப உங்க முன்னாடி நிக்கிறானே இவன் இந்த ஏழு நாளா இங்க வந்திட்டு இருந்தான். உங்க லேப்ல இருக்கிற எல்லா ரோபோட்ஸ் அப்புறம் தற்காப்பு பொருட்கள் எல்லாத்தையும் உங்களுக்குத் தெரியாமயே அப்புறப் படுத்திட்டான்”

” ஆனா நீங்க எதுக்காக எனக்கு தப்பான ஒரு க்ளூ ( S W H2 6F) குடுத்துட்டு கேமராவையும் உடைச்சீங்க ? “ எஸ்.பி கோகுல் ஆர்வமாகக் கேட்டார்.

விஷ்ணுவின் முதல் க்ளோன் பேச ஆரம்பித்தான். ” உண்மைல நம்ம ஆபீஸ்ல யாரெல்லாம் க்ளோன்னு தெரியல. கூடவே யாரெல்லாம் டாக்டர் ரஃபியோட ஆளுங்கன்னு தெரியல. சோ ஒருவேளை நான் போய் இந்த மாதிரி ஐ.ஜி ய கடத்தி வச்சிருக்காங்கனு சொல்லி அவுங்க டாக்டரோட ஆளுங்களா இருந்து இவர் தப்பிச்சிட்டா என்ன பண்ணுறதுனு பயமா இருந்துச்சு. அதனால என் மேல சந்தேகம் வரவைக்கணும்னுதான் அந்த மாதிரி துண்டுச்சீட்டுல ரண்டு வாசகங்கள பிரிண்ட் எடுத்து கேமராவுல படுற மாதிரி வச்சிட்டு , அப்புறம் டென்சனாகி கேமராவ உடைக்கிறமாதிரி உடைச்சேன். ஒருவேளை ரஃபியோட ஆளுங்க அதப் பார்த்தா ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க. உண்மையான போலீஸ் ஆளுங்க பார்த்தா என்னை பாலோவ் பண்ணுவாங்கனு ப்ளான் பண்ணினேன்.அதோட என்னோட மொபைல நீங்க ஒட்டுக்கேக்கனும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் போலீஸ் ஆபீசர்ஸ்சோட இம்பார்ட்டண்ட் பைல்கள மெயின் சர்வர்ல இருந்து என்னோட் யூசர்நேம் குடுத்து டவுன்லோட் பண்ணினேன். அப்படி பண்ணினா என்னோட மொபைல் ஒட்டுக்கேக்கப்படும்னு எனக்குத் தெரியும். அதோட அதே சமயத்துல அங்க இருக்கிற ஐ.ஜி க்கும் இதுல தொடர்பு இருக்குனு தெரியப்படுத்த அவருக்கு கான்பரன்ஸ் போட்டேன். எல்லாமே நான் நினைச்ச மாதிரி ஜெயமா முடிஞ்சது” என்று சிரித்தான் வி-ஜீரோ என்னும் விஷ்ணு.





Tuesday, September 27, 2011

மறுபிறவி

முன்குறிப்பு : அதீதம் இதழில் வெளிவந்த எனது சிறுகதை இது.

எமனுக்குக் கொஞ்சம் கூடக் கருணை என்பதே கிடையாது. எத்தனை எத்தனை உயிர்களை எடுக்கிறான்? எவ்வளவு முக்கியமான நேரத்திலெல்லாம் எள்ளவும் கருணையில்லாம் அமாவாசை இருட்டில் மின்சாரத்தைப் பிடுங்கியதுபோல உயிரைப் பிடுங்குவதில் அப்படியென்ன சந்தோசமோ தெரியவில்லை. இதற்கு விதியின் விளையாட்டு என்று பெயர் வேறு. மூடர்கள். எமலோகத்திற்குச் செல்லும் எவரேனும் இதைப்பற்றிப் பேசியிருந்தால் இப்படியெல்லாம் நிகழுமா என்ன?

இப்படித்தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் ராமசாமியின் உயிரையும் எடுத்துகொண்டுவிட்டான் அந்தப் படுபாதகன். ராமசாமி அப்படியென்ன தவறு செய்தார்? அட போன் மாதம்தானே தனக்கு 92 வயது பிறந்துவிட்டதென்று வெள்ளைப் பனியனும், பச்சைக் கோமணுமுமாக தட்டில் மிட்டாயுடன் ஊரெல்லம் கொடுத்துக்கொண்டிருந்தார். அதற்குள் இந்தப் பாவியின் பார்வை பட்டுத் தொலைந்துவிட்டது. எல்லாம் விதியென்று சொல்லியே சமாளித்துக் கொள்ளவேண்டியுள்ளது.

