Thursday, June 19, 2014

கற்பூர வாசனை தெரிந்த கழுதை!


முன்னொரு காலத்தில் சவகர் என்ற குதிரை வியாபாரி வாழ்ந்துவந்தார். அரசன் முதல் ஆண்டி வரை இவரிடம் தான் குதிரைகள் வாங்கிவந்தனர். ஆண்டி எதற்காக குதிரைகளை வாங்குகிறார் என்று நாம் இப்பொழுது ஆராய வேண்டாம். அது நம் கதைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்று. உலகத் தரமான குதிரைகள் இவரிடம் கிடைக்கும் என்பது நமீதா வந்து சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரிந்தது.

சவகர் எப்போதும் சற்று வித்தியாசமாக எதையாவது யோசிக்கும் குணமுடையவர். குதிரை வியாபாரம் மட்டும் செய்துவந்த சவகருக்கு திடீரென ஒருநாள் கழுதை வியாபாரம் செய்யலாம் என்று தோன்றிற்று. அசரீரியெல்லாம் வந்து சொல்லவில்லை. தானாகவே தோன்றியது. கழுதை வியாபாரம் ஒன்றும் குதிரை வியாபாரத்தைப் போல எளிமையானதல்ல. நாட்டில் பாதி பேருக்கு கழுதை என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. இருந்தாலும் தன் மனதில் ஒரு யோசனை தோன்றிவிட்டால் அவரே அவர் பேச்சைக் கேட்கமாட்டார்.அதனால் எப்படியேனும் கழுதை வியாபாரம் செய்தே தீருவதென முடிவெடுத்தார்.

கழுதை வியாபாரத்தை குதிரைகளை வைத்துச் செய்யமுடியாது. அது என்ன தோசை மாவா ? தோசைக்கு என்று மாவரைத்துவிட்டு இட்லி சுடுவதற்கு ? அதனால் கழுதைகளை வாங்கித்தான் கழுதை வியாபாரம் செய்யமுடியும் என்று நான் சொல்லாமலே அவருக்குத் தெரிந்திருந்தது.உடனேயே கழுதை வாங்குவதற்காகப் புறப்பட்டுவிட்டார். ஊர் ஊராகச் கழுதைகள் எங்கு கிடைக்கும், எப்படிப்பட்ட கழுதைகளை நல்ல விலைக்கு விற்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொண்டார். ஒரு ஊரில் கற்பூர வாசனை தெரிந்த அதிசயக் கழுதை ஒன்றைப் பற்றிய தகவல் கிடைத்தது.உடனடியாக அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென முடிவெடுத்து அதிக விலை கொடுத்து அந்தக் கழுதையை வாங்கிவந்தார்.

தன் வீட்டிற்கு வந்ததும் அதற்கு கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றிப்போட்டார். பெரும்பாலும் அவர் வீட்டிற்கு எதை வாங்கிவந்தாலும் இவ்வாறு செய்வது வழக்கம். ஏன் திருஷ்டி பொம்மைக்குக் கூட திருஷ்டி சுற்றிவிட்டுத்தான் வீட்டுக்குள் அனுமதிப்பார்.ஆனால் இந்தமுறை வீட்டிற்கு வந்திருப்பது கற்பூர வாசனை தெரிந்த கழுதையாயிற்றே. மிக்க சந்தோசத்துடனேயே திருஷ்டி சுற்றினார். ஆனால் அவரின் துரதிர்ஷ்டம் கற்பூரத்தைப் பற்றவைத்ததும் அந்தக் கழுதை பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. என்னதான் கற்பூர வாசனையைப் பற்றித் தெரிந்தாலும் அதை எதற்குப் பயன்படுத்துவார்கள் என்றெல்லாம் அதற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!ஓடிய கழுதையை மிகச் சிரமப்பட்டுத்தான் பிடித்துவந்தார்கள். 

