Sunday, July 19, 2015

சிங்கங்கள் கொல்லும்

#CFS -2

உலக வாழ்க்கையை வெறுத்துப் போன இளம் உயிரியல் விஞ்ஞானி மனிதர்களே இல்லாத ஒரு தீவில் குடிபுகுந்தார். உலக வாழ்க்கைதான் வெறுத்துப்போனதே தவிரவும் உயிரைத் துறக்க அவர் விரும்பவில்லை.

காடுகளில் சுற்றித் திரிந்த அவருக்கு ஒரு நாள் அசரீரியின் குரல் கேட்டது. அதன்படி அவரது இறப்பிற்குச் சிங்கங்கள்தான் காரணமாக இருக்குமென்று தெரிந்துகொண்டார். ஆனால் அதனைப் பெரிதாக மதிக்கவில்லை.

அந்தக் காட்டிற்குள் வந்து வருடக்கணக்கில் ஆகியிருந்தாலும் இதுவரையிலும் ஒரு சிங்கத்தைக் கூடப் பார்த்ததில்லை. ஆனால் அசரீரி ஒலித்த அடுத்தநாளே சிங்கக் கூட்டம் ஒன்றினைக் காண நேர்ந்தது. பின்னர் பயமும், அதலிருந்து தப்பிப்பதற்கான யோசனைகளும் உருவாகத் தொடங்கின.

உயிரியல் விஞ்ஞானியென்பதால் சிற்சில மூலிகைகளைக் கொண்டு ஒரு மருந்தினைத் தயாரித்தார். பெருமளவில் தீயினை வளர்த்து, இந்த மருந்தினை அந்தத் தீயில் இட்டுப் புகைப்பதன் மூலம் சிங்கங்களைச் சைவமாக மாற்றிவிடக் கூடிய மருந்து அது. அவ்வாறே செய்தார்.

டெஸ்டோஸ்டிரோனை உறிஞ்சி எடுத்துவிட்டு, ஈஸ்ட்ரோஜென்னை அதிகளவில் சுரக்கச் செய்தால் மேக்கப் ரூமில் முக்கால் மணி இருக்க விரும்புவதும், அதனையே வைஸ் வெர்சாவாகச் செய்தால் Educational Content, God Songs என்ற போல்டர்களை உருவாக்கி Hidden செய்து வைக்க நினைப்பதும் இயல்பானதுதானே? அதைத்தான் சிங்கங்களும் செய்தன.

அந்த மருந்தின் புகை தீவு முழுவதும் பரவி அங்கிருந்த அனைத்துச் சிங்கங்களையும் சுத்த சன்மார்க்க சைவ ஜீவகாருண்ய உயர்தர சைவமாக மாற்றிவிட்டது. எல்லாச் சிங்கங்களும் இலை, தழைகளையும், செடி, கொடிகளையுமே உணவாக உண்ண ஆரம்பித்தன. 

இந்த மாற்றத்தினை விஞ்ஞானி எதிர்பார்த்திருந்தார் என்பதால் பெரிதாக ஆச்சர்யப்படாமல் அந்த அசரீரிக் குரலை நினைத்துச் சற்று ஏளனமாக எண்ணிக் கொண்டிருந்தார்.

ஒரு வாரம் கடந்திருக்கும். எல்லாச் சிங்கங்களும் வேக வேகமாகப் புல்லினை உண்ண ஆரம்பித்தன. சாதாரண சைவப் பட்சிணிகள் தின்பதை விடவும் பல மடங்கு வேகத்தில் புற்களையும், மரம், செடி கொடிகளையும் தின்ன ஆரம்பித்தன. ஒரே மாதத்தில் மொத்தத் தீவிலுமே புல் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போனது. புல் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போனதற்குக் காரணம் சிங்கங்களுக்குப் பேசத் தெரியாது என்று நீங்கள் நினைப்பீர்களானால் கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு கை தட்டிக் கொள்ளுங்கள். லைட்டாக ஏதோ ஒரு மூலையில் ஒரு புல் ( ஃ போடவில்லை) தென்பட்டாலும் உடனே பத்துச் சிங்கங்கள் ஓடிப்போய் அதனை லபக்கென்று தின்று வெவ்வெவ்வே என்று கோணைவாய் காட்டின. நாளாக நாளாக எல்லாச் சிங்கங்களுக்கும் பசி கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது.

தீவிலிருந்த பழ மரங்களையும், தான் தனியே ஆற்றோரமாக உருவாக்கியிருந்த தோட்டத்தையும் மட்டுமே நம்பி வாழ்ந்துவந்த விஞ்ஞானிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிங்கங்களை மீண்டும் பழையபடியே மாற்றிவிடலாம் என்று நினைத்தாலும் அதற்கான மூலிகை கிடையாது. 