நம்பியூரில் ராமசாமியைப் பற்றி தெரியாதவறே இருக்க முடியாது. மிகவும் நல்லவர். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மட்டுமே பக்கத்துவீட்டுக் கோழிகளை லபக் என்று பிடித்துக் குழம்பு வைப்பார். அந்தப் பாவத்தை அடுத்தவருக்குத் தரக்கூடாதென திருடிய கோழி முழுவதையும் தானே தின்று தீர்ப்பார். அட குழம்பு வெந்துவிட்டதா என்று சோதனை கூட அவரேதான் செய்வார். ஒருமுறை தவறுதலாக அவரது மனைவி ஒரு துண்டினை எடுத்து வாயில் போடும்போது பார்த்துவிட்டார். அன்றிலிருந்து திருட்டுக்கோழி சமைப்பதற்கென்றே தனியொரு அறையை ஏற்படுத்திக்கொண்டுவிட்டார்.

சில சமயங்களில் ஆடுகளையும் திருடுவார். ஆனால் ஏழ்மையான கன்னங்கள், உடல்கள் ஒட்டிப்போய் எலும்பும் தோலுமாய் இருக்கும் ஆடுகளென்றால் இவருக்குத் தனிக் கருணையுண்டு. அவற்றை உயிரே போகும் நிலையிலும் திருட நினைக்க மாட்டார்.வாஞ்சையுடன் தடவிக்கொடுப்பார். அந்தத் தடவலில் சீக்கிரமே கொழுப்பேறி பெரிதாக வளர்ந்து தன் கைக்கு அகப்பட வேண்டும் என்ற கருணை இருக்கும். நல்ல கொழுத்த ஆடுகளென்றால் உடனே அதற்கென நாட்களைக் குறித்துவிடுவார். அதன் கொட்டத்தை அடக்கப்போவதாக இவருக்கு நினைப்பு. அதிலும் அடுத்தவர் வீட்டு ஆட்டின் கொட்டத்தை அடக்குவது அவர்களை அடுக்குவதாகவே எண்ணிக்கொள்வார்.

ஆனாலும் மிகவும் நல்லவர். திங்கள் , சனிக்கிழமைகளில் யாரைப் பற்றியும் அடுத்தவரிடம் புறம் பேசமாட்டார். மற்ற நாட்களில் மட்டும் தான் கேட்ட செய்தியைப் பற்றி கொஞ்சம் கற்பனை செய்து அடுத்தவர் காதுகளில் போட்டு வைப்பார். அதிலும் அடுத்தவருக்குத் தீங்கு செய்யும் நோக்கம் இருக்காது. நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்திலேயே இது போன்ற செய்திகளைப் பரப்புவார். உதாரணத்திற்கு யாரேனும் ஒரு ஆணும் பெண்ணும் பொது இடத்தில் நின்று பேசிக்கொண்டால் “ அவுங்க ரண்டு பேரும் கூட்டிட்டு ஓடிப் போயிட்டாங்க!” என்று கொஞ்சம் மட்டும் கற்பனை கலந்து சொல்வார். கேட்டால் கற்பனை செய்வது நல்லதென்பார். இப்படி அருமையான மனிதரையும் விட்டுவைக்கப் பொறுக்கவில்லை அந்த எமனுக்கு.

மூக்குப்பொடி என்றால் கொள்ளைப் பிரியம் ராமசாமிக்கு. ஒருமுறை உள்ளூர் மளிகைக் கடையில் கடைக்காரன் ஏமாந்த சமயமாகப் பார்த்து ஒரு டஜன் மூக்குப்பொடி டப்பாக்களை அபேஸ் செய்திருக்கிறார். பீடி , மூக்குப் பொடிக்கெல்லாம் செலவு செய்யக்கூடாதென்பதும் அவரது கொள்கைகளில் முக்கியமான ஒன்று. யாரேனும் தெரிந்தவரை வழியில் பார்த்தால் அப்படியே நலம் விசாரிக்கும் சாக்கில் நான்கைந்து பீடிகளை இனாமாக வாங்கி வைத்துக்கொள்வார்.பீடிக்கு அடிமையொன்றும் இல்லை. யாருமே வரவில்லையென்றாலும் கடைக்குப் போய் பீடியெல்லாம் வாங்கிவிடமாட்டார். ஆனால் இதுவரையிலும் அப்படியொரு துர்ப்பாக்கிய நிலை வந்ததில்லை. யாரேனும் ஒருவர் ராமசாமி குடிக்க வேண்டிய பீடிகளை வாங்கிக் கொண்டுதானிருக்கின்றனர்.

