Friday, July 10, 2015

ஆட்டுக்கல்!

தன்னை எப்பொழுதுமே அறிவாளி என்றுதான் நினைத்துவந்துள்ளான். சிற்சில ஞாபகமறதிகளைக் கலைந்திருந்தால் நிச்சயம் பெரிய அறிவாளியாகியிருக்க வேண்டியவன்தான். ஒருநாள் அவனது அம்மா அவனிடம் அரிசி வாங்கிவரச் சொல்லியிருந்தார். இவன் கோதுமை வாங்கிவந்திருந்தான்.

“அரிசி வாங்கிட்டு வரச்சொன்னா கோதுமை வாங்கிட்டு வந்திருக்கிற? உன்னையைப் பெத்ததுக்கு ஒரு ஆட்டுக்கல்லைப் பெத்திருந்தா மாவாச்சும் ஆட்டியிருக்கலாம்!” இன்னும் சிற்சில வசைகள்.

அடுத்த நாள் காலையில், படித்துக்கொண்டிருக்கும் நீங்களும், எழுதிய நானும், அவரது தாயும் ஆச்சர்யப்படும் வகையில் அந்தப் பையன் ஆட்டுக்கல்லாக மாறியிருந்தான். நமக்கு இது சாதாரணச் செய்திதானென்றாலும் அவனது அம்மாவிற்குப் பெருந்துயரமான ஒரு நாளாக அமைந்துவிட்டது. அழுகைகள், கதறல்கள், புலம்பல்களாக மேலும் சில மாதங்கள் கடந்து சென்றன.

ஆட்டுக்கல்லாக மாறியிருந்த அவரது மகன் என்றாவது ஒருநாள் மீண்டும் மனிதனாக உயிர்ப்பெறுவான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்துவந்தார் அந்த அம்மா. ஆனால் ஆட்டுக்கல் ஆட்டுக்கல்லாகவே இருந்தது. மகனாக உயிர்த்தெழவுமில்லை, அம்மா என்று அழைக்கவுமில்லை. உங்கள் வாழ்வில் இப்படியொரு நிகழ்வு நடந்தால் அதிலிருந்து மீள என்னவெல்லாம் செய்வீர்களோ அதையெல்லாம் அந்தத் தாயும் செய்தார். எதுவும் தேறவில்லை.

இறுதியாக, ஆட்டுக்கல்லை எதற்கும் பயன்படுத்தாமல் மூடி வைத்திருப்பதற்குப் பதிலாக மாவாட்டிப் பார்க்கலாம் என்று ஒரு யோசனை தோன்றியது. அதனைச் செயல்படுத்தவும் முடிவு செய்து அரிசியினை ஊறவைத்தார். ஆனாலும் பயம் அவரை விட்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை மாவாட்டுவதால் ஆட்டுக்கல் வடிவில் இருக்கும் தன் மகனுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிட்டால்? அல்லது கை, கால்களில் ஏதேனும் ஊனம் ஏற்பட்டுவிட்டால்? இப்படி எத்தனையோ விட்டால்களைக் கடந்து இறுதியில் தனது யோசனையினைச் செயல்படுத்தினார்.

ஆட்டுக்கல்லாய் மாறியிருந்த தன் மகனின் மீது அரிசியினைப் போட்டு மாவாட்ட ஆரம்பித்தார். சிறுது நேரத்தில் அந்த ஆட்டுக்கல்லில் இருந்து கோதுமை மாவு வந்தது.

( CFS - Childish Fantasy Series)

No comments: