Thursday, June 19, 2014

கற்பூர வாசனை தெரிந்த கழுதை!


முன்னொரு காலத்தில் சவகர் என்ற குதிரை வியாபாரி வாழ்ந்துவந்தார். அரசன் முதல் ஆண்டி வரை இவரிடம் தான் குதிரைகள் வாங்கிவந்தனர். ஆண்டி எதற்காக குதிரைகளை வாங்குகிறார் என்று நாம் இப்பொழுது ஆராய வேண்டாம். அது நம் கதைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்று. உலகத் தரமான குதிரைகள் இவரிடம் கிடைக்கும் என்பது நமீதா வந்து சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரிந்தது.

சவகர் எப்போதும் சற்று வித்தியாசமாக எதையாவது யோசிக்கும் குணமுடையவர். குதிரை வியாபாரம் மட்டும் செய்துவந்த சவகருக்கு திடீரென ஒருநாள் கழுதை வியாபாரம் செய்யலாம் என்று தோன்றிற்று. அசரீரியெல்லாம் வந்து சொல்லவில்லை. தானாகவே தோன்றியது. கழுதை வியாபாரம் ஒன்றும் குதிரை வியாபாரத்தைப் போல எளிமையானதல்ல. நாட்டில் பாதி பேருக்கு கழுதை என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. இருந்தாலும் தன் மனதில் ஒரு யோசனை தோன்றிவிட்டால் அவரே அவர் பேச்சைக் கேட்கமாட்டார்.அதனால் எப்படியேனும் கழுதை வியாபாரம் செய்தே தீருவதென முடிவெடுத்தார்.

கழுதை வியாபாரத்தை குதிரைகளை வைத்துச் செய்யமுடியாது. அது என்ன தோசை மாவா ? தோசைக்கு என்று மாவரைத்துவிட்டு இட்லி சுடுவதற்கு ? அதனால் கழுதைகளை வாங்கித்தான் கழுதை வியாபாரம் செய்யமுடியும் என்று நான் சொல்லாமலே அவருக்குத் தெரிந்திருந்தது.உடனேயே கழுதை வாங்குவதற்காகப் புறப்பட்டுவிட்டார். ஊர் ஊராகச் கழுதைகள் எங்கு கிடைக்கும், எப்படிப்பட்ட கழுதைகளை நல்ல விலைக்கு விற்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொண்டார். ஒரு ஊரில் கற்பூர வாசனை தெரிந்த அதிசயக் கழுதை ஒன்றைப் பற்றிய தகவல் கிடைத்தது.உடனடியாக அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென முடிவெடுத்து அதிக விலை கொடுத்து அந்தக் கழுதையை வாங்கிவந்தார்.

தன் வீட்டிற்கு வந்ததும் அதற்கு கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றிப்போட்டார். பெரும்பாலும் அவர் வீட்டிற்கு எதை வாங்கிவந்தாலும் இவ்வாறு செய்வது வழக்கம். ஏன் திருஷ்டி பொம்மைக்குக் கூட திருஷ்டி சுற்றிவிட்டுத்தான் வீட்டுக்குள் அனுமதிப்பார்.ஆனால் இந்தமுறை வீட்டிற்கு வந்திருப்பது கற்பூர வாசனை தெரிந்த கழுதையாயிற்றே. மிக்க சந்தோசத்துடனேயே திருஷ்டி சுற்றினார். ஆனால் அவரின் துரதிர்ஷ்டம் கற்பூரத்தைப் பற்றவைத்ததும் அந்தக் கழுதை பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. என்னதான் கற்பூர வாசனையைப் பற்றித் தெரிந்தாலும் அதை எதற்குப் பயன்படுத்துவார்கள் என்றெல்லாம் அதற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!ஓடிய கழுதையை மிகச் சிரமப்பட்டுத்தான் பிடித்துவந்தார்கள். 