வீரத்திலும் ஊர் மெச்சும் வீரர்தான். செத்த பாம்புகளை இரண்டடி தூரத்திலிருந்தே கல்லால் அடித்தே கொன்றுவிடுவார். இதுவரை இப்படி எத்தனையோ பாம்புகளைக் கொன்றிருக்கிறார். பாம்புகள் மட்டுமா என்ன? ஒரு முறை வெறி பிடித்த நாயைத் துரத்தியடித்ததே இவரது வீரத்தை இன்னும் பத்துத் தலைமுறைகளுக்குச் சுமந்து செல்லும். அப்பொழுது இவர் ஒரு அரசுப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார் அவ்வளவுதான். நூறடி தூரத்தில் வந்த இந்த நாயைக் கண்டு இவர் அலறிய அலறலில் மிரண்டு போய் அந்த பேருந்தின் ஓட்டுனர் தாறுமாறாக வண்டியைச் செலுத்தி அந்த நாய் மீது விட்டுவிட்டார். இவரது சாதுர்யத்தை ஊரே கொண்டாடியது. அவர் புகழ் பாட ஆரம்பித்தால் நொடிகள் மணிக்கணக்கில் உருளும்!

உயிரை எடுத்ததுதான் எடுத்தான், ஒரு பத்து நிமிடம் கழித்தாவது எடுத்துத் தொலைத்திருக்கலாம். சரியாக புதையலப் பற்றிச் சொல்லிமுடிக்கும் முன்பா பெட்ரோல் தீர்ந்து நின்று போன வண்டியைப் போல உயிரைப் பிடுங்கவேண்டும்? எமனுக்குக் கொஞ்சமும் அறிவே கிடையாது. ஒரு பத்து நிமிடம் விட்டிருந்தால் அவனுக்கு என்ன குறைந்துவிடப் போகிறது? எல்லாம் கலிகாலம்.

ராமசாமியின் உடலிலிருந்து உயிர் பிரிந்ததும் அவருக்கு அவரது நினைவுகள் அப்படியே இருந்ததுதான் ஆச்சர்யம்.அவர் இறந்துவிட்டதை அவரால் உணர்வதற்கே சில நிமிடங்கள் பிடித்தது. படங்களில் காட்டுவது போல தன்னை யாரோ இரு கொம்பு முளைத்த அரக்கர்கள் வந்து அழைத்துச் சென்று எமனிடம் விடுவார்கள் என்று நினைத்தார். ஆனால் அப்படியொன்றும் நிகழவில்லை. சரி ஒருவேளை இன்று அவர்கள் விடுப்பில் சென்றிருக்கலாம் என்று நினைத்தவாரே எங்கோ பயணிப்பது போலக் கற்பனை செய்துகொண்டார். எப்படியும் எமலோகம் என்பது நிச்சயமாக புகை மூட்டத்துடன் இருக்கும் என்பது அவரது கற்பனை. அதுவரை தூங்கலாம் என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டிருந்த போது திடீரென ஒரு குரல். திகைத்துப் போய்விட்டார் ராமசாமி. ” இது எந்த இடம் ? “

” எந்த இடம்னா ? “ குரலின் கேள்வி

“ இல்ல நான் செத்துப் போயிட்டேன். அதான் இது எமலோகமா இல்ல சொர்க்கமா, நரகமா ? “ ஆச்சர்யம் அகலாமல் கேட்டார் ராமசாமி.

” எமலோகம் , சொர்க்கம் , நரகம்னுலாம் ஒன்னுமே இல்ல”

“ அப்ப சொர்க்கத்துல ஊர்வசி, ரம்பை , மேனகை எல்லாம் நடனமாடுவாங்கனு சொல்லுறது ? “ எப்போது எந்தக் கேள்வியைக் கேட்பது என்ற விவஸ்தை இல்லாமல் கேட்டுத் தொலைத்துவிட்டார் ராமசாமி.

