Friday, November 11, 2011

ங்கொய்யால - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை

அறிமுகம் :

  ”ங்கொய்யால“ இந்த வார்த்தையைக் கேட்டிறாத, அறிந்திறாத மக்கள் தமிழ்நாட்டில் இருந்தால் அவர்கள் இறந்துபோன அல்லது இன்னும் பிறக்காதவர்களாகத்தான் இருக்கவேண்டும். அவ்வளவு பிரசித்திபெற்ற வார்த்தையாக வலம்வருகிறது இந்த வார்த்தை. சிறியவர் முதல் பெரியவர் வரை, குழந்தைகள் முதல் கிழவர் வரை, ஆசிரியர் முதல் மாணவர் வரை,  ஆண் பெண் என்கிற பால் வேறுபாடுகள் இன்றி அனைவராலும் பேசப்பட்டு வருவதே இவ்வார்த்தையின் புகழுக்குச் சான்றாகும். சில வார்த்தைகளை துன்பத்தில்தான் பயன்படுத்த முடியும். கோபத்தை வெளிப்படுத்தச் சில வார்த்தைகள் உள்ளன. ஆனால் இன்பம், துன்பம், கோபம், பயம்,வெட்கம்,  இப்படி எல்லா நேரங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரே வார்த்தை ‘ங்கொய்யால’ என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட தெய்வீக வார்த்தையின் வரலாற்றைப் பற்றி எதிர்வரும் சந்ததிகளுக்குச் சொல்லிக்கொடுக்காமல் போய்விட்டால் கடவுள் நம்மை மன்னிக்கமாட்டார். எனவேதான் மிகச் சிரமப்பட்டு , பொருட்செலவுகளைத் துச்சமெனக் கருதியதால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகியிருப்பினும், இந்த ஆய்வுக்கட்டுரையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

தோற்றம்

  சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்னும் கொஞ்சம் தெளிவாகக் குழப்புவதானால் நாட்டாமை என்கிற தமிழ்ப்படம் வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘ங்கொக்கமக்கா’ என்றொரு கிராமத்தில்தான் இந்த வார்த்தை பிறந்திருக்க வேண்டுமென வரலாறுகள் நமக்குச் சுட்டுகின்றன. அதற்கான அனேக ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இந்தத் தகவலை அறிந்ததும் நாம் எமது ஆய்வுக்குழுவினருடன் ‘ங்கொக்கமக்கா’ கிராமத்திற்கு விரைந்தோம். முதலில் இந்த வார்த்தை எந்த அர்த்ததில் சொல்லப்பட்டது என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

’ங்கொக்கமக்கா’ என்கிற இந்தக் கிராமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமானால் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரையிலெல்லாம் போக வேண்டியதில்லை. அப்படி போகவேண்டுமென்றாலும் நாம் இன்னும் கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்கவில்லை. எனவே வேறுவழியில்லாம் அதன் பரிணாம வளர்ச்சியல் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் நாட்டாமை படத்தைப் பற்றி மட்டும் தெரிந்துகொள்வோம். ஏற்கெனவே எனக்கு நாட்டாமை படம் பற்றித் தெரியும் என்றால் இந்த இரண்டு வரிகளையும் படிக்காமல் விட்டுவிடுங்கள். இங்கே SKIP என்ற பட்டனையெல்லாம் என்னால் தரமுடியாது. உண்மையில் நாட்டாமை படம் அந்தக் கிராமத்தின் வளர்ச்சியில் மிகமுக்கியப் பங்காற்றியிருக்கிறது. நாட்டாமை படத்திற்கு முன் , நாட்டாமை படத்திற்குப் பின் என்று அவ்வூரின் வளர்ச்சியைப் பிரித்தறியமுடிகிறது. நாட்டாமை படம் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு அமைதியின் உருவமாக இருந்த அக்கிராமத்தில் நாட்டாமை என்கிற பதவிக்குப் போட்டிகள் எழுந்துள்ளன. நாட்டாமைப் பதவியின் அருமை , பெருமைகளைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்டிய நாட்டாமை என்னும் திரைக்காவியம் தமிழர்கள் ஓயாது பயன்படுத்தும்படியான ஒரு சொல்லையும் ஏற்படுத்தித் தந்திருப்பது பெருமைப்பட வேண்டிய விசயமாகும்.