வேறு ஏதேனும் யோசனை செய்யலாம்தான். ஒரு நாள் முழுவதும் பட்டினியால் கிடந்துவிட்டு அடுத்த நாளில் இரண்டையும் இரண்டையும் பெருக்கினால் என்ன வருமென்று கேட்டால் நீங்கள் இட்லியோ, தோசையோ வருமென்றுதானே சொல்வீர்கள்? அப்படியிருக்கையில் அவரால் மட்டும் எப்படிப் புதுப்புது யோசனைகளைச் செய்யமுடியும்?

தொடர் பட்டினியால் பசியாலேயே இறந்துவிட்டார். அவர் உடலிலிருந்து பிரிந்து ஆவி வானுலகம் நோக்கிச் செல்கையில் தற்செயலாகத் தான் வாழ்ந்த தீவினைப் பார்க்க நேரிட்டது. எல்லாச் சிங்கங்களும் HENCE PROVED என்ற வார்த்தைகள் உருவாகும் வண்ணம் அணிவகுத்து நின்று கொண்டிருந்தன.

Friday, July 10, 2015

ஆட்டுக்கல்!

தன்னை எப்பொழுதுமே அறிவாளி என்றுதான் நினைத்துவந்துள்ளான். சிற்சில ஞாபகமறதிகளைக் கலைந்திருந்தால் நிச்சயம் பெரிய அறிவாளியாகியிருக்க வேண்டியவன்தான். ஒருநாள் அவனது அம்மா அவனிடம் அரிசி வாங்கிவரச் சொல்லியிருந்தார். இவன் கோதுமை வாங்கிவந்திருந்தான்.

“அரிசி வாங்கிட்டு வரச்சொன்னா கோதுமை வாங்கிட்டு வந்திருக்கிற? உன்னையைப் பெத்ததுக்கு ஒரு ஆட்டுக்கல்லைப் பெத்திருந்தா மாவாச்சும் ஆட்டியிருக்கலாம்!” இன்னும் சிற்சில வசைகள்.

அடுத்த நாள் காலையில், படித்துக்கொண்டிருக்கும் நீங்களும், எழுதிய நானும், அவரது தாயும் ஆச்சர்யப்படும் வகையில் அந்தப் பையன் ஆட்டுக்கல்லாக மாறியிருந்தான். நமக்கு இது சாதாரணச் செய்திதானென்றாலும் அவனது அம்மாவிற்குப் பெருந்துயரமான ஒரு நாளாக அமைந்துவிட்டது. அழுகைகள், கதறல்கள், புலம்பல்களாக மேலும் சில மாதங்கள் கடந்து சென்றன.

ஆட்டுக்கல்லாக மாறியிருந்த அவரது மகன் என்றாவது ஒருநாள் மீண்டும் மனிதனாக உயிர்ப்பெறுவான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்துவந்தார் அந்த அம்மா. ஆனால் ஆட்டுக்கல் ஆட்டுக்கல்லாகவே இருந்தது. மகனாக உயிர்த்தெழவுமில்லை, அம்மா என்று அழைக்கவுமில்லை. உங்கள் வாழ்வில் இப்படியொரு நிகழ்வு நடந்தால் அதிலிருந்து மீள என்னவெல்லாம் செய்வீர்களோ அதையெல்லாம் அந்தத் தாயும் செய்தார். எதுவும் தேறவில்லை.

இறுதியாக, ஆட்டுக்கல்லை எதற்கும் பயன்படுத்தாமல் மூடி வைத்திருப்பதற்குப் பதிலாக மாவாட்டிப் பார்க்கலாம் என்று ஒரு யோசனை தோன்றியது. அதனைச் செயல்படுத்தவும் முடிவு செய்து அரிசியினை ஊறவைத்தார். ஆனாலும் பயம் அவரை விட்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை மாவாட்டுவதால் ஆட்டுக்கல் வடிவில் இருக்கும் தன் மகனுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிட்டால்? அல்லது கை, கால்களில் ஏதேனும் ஊனம் ஏற்பட்டுவிட்டால்? இப்படி எத்தனையோ விட்டால்களைக் கடந்து இறுதியில் தனது யோசனையினைச் செயல்படுத்தினார்.

ஆட்டுக்கல்லாய் மாறியிருந்த தன் மகனின் மீது அரிசியினைப் போட்டு மாவாட்ட ஆரம்பித்தார். சிறுது நேரத்தில் அந்த ஆட்டுக்கல்லில் இருந்து கோதுமை மாவு வந்தது.

( CFS - Childish Fantasy Series)