“ காலம் காலமாக பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் உங்கள் ஆணாதிக்க சிந்தனையில் உதித்த மிக மோசமான கற்பனை. அவர்கள் எதற்காக நடனமாட வேண்டும்? இங்கே ஆண், பெண் என்ற பேதமெல்லாம் இல்லை! “

நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு ராமசாமி கேட்டுக்கொண்டதற்கு இணங்க புதையலைப் பற்றி அவரது குடும்பத்திற்கு அறிவிக்கும் வரையில் பூமியில் வாழ அனுமதியளிக்கப்பட்டது.

அன்றைய தினத்தின் எல்லா உயிர்களும் பிறந்திருந்தன. ஒரே ஒரு ஆட்டைத் தவிர!

அன்று இரவு நம்பியூருக்கு அருகில் இருந்த மற்றொரு ஊரான செவியூரில் ஒரு வளமான குடும்பத்தில் வாழ்ந்து வந்த ஆடொன்று மூன்று குட்டிகளை ஈன்றெடுத்தது. அதில் ஒரு குட்டியாக நமது ராமசாமி பிறந்திருந்தார். என்னதான் ஆட்டுக் குட்டியாகப் பிறந்திருந்தாலும் ராமசாமிக்கு அவரது பழைய நினைவுகள் அழிக்கப்படாமலும் தான் புதையலைப் பற்றிய செய்தியை தனது குடும்பத்திற்கு எடுத்துக் கூறாவே வந்திருப்பதும் ஞாபகத்தில் இருந்தது. தனது சகோதரர்களான மற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் பார்த்தார். ஒருவேளை அவர்களும் மறு ஜென்மமோ என்று நினைத்தவர் சரி போகப் போகப் பேசிப் பழகிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு எழுந்து நிற்க முயன்றது அந்த ஆட்டுக்குட்டி.

நாட்கள் நகர்ந்தன. ராமசாமி என்ற மனிதர் ஆட்டுக்குட்டியாக மறுபிறவி எடுத்திருப்பதை யாருமே கண்டுகொண்டதாகவோ அல்லது அதை நினைத்து ஆச்சர்யப்பட்டதாகவோ தெரியவில்லை. ராமசாமிக்கு நம்பிக்கை இருந்தது. யாரேனும் ஒருவருக்காவது தான் தான் ராமசாமியின் மறுபிறவி என்று தெரிவிக்கவேண்டும் என்று பலவாறு சிந்திக்கலானார். என்னதான் ஆட்டுக்குட்டியாகப் பிறந்திருந்தாலும் அவரது மனம் மனித மனமல்லவா ? அவரால் ஆட்டுக்குட்டியின் அன்றாட நடவடிக்கைகளைச் சரியாகச் செய்யமுடியவில்லை. ஒரே இடத்தில் மலம்,ஜலம் கழிப்பது அவருக்குப் பெரிய அருவருப்பை உண்டாக்கியது. ஆட்டுப் புழுக்கை அவ்வளவு துர்நாற்றம் இல்லாவிட்டாலும் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டார். பின்னர் புல்லை மேய்வது , ஓய்வு நேரத்தில் அதை லாவகமாக வாய்க்குக் கொண்டுவந்து அசை போடுவது என்று பல வேலைகளைக் கற்றுக்கொள்ள மிகச் சிரமப்பட வேண்டியிருந்தது. இவர் மனிதனாக இருந்தபோது ஆடுகளைப் பார்த்து “ இதுகளுக்கு என்ன திங்க வேண்டியது, தூங்க வேண்டியது. வேற என்ன வேலை இருக்குது?” என்று திட்டியது ஞாபகம் வரவே அதைத் தவறென உணர்ந்து கன்னத்தில் போட்டுக்கொள்ள நினைத்து கைகளைத் தூக்கினார். முன்னிரு கால்களும் நிலத்தில் டொம் என்று அடித்து வலியை உண்டாக்கியது.