அதுவரையில் நாட்டாமையாக இருந்த ‘சண்முகம்’ திடீரென இறந்துபோய்விட அவரின் இருமகன்களுக்குமிடையே பதவியாசை கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்தது. அந்தக் கொழுந்து நன்றாக வளர்ந்ததோ இல்லையோ, ஆனால் அவர்களின் பையன்களுக்கிடையேயும் சண்டை நடக்க ஆரம்பித்தது. அதாவது சண்முகத்தின் பேரன்களுக்கிடையிலும் சண்டை நடந்ததென்று ஔவையாரின் பாடல் ஒன்றின் மூலமாக அறிகிறோம். 

சண்முகத்தின் முதல் மகனின் மகனும், இரண்டாவது மகனின் மகனும் ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் தமிழ்நாட்டையே கட்டிப்போட்டிருக்கிற இந்தச் சொல்லின் பிறப்பு நிகழ்ந்தது என்று அமெரிக்காவில் வெளியாகும் ஒரு ஆங்கில நாளேடு கட்டுரை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

பெரிய மகனின் மகனான சின்னச்சாமி , சிறிய மகனின் மகனான பெரியசாமியிடம் “ டேய் , எங்க அய்யாதான் ( அப்பா என்பதை அய்யா என்று அழைப்பர் ) முதல் பையன், அதனால அவருக்குத்தான் நாட்டாமை பதவி கிடைக்கும்! “ என்று தனது கருத்தினை எடுத்தியம்பியிருக்கிறான்.

”ங்கொய்யா ஆள எங்கைய்யா பார்த்துட்டு இருப்பாரா ?“ என்று பதிலுக்குச் சண்டையிழுக்க அது பெரிய சண்டையாகி பின் அந்த ஊரின் அழிவுக்குக் காரணமானதென்று சில கல்வெட்டுக்கள் நமக்கு அறிவிக்கின்றன. இந்த இடத்தில்தான் நண்பர்களே தமிழர்களின் இதயத்துடிப்பான சொல் பிறந்திருக்கிறது. ஆம் “ ங்கொய்யா ஆள “ என்ற சொல்லை வேக வேகமாகச் சொல்லிப்பாருங்கள். இதோ வந்துவிட்டதே நமது “ங்கொய்யால!” இப்படியாகத்தான் இந்தச் சொல் பிறந்திருக்கிறது. ஆறுச்சாமி வேண்டுமானால் பிறப்பதற்கு முன்னால் ஐந்து பேரைக் கொன்றுவிட்டு ஆறாவதாகப் பிறந்து, பீரில் முகம் கழுவி, திருநெல்வேலியின் பிச்சைப் பெருமாளைக் கொன்றிருக்கலாம். ஆனால் பிறக்கும்போதே ஒரு ஊரினையே அழித்துக்கொண்டு பிறந்த பெருமை ‘ங்கொய்யால’வையே சாரும் என்று ஜேம்ஸ் கேமரூன் ‘ அவதார்’ படத்தின் மூலம் அடித்துச் சொல்லுகிறார். 