அந்தக் கழுதையை வாங்கியதிலிருந்து சவகருக்கு ஒருவித செருக்கு அவன் மனதில் ஏற்பட்டது. ஊரிலேயே ஏன் உலகத்திலேயே யாரிடமும் இல்லாத அதிசயப் பொருள் தன்னிடம் உள்ளது என்று நினைத்து நினைத்துச் சந்தோசப்பட்டான். அவன் சந்தோசம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.அந்தக் கழுதைக்காக தன்னிடமிருந்த சொத்துக்களை எல்லாம் விற்று அதற்குத் தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தான். தினமும் காலையில் இட்லி வாங்கிக்கொடுத்தான். அது இட்லியைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. மதியம் பார்சல் சாப்பாடு வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. இரவில் புரோட்டா, பூரி என்று வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. ஆக மொத்தத்தில் அது காகிதத்தை மட்டுமே தின்றது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக சுவையான உணவுப் பொருட்களை எல்லாம் அது கேட்கவேயில்லை. விடுவானா சவகர் ? உடனே அதை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று “ கற்பூர வாசனை தெரிந்த கழுதை ஒன்று காகிதத்தையே தின்கிறது, அதனைக் காகிதம் தின்னாதவாறு மருந்தொன்று கொடுங்கள்” என்று கேட்டான். மருத்துவருக்கு ஆச்சர்யம்; தனது இருபத்தைந்து கால மருத்துவச் சேவையில் இப்படியொரு கழுதையைப் பார்த்ததேயில்லையே என்றவாரு அதைப் பார்க்கச் சென்றார். உண்மையில் அது கழுதையைப் போலவே இருந்தது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக அதற்குக் கொம்பெல்லாம் முளைத்திருக்கவில்லை.

பேப்பர் தின்னாமல் இருப்பதற்காக ஒரு பேப்பரை எடுத்து சில மருந்துகளின் பெயரை எழுதினார். ஆனால் மருத்துவரின் கையிலிருந்த குறிப்பேட்டினைப் பிடுங்கி ஒரு முழுங்காக முழுங்கிவிட்டது கழுதை. மருத்துவர் இஞ்சி தின்ன குரங்கைப் போல முழித்துக்கொண்டிருந்தார். அதென்ன இஞ்சி தின்ன குரங்கு? குரங்குகளைப் பற்றி கழுதைக் கதையில் சொல்லவேண்டாமென்பதால் வேறொரு கதையில் பின்னர் சொல்கிறேன். முதலில் நாம் இந்தக் கதையை முடிப்போம். டாக்டரின் குறிப்பேட்டை முழுங்கியதும் டாக்டருக்கு கடுங்கோபம் ஏற்பட்டது.சவகருக்கும் கடுங்கோபம் ஏற்பட்டது. ஆனால் சவருக்கு டாக்டர் மேல்தான் கோபம் ஏற்பட்டது. ”பேப்பர் தின்பதை நிறுத்துவதற்காக இவரிடம் கூட்டிவந்தால் இவரே பேப்பரைத் தருகிறாரே ?” என்று நினைத்துக்கொண்டு “ நீயெல்லாம் என்னையா பேப்பர் விக்குற ? “ என்று கேட்கவேண்டும் போல இருந்தது. மன்னிக்கவும், பேப்பர் பேப்பர் என்று எழுதி எனக்கே அப்படிக் கேக்கவேண்டும் போலத்தான் உள்ளது. அவன் மட்டும் எம்மாத்திரம் ?

இவர்கள் இப்படிக் கோபப்பட்டுக்கொண்டிருந்த போது கழுதை மறுபடியும் பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. ஆனால் இந்த முறை அது யார் கையிலும் சிக்கவில்லை. ஒருவேளை கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்ற பெருமை அதற்கும் வந்துவிட்டதோ என்னவோ ? சவகர் இத்தனை நாட்களாகக் காட்டிய கருணையை சிறிதும் மதிக்காமல் சென்றுவிட்டது இந்த எருமை. கழுதையைக் கழுதை என்று எப்படித் திட்டுவது? அதனால்தான் எருமை என்று திட்டுகிறேன்.