எத்தனையோ முயற்சிகளைச் செய்துபார்த்தார் ஆடாகிப்போன ராமசாமி. ஒன்றும் பலிக்கவில்லை. கடைசிக் கட்ட நடவடிக்கையாகத்தான் இந்த முயற்சியை மேற்கொண்டார். இருந்தும் ஒருவகையில் பயமாக இருந்தது. ஒருவேளை தான் வாயைத் திறந்து பேசி, பேசும் ஆடென்று யாரேனும் சர்க்கசுக்கு அழைத்துச் சென்றுவிட்டால் என்ன செய்வதென்றும் ஒரு புறம் பயமாக இருந்தது. அந்த பயத்தினால்தான் இத்தனை நாட்களாகப் பேசமால் வேறு வழிகளில் முயன்று கொண்டிருந்தார். என்ன செய்வது ? வேறு வழியில்லையே! எனவே வாயைத்திறந்து தான் யாரென்பதையும் எதற்காக பூமிக்கு வந்திருக்கிறேன் என்பதையும் சொல்லிவிடவேண்டுமென நினைத்தார்.

அன்று விடிந்ததும் ராமசாமி தான் பேச வேண்டியதை மீண்டும் மீண்டும் மனதிற்குள் சொல்லி மனப்பாடம் செய்துகொண்டார். என்ன ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தே இந்த முடிவிற்கு வந்திருந்தார். ஆனால் தான் பேசுவதால் தன் கொம்பை முறிக்கும் அளவுக்கு இப்படியொரு ஆபத்து வருமென்று கருதவில்லை. காலையில் வழக்கம்போல ஆட்டுப்புழுக்கைகளை அள்ளுவதற்காக ஆட்டின் சொந்தக்காரர் வந்திருந்தார். அவரிடம் நைசாக காதுகளில் சொல்லிவிடலாம் என்று நினைத்த ராமசாமி அவரின் காதருகில் சென்று “ என் பேரு ராம்சாமி , நான் போன ஜென்மத்துல நம்பியூர்ல இருந்தேன். ஒரு புதையல் பத்தி சொல்லுறதுக்காகத்தான் மறுபடி பொறந்து வந்திருக்கேன். நீ மட்டும் என்ன அங்க கொண்டுபோய் விட்டா உனக்கும் புதையல்ல பாதி குடுக்கச் சொல்லுறேன்! “ என்று சொன்னார். ஆனால் வெளியில் “ மேஏஏஏஏ” என்ற சத்தம்தான் வந்தது. ஆடு வளர்ப்பவரின் காது ஜவ்வு பிய்ந்து போனது போல ஆகிப்போனது. பக்கத்திலிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தன்னால் முடிந்த மட்டும் ராமசாமியாகிய ஆட்டை அது ராமசாமி என்ற தெரிந்துகொள்ளும் ஆர்வமின்றி அடிக்கலானார். அந்த அடியில் ராமசாமியின் முன்பிறவியில் இல்லாத வசதியான கொம்புகளில் ஒன்று முறிந்து போயிற்று.

ஆனால் அந்தக் கத்தலில் ராமசாமிக்கு அவருக்கே தெரியாத நன்மை வரும் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரது காட்டுக்கத்தலில் காது ஜவ்வு கிழிந்துபோன ராமசாமியின் முதலாளி அவரை விற்றுவிடுவதென்று முடிவுக்கு வந்திருந்தார். அந்த வாரத்தில் ஒருநாள் ராமசாமி சந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ராமசாமியின் போன ஜென்ம ஞாபகத்தின்படி இது ஆட்டுச் சந்தை என்பதை அறிந்து கொண்டார். ராமசாமிக்குத் திடீரென ஒரு பயம் வந்தது. ஒருவேளை தன்னை யாரேனும் கசாப்புக் கடைக்கு வாங்கிச் சென்றுவிட்டால் தான் வந்த லட்சியம் என்னாவது என்று கண்ணீர்வடித்தார். ராமசாமிக்கு நொடிக்கு நொடி பயமாக இருந்தது. அப்பொழுதுதான் ராமசாமியின் ஊரில் கசாப்புக்கடை வைத்திருக்கும் ஒரு வியாபாரி வந்து ராமசாமியின் விலையைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ராமசாமி முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டார். எப்படியும் தன்னை அந்த கசாப்புக்கடைக்காரன் வாங்கிச் சென்றுவிடுவான் என்று பயந்து நடுங்கினார். போன ஜென்மத்தில் திருடித் தின்ற ஆடுகள் , கோழிகள் எல்லாம் நினைவுக்கு வந்தன. இருந்தாலும் கடைசியாக ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாம் என்று பேசுவதற்காக முயற்சித்தார். இந்த முறையும் ”மேஏஏஏஏ” தான். ஒரு ”ஜூன்” கூட வரவில்லை. ராமசாமியின் கடைசி முயற்சியும் தோல்வி. ஆனால் கடவுள் அவரைக் கைவிடவில்லை. கசாப்புக்கடைக்காரன் விலை படியாமல் போய்விட்டான். பெருமூச்சு விட்டுக்கொண்டார் ராமசாமி. அப்போது அவருக்கு இன்னொரு ஆச்சர்யம் நடந்தது. ராமசாமியின் போன ஜென்மத்து மகன் அங்கே வந்துகொண்டிருந்தான். சொல்லிவைத்தாற்போல அவரசர அவசரமாக ராமசாமியை விலைக்கு வாங்கிக்கொண்டு அவரின் புது ஓனராகிக்கொண்டான்.