அந்தக் கழுதையை வாங்கியதிலிருந்து சவகருக்கு ஒருவித செருக்கு அவன் மனதில் ஏற்பட்டது. ஊரிலேயே ஏன் உலகத்திலேயே யாரிடமும் இல்லாத அதிசயப் பொருள் தன்னிடம் உள்ளது என்று நினைத்து நினைத்துச் சந்தோசப்பட்டான். அவன் சந்தோசம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.அந்தக் கழுதைக்காக தன்னிடமிருந்த சொத்துக்களை எல்லாம் விற்று அதற்குத் தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தான். தினமும் காலையில் இட்லி வாங்கிக்கொடுத்தான். அது இட்லியைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. மதியம் பார்சல் சாப்பாடு வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. இரவில் புரோட்டா, பூரி என்று வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. ஆக மொத்தத்தில் அது காகிதத்தை மட்டுமே தின்றது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக சுவையான உணவுப் பொருட்களை எல்லாம் அது கேட்கவேயில்லை. விடுவானா சவகர் ? உடனே அதை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று “ கற்பூர வாசனை தெரிந்த கழுதை ஒன்று காகிதத்தையே தின்கிறது, அதனைக் காகிதம் தின்னாதவாறு மருந்தொன்று கொடுங்கள்” என்று கேட்டான். மருத்துவருக்கு ஆச்சர்யம்; தனது இருபத்தைந்து கால மருத்துவச் சேவையில் இப்படியொரு கழுதையைப் பார்த்ததேயில்லையே என்றவாரு அதைப் பார்க்கச் சென்றார். உண்மையில் அது கழுதையைப் போலவே இருந்தது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக அதற்குக் கொம்பெல்லாம் முளைத்திருக்கவில்லை.

பேப்பர் தின்னாமல் இருப்பதற்காக ஒரு பேப்பரை எடுத்து சில மருந்துகளின் பெயரை எழுதினார். ஆனால் மருத்துவரின் கையிலிருந்த குறிப்பேட்டினைப் பிடுங்கி ஒரு முழுங்காக முழுங்கிவிட்டது கழுதை. மருத்துவர் இஞ்சி தின்ன குரங்கைப் போல முழித்துக்கொண்டிருந்தார். அதென்ன இஞ்சி தின்ன குரங்கு? குரங்குகளைப் பற்றி கழுதைக் கதையில் சொல்லவேண்டாமென்பதால் வேறொரு கதையில் பின்னர் சொல்கிறேன். முதலில் நாம் இந்தக் கதையை முடிப்போம். டாக்டரின் குறிப்பேட்டை முழுங்கியதும் டாக்டருக்கு கடுங்கோபம் ஏற்பட்டது.சவகருக்கும் கடுங்கோபம் ஏற்பட்டது. ஆனால் சவருக்கு டாக்டர் மேல்தான் கோபம் ஏற்பட்டது. ”பேப்பர் தின்பதை நிறுத்துவதற்காக இவரிடம் கூட்டிவந்தால் இவரே பேப்பரைத் தருகிறாரே ?” என்று நினைத்துக்கொண்டு “ நீயெல்லாம் என்னையா பேப்பர் விக்குற ? “ என்று கேட்கவேண்டும் போல இருந்தது. மன்னிக்கவும், பேப்பர் பேப்பர் என்று எழுதி எனக்கே அப்படிக் கேக்கவேண்டும் போலத்தான் உள்ளது. அவன் மட்டும் எம்மாத்திரம் ?

இவர்கள் இப்படிக் கோபப்பட்டுக்கொண்டிருந்த போது கழுதை மறுபடியும் பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. ஆனால் இந்த முறை அது யார் கையிலும் சிக்கவில்லை. ஒருவேளை கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்ற பெருமை அதற்கும் வந்துவிட்டதோ என்னவோ ? சவகர் இத்தனை நாட்களாகக் காட்டிய கருணையை சிறிதும் மதிக்காமல் சென்றுவிட்டது இந்த எருமை. கழுதையைக் கழுதை என்று எப்படித் திட்டுவது? அதனால்தான் எருமை என்று திட்டுகிறேன்.