இக்கட்டுரையின் சிறப்புகள்

  ’ங்கொய்யால' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைப் பற்றி உலக மொழிகளில் முதன் முதலாக வந்தது இந்தக் கட்டுரையே. அது மட்டுமல்லாமல் இக்கட்டுரை உலக மொழிகளான “ ஜெர்மன், லத்தீன், பிரஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம்,உருது, கிரேக்கம், கொரிய மொழி மற்றும் இன்னும் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் யாராலும் முழுமையாகத் தமிழில் இருந்து பெயர்த்தெடுக்க முடியவில்லை. இதைவிட வேடிக்கை என்னவென்றால் இந்தக் கட்டுரை இப்பொழுதுதான் தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதன் முழிபெயர்ப்புகள் ஏற்கெனவே வந்துவிட்டது ஆச்சர்யமூட்டுவதாகவும் நம் அனைவருக்கும் ஒருவித நம்பிக்கை ஊட்டுவதாகவும் , சோறூட்டுவதாகவும் , மட்டன், சிக்கன் ஊட்டுவதாகவும் அமைந்துள்ளது.

முப்பரிமாணத் தன்மை

  ’ங்கொய்யால’ என்ற வார்த்தை முப்பரிமாணத்தை உடையது. ஆம்! இதனை ஒருசிலர் ‘ங்கொய்யால’ என்றும் , வேறுசிலர் ‘ங்ஙொய்யால என்றும் இன்னும் சிலர் ’கொய்யால’ என்றும் உச்சரிக்கின்றனர். ஒரே சொல்லின் இத்தகைய முப்பரிமாணத் தோற்றம் அறிவியல் அறிஞர்களிடையே பெரும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது தமிழின் புகழுக்கு ஓர் சான்றாகும். ’ங்கொய்யால’ என்கிற ஒரு வார்த்தையால் உலக விஞ்ஞானிகளில் பலரும் தமிழ் மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டுவர் என்று காக்கைப் பாடினியாரும், எரிபத்த நாயனாரும் தமது பாடல்களில் அன்றே சொன்னது இப்பொழுது மெய்யாகிக்கொண்டிருக்கிறது.


நமது கடமை

  'ங்கொய்யால’ என்ற வார்த்தை தமிழ் மொழிக்கே உரித்தான ஒன்றாகும். இதன் அருமை பெருமைகளையும், இதன் வரலாற்றைப் பற்றியும் எதிர்வரும் சந்ததிகளுக்குச் சொல்லித்தரவேண்டியது நமது கடமையாகிறது. அதற்காகவே இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை பிரிண்ட் எடுத்து வீட்டில் ப்ரேம் பண்ணி வைத்துக்கொள்வது, துண்டுச் சீட்டுகளில் அச்சடித்து வெளியிடுவது,செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் வெளியிடச் செய்வது, இணையத்தில் வெளியிடுவது , புத்தகங்களின் மூலம் விளம்பரப்படுத்துவது , புறாவின் காலில் கட்டிவிட்டு வேறு நாடுகளுக்குத் தூதனுப்புவது போன்றவற்றின் மூலம் ‘ங்கொய்யால’வை நாம் தலைமுறை தாண்டியும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

முடிவுரை 

  இக்கட்டுரையின் மூலம் தமிழில் ஆயிரமாயிரம் சொற்கள் இருந்தாலும் ‘ங்கொய்யால’ என்கிற இச்சொல்லைப் பயன்படுத்தாதவர் தமிழராகவோ, இந்தியராகவோ,ஆசியக்கண்டத்தைச் சேர்ந்தவராகவோ, பூமியைச் சேர்ந்தவராகவோ ஏன் மனிதராகக் கூடக் கருதப்படமாட்டார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. எனவே இந்தக் கட்டுரையை சமச்சீர் கல்வியில் சேர்ப்பதன் மூலமும், கல்லூரியில் பாடத்திட்டமாக அமல்படுத்துவதன் மூலமும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாமென்றும் கூறிக்கொள்கிறேன். மேலும் ’ங்கொய்யால’ பற்றி ஆய்வுசெய்யும் ஆய்வு மாணவர்களுக்கு இக்கட்டுரை பலவிதத்தில் உதவிபுரியும் என்பதும் திண்ணம்.