ராமசாமிக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் தனது மகனைப் பாசத்துடன் தழுவிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போகவே அவனது கால்களை லேசாக நக்கினார். ஆட்டின் வடிவில் இருப்பது தன் தந்தை என்று அறியும் ஆர்வமில்லாத அந்த முட்டாள் மகன் அவரை கயிற்றில் கட்டி இழுத்துச் செல்ல ஆரம்பித்தான்.என்னதான் ஆடென்றாலும் தன்னைத் தன் மகனே கயிற்றில் கட்டி இழுத்துச் செல்வதை நினைத்து வெட்கப்பட்டார் ராமசாமி. அதை விட வேறென்ன செய்யமுடியும் அவரால் ? இருந்தாலும் வீட்டிற்குச் சென்றதும் எப்பாடு பட்டேனும் புதையல் இருக்கும் இடத்தைக் காட்டிவிட வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டார்.

ராமசாமியைக் கூட்டிக்கொண்டு நேராக புதையல் இருக்கும் இடத்திற்குச் சென்றார் அவரது மகன். ராமசாமிக்கு ஆச்சர்யம். எப்படி நாம் நினைப்பது போலவே இவன் நடந்துகொள்கிறான்.? ஒரு வேளை நாம் மறுபிறவி என்பதை இவன் அறிந்துகொண்டானோ என நினைத்து மறுபடியும் அவனது காலை நக்கினார். இந்த முறை ஒங்கி அறைந்து விட்டான் அவரது மகன். ராமசாமிக்கு மறுபடியும் குழப்பம். சரி ஆனது ஆகட்டும் என நினைத்துக் கொண்டு அவனது பின்னே ஆடாகவே சென்றுகொண்டிருந்தார் ராமசாமி.

புதையில் இருக்கும் இடத்தை அடைந்ததும் அங்கே சிலர் குழி தோண்டிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் ராமசாமிக்கு அதிர்ச்சி. எப்படி தனக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியம் இவர்களுக்குத் தெரிந்தது? அதையெல்லாம் விடுத்து இதை எடுப்பதற்கு எதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறார்கள்? குழப்பத்தில் இருந்த ராமசாமிக்கு “ ஏன்டா ஆடு வாங்கிட்டு வரதுக்கு இவ்ளோ நேரமா ? சீக்கிரமா வெட்டி தலைய உள்ள போடுங்க. பலி குடுத்துட்டுத்தான் புதையல வெளிய எடுக்கனும்! “ என்ற அவரது மற்றொரு மகனின் குரலைக் கேட்டுப் பதறிப்போனார். உடல் தானாகவே நடுங்க ஆரம்பித்தது. இப்போது பதறி என்ன செய்வது ? ஆடாக இருந்தாலும் உயிர் பயம் இல்லாமலா இருக்கும் ? எப்படித் தப்பிப்பது என்று சிந்திப்பதற்குள் அவரது ஆட்டுருவத்தின் தலை தனியாக குழிக்குள் வீசப்பட்டது.

இந்த முறையும் ராமசாமியின் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஒன்றை மட்டும் அவர் புரிந்துகொண்டார். ஆடுகள் ஆடுகளாகவே பார்க்கப்படுகின்றன. ஆடுகள் தாத்தாக்களாகப் பார்க்கப்படுவதில்லை!