இப்படிப் பிடுங்கிக்கொண்டு ஓடிய கழுதை ஒரு அழகான காட்டில் நுழைந்தது. அதென்ன அழகான காடு, அசிங்கமான காடு ? காடுகளுக்கிடையில் அழகிப்போட்டியா நடக்கிறது ? சரி விடுங்கள், இதிகாச காலத்திலிருந்து இதையே எழுதிப்பழகிவிட்டோம்.

அப்படி அழகான காட்டுக்குள் நுழைந்த நமது நாயகனான கற்பூர வாசனை தெரிந்த கழுதை ( வெறும் கழுதை என்று எழுதினால் எங்கே மறந்துவிடுவோமோ என்பதற்காக ஒவ்வொருமுறையும் கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்றே எழுதித் தொலைக்கவேண்டியுள்ளது ) முதலில் அங்கிருந்த ஒரு ஆட்டிடம் சென்று தான் அதிசயமான விலங்கு என்றும் தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்றும் கூறிக்கொண்டது. ஆனால் ஆடோ கழுதையை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்த சில நுனிப்புல்லை மட்டும் ”வரக் வரக் “ என்று கடித்துக்கொண்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்விட்டது. ஒருவேளை ஆட்டிற்கு காதில் ஏதேனும் கோளாறோ என்னவோ ?

ஆட்டின் இந்தச் செயலால் மனம் நொந்த கழுதை அடுத்து மானிடம் சென்று தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்று கூறிக்கொண்டது. மானிற்கும் கற்பூரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. இங்கேயும் அசிங்கப்பட்டது கழுதை. அடுத்து யானையிடம். அதற்கும் தெரியவில்லை.

இறுதியாகச் சிங்கத்திடம் சென்று தனக்கு கற்பூர வாசனை தெரியும் என்றும் எனவே தான் ஒரு அற்புத விலங்கென்றும் தான் தான் இனிமேல் இந்தக் காட்டிற்கே ராஜா என்றும் கூறியது. சிறிது நேரம் உட்கார்ந்து யோசித்தது சிங்கம். உண்மையில் அதற்கு ராஜா என்பதின் அர்த்தமே தெரியாது. சில நாட்கள் மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்ததால் கழுதைக்கு மட்டும் ராஜா என்பதின் அர்த்தம் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் காட்டின் ராஜா சிங்கம் என்பதால்தான் சில மனிதர்கள் தங்களை “நான் சிங்கம்டா” என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்று அதற்கு ஞாபகத்தில் வந்தது. எனவே தான் காட்டிற்கு ராஜாவாகிவிட்டால் அதே மனிதர்கள் “ நான் கழுதைடா” என்று சொல்லிக்கொள்வார்களல்லவா ? அதற்காகத்தான் இத்தனை போராட்டங்கள்!

சிங்கம் யோசித்து முடித்ததும் தனக்கு இந்தக் காட்டை ஆளும் பாக்கியம் கிடைக்கும் என்றும், ரஜினியே கூட “ பன்னிங்கதான் கூட்டமா வரும் , கழுதை கண்ணமூடிட்டுத்தான் வரும் “ என்று பஞ்ச் வசனம் பேசுவார் என்றும் நினைத்து நினைத்துப் புல்லரித்தது, பேப்பர் அரித்தது. ஆனால் நடந்தததோ வேறு. உண்மையில் சிங்கம் இதுவரையில் யோசிக்கவெல்லாம் இல்லை. அது தூங்கிக்கொண்டிருந்து. அதுமட்டுமல்லாமல் இரண்டு நாட்களாக எந்த இரையும் கிடைக்காமல் கோபத்தில் இருந்தது. கண் விழித்துப்பார்த்தால் எதிரில் கழுதை. அது கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்று அதற்கு எப்படித்தெரியும்? பாவம்! சடாரென ஓங்கி ஒரு அடி அடித்துக் கழுதையைக் கீழே தள்ளியது. கண்களில் பொறிதட்டக் கீழே விழுந்த கழுதைக்கு ஒன்று மட்டும் புரிந்தது. கழுதைக்கு மட்டுமல்ல வேறு எந்த விலங்கிற்கும் கற்பூர வாசனை தெரியாதென்பது!