இப்படிப் பிடுங்கிக்கொண்டு ஓடிய கழுதை ஒரு அழகான காட்டில் நுழைந்தது. அதென்ன அழகான காடு, அசிங்கமான காடு ? காடுகளுக்கிடையில் அழகிப்போட்டியா நடக்கிறது ? சரி விடுங்கள், இதிகாச காலத்திலிருந்து இதையே எழுதிப்பழகிவிட்டோம்.

அப்படி அழகான காட்டுக்குள் நுழைந்த நமது நாயகனான கற்பூர வாசனை தெரிந்த கழுதை ( வெறும் கழுதை என்று எழுதினால் எங்கே மறந்துவிடுவோமோ என்பதற்காக ஒவ்வொருமுறையும் கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்றே எழுதித் தொலைக்கவேண்டியுள்ளது ) முதலில் அங்கிருந்த ஒரு ஆட்டிடம் சென்று தான் அதிசயமான விலங்கு என்றும் தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்றும் கூறிக்கொண்டது. ஆனால் ஆடோ கழுதையை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்த சில நுனிப்புல்லை மட்டும் ”வரக் வரக் “ என்று கடித்துக்கொண்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்விட்டது. ஒருவேளை ஆட்டிற்கு காதில் ஏதேனும் கோளாறோ என்னவோ ?

ஆட்டின் இந்தச் செயலால் மனம் நொந்த கழுதை அடுத்து மானிடம் சென்று தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்று கூறிக்கொண்டது. மானிற்கும் கற்பூரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. இங்கேயும் அசிங்கப்பட்டது கழுதை. அடுத்து யானையிடம். அதற்கும் தெரியவில்லை.

இறுதியாகச் சிங்கத்திடம் சென்று தனக்கு கற்பூர வாசனை தெரியும் என்றும் எனவே தான் ஒரு அற்புத விலங்கென்றும் தான் தான் இனிமேல் இந்தக் காட்டிற்கே ராஜா என்றும் கூறியது. சிறிது நேரம் உட்கார்ந்து யோசித்தது சிங்கம். உண்மையில் அதற்கு ராஜா என்பதின் அர்த்தமே தெரியாது. சில நாட்கள் மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்ததால் கழுதைக்கு மட்டும் ராஜா என்பதின் அர்த்தம் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் காட்டின் ராஜா சிங்கம் என்பதால்தான் சில மனிதர்கள் தங்களை “நான் சிங்கம்டா” என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்று அதற்கு ஞாபகத்தில் வந்தது. எனவே தான் காட்டிற்கு ராஜாவாகிவிட்டால் அதே மனிதர்கள் “ நான் கழுதைடா” என்று சொல்லிக்கொள்வார்களல்லவா ? அதற்காகத்தான் இத்தனை போராட்டங்கள்!

சிங்கம் யோசித்து முடித்ததும் தனக்கு இந்தக் காட்டை ஆளும் பாக்கியம் கிடைக்கும் என்றும், ரஜினியே கூட “ பன்னிங்கதான் கூட்டமா வரும் , கழுதை கண்ணமூடிட்டுத்தான் வரும் “ என்று பஞ்ச் வசனம் பேசுவார் என்றும் நினைத்து நினைத்துப் புல்லரித்தது, பேப்பர் அரித்தது. ஆனால் நடந்தததோ வேறு. உண்மையில் சிங்கம் இதுவரையில் யோசிக்கவெல்லாம் இல்லை. அது தூங்கிக்கொண்டிருந்து. அதுமட்டுமல்லாமல் இரண்டு நாட்களாக எந்த இரையும் கிடைக்காமல் கோபத்தில் இருந்தது. கண் விழித்துப்பார்த்தால் எதிரில் கழுதை. அது கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்று அதற்கு எப்படித்தெரியும்? பாவம்! சடாரென ஓங்கி ஒரு அடி அடித்துக் கழுதையைக் கீழே தள்ளியது. கண்களில் பொறிதட்டக் கீழே விழுந்த கழுதைக்கு ஒன்று மட்டும் புரிந்தது. கழுதைக்கு மட்டுமல்ல வேறு எந்த விலங்கிற்கும் கற்பூர வாசனை தெரியாதென்பது!