Wednesday, April 23, 2014

டிஜிட்டல் உயிர்!

காலை மணி பதினொன்றைத் தொட்டபோது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த குறிப்பினை, பூஜ்ஜியம் ஒன்றாக மாற்றி, ரேடியோ அலைகளின் வழியாக தரனின் காதுகளில் பொறுத்தப்பட்டிருந்த ஸ்பீக்கரில் “ உங்கள் நண்பர்களைப் பார்க்கப்போவதாகக் கூறியிருந்தீர்கள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாமா?” என்றவாரு வினவியது 23 ஆம் நூற்றாண்டின் அதிவேகக் கணினி. ஏற்கெனவே தயாராகியிருந்த தரன் தலையை மட்டும் மேலும் கீழுமாக அசைத்தான். தரனின் இந்த ஒப்புதலை சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த கேமராக் கண்களின் மூலமாகப் பெற்ற அந்தக் கணினி தனது வேலைகளை ஆரம்பித்தது.

கணினியிலிருந்து பூஜ்ஜியம் ஒன்றாகப் பெறப்பட்ட தகவலை ”தரன் தயாராகிவிட்டார்; கிளம்பி வரவும்” என்பதாகப் புரிந்துகொண்டு பார்க்கிங்கிலிருந்து கிளம்பி நேராக வாசலில் வந்து நின்றுகொண்டு தரனின் வரவுக்காகக் காத்திருந்தது நியூட்ரினோ என்று பெயரிடப்பட்ட கார்.

தரன் ஏறிக்கொண்டதும் ஏற்கெனவே கணினியிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஹோட்டல் சுஹில் இண்டர்நேசனலை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்ததுடன், தரனின் மற்ற இரண்டு நண்பர்களின் கார்கள் எங்கே வந்து கொண்டிருக்கின்றன என்பதையும், அவை எப்பொழுது ஹோட்டலை வந்தடையும் என்பதையும் தரனின் முன்பாகக் காற்றுத் திரைகளில் அடிக்கடி காட்டிக்கொண்டிருந்தது நியூட்ரினோ. இதனால் “எங்க இருக்கிற, எப்போ வருவ?” போன்ற கேள்விகளும், தொலைபேசி உரையாடல்களும் எப்பொழுதோ ஷிப்ட் டெலிட் செய்யப்பட்டிருந்தன.

தரன்,சிந்தீப்,பரத்,ஆரவ் ஆகிய நால்வரும் கடந்த 25 நாட்களுக்கும் முன்பாக சோசியல் நெட்வொர்க் ஒன்றில் அறிமுகமாகி, பழகி, நண்பர்களாகி இன்று அவர்களது முதல் சந்திப்பை ஹோட்டல் சுஹில் இண்டர்நேசனலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். 

ஆரவ் ஏற்கெனவே ஹோட்டலுக்கு வந்துவிட்டான் என்ற தகவலையும் கணினியிலிருந்து பெற்று அதையும் தரனின் முன்பாக மின்னிக் காட்டியது.

தரன் ஹோட்டலை அடையும் முன்பே மற்ற மூவரும் ஆஜராகியிருந்தனர்.

“ஹே மச்சி, வாடா வாடா. ஆரம்பிக்கலாமா? “ என்றவாரு தட்டுக்களில் பரிமாறப்பட்டுக் காத்திருந்த உணவு வகைகளைக் காட்டிக் கேட்டான் சிந்தீப்.

“ கண்டிப்பா, பேசுறதெல்லாத்தையும் தான் நாம நிறையப் பேசிட்டோமே?  என்னதான் டிஜிட்டல்ல, 3D ல பார்த்தாலும் நேர்ல பாக்குறது மாதிரி இருக்கிறதில்லைல? “

“ ஆமா மச்சி, இருந்தாலும் இதென்ன பழைய காலமா? நேர்ல வந்து பேசுறது, பழகுறது மாதிரியேயான உணர்வுகளைத்தான் இப்போ இருக்கிற டெக்னாலஜி ரொம்பச் சுலபமா செய்யுதே? இருந்தாலும் ஒரே இடத்துல உட்கார்ந்துட்டு சாப்பிடறது, அரட்டை அடிக்கிற ரியல் ஃபீலிங் வர்றதில்லை” - பரத்.

” சரி, முதல்ல சாப்பிடலாம்; சாப்பிட்டுட்டே பேசலாம், செம பசி” என்றவாரு உணவுத் தட்டுக்களை இழுத்தான் தரன்.

“ ஹே, நீங்க சாப்பிடுங்க, எனக்கு கொஞ்சம் வயிறு ஒரு மாதிரியா இருக்கு. எதுவும் சாப்பிடுற மூடுல நான் இல்ல”- ஆரவ்.

“ அடங்கொக்கா, நீ தானடா அடிக்கடி சாப்பாட்டு ஐட்டத்தையெல்லாம் போட்டோ எடுத்து அப்லோடு பண்ணிட்டிருப்ப? சொல்லபோனா நம்ம மீட் பண்ணப்போறோம்னு ரிமைண்டர் செட் பண்ணும்போதே உனக்குப் பிடிச்ச சாப்பாட்டு ஐட்டங்களையும், அத ஆர்டர் பண்ணிடட்டுமான்னும் என் கம்ப்யூட்டர் கேட்டுச்சே? “

“ அது அப்டித்தான், இருந்தாலும் இப்போ முடியாது”

“ ஒன்னு பண்ணு, மொதல்ல கொஞ்சம் தண்ணி குடி, அப்புறமா கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கலாம். நாங்க வேணா வெய்ட் பண்ணுறோம்” - தரன்.

“ இல்ல நீங்க சாப்டுங்க, என்னால கொஞ்சம் கூட சாப்பிட முடியாது”

“ நீங்க ரோபோட்டா- சாரி நீ ஒரு ரோபோட் தானே? “ - கொஞ்சம் கோபமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் பரத். பரத் இப்படிக் கேட்டதும் ஏதோ புரிந்ததாகப் பரத்தைப் பார்த்தான் தருன்.

“ ம்ம்ம்” என்றவாரு தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே இருக்கையிலிருந்து எழுந்தது ஆரவ் என்ற ரோபோட்.“சாரி கைய்ஸ்,எனக்கு ரொம்ப நாளா மனுஷங்க கூடப் பழகனும்னு ஆசை, அதான் ஒரு ஃபேக் ஐடி கிரியேட் பண்ணி மனுஷங்க மாதிரி சில விஷயங்களைச் செஞ்சுட்டு இருந்தேன். பட் நீங்க இப்படி கண்டுபிடிப்பீங்கனு நான் நினைக்கலை. எனிவே இனி என்னை உங்க கூட சேர்த்துக்க மாட்டீங்க, பை!” என்றவாரு பதிலுக்குக் காத்திருக்காமல் அங்கிருந்து அகன்றது ஆரவ்.

“அடப் பாவிங்களா இப்டியெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா? , பாவிங்களா கூட தப்பு, பாவிங்கன்னா மனுஷனைச் சொல்லுறது. பாவிக்கு அஃறிணைல என்ன வரும்?” சிரித்தவாறே சாப்பிட ஆரம்பித்தான் தருன்.

எதையெதையோ பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் மூவரும். திடீரென பரத்தைப் பார்த்த சிந்தீப் “ ஆமா, அவன் ரோபோட்னு உனக்கு எப்படித் தெரிஞ்சது? “

“ அது பார்த்தாவே தெரியுதே?”

“ எங்களுக்குல்லாம் தெரியலையே? உனக்கு மட்டும் எப்படி?”

” அப்போ நீயும்? “ - சிந்தீப்.

“ இதுக்கு மேல நானும் தாக்குப்பிடிக்க முடியாது. நானும் ரோபோட் தான். நானும் அதே காரணத்துக்காகத்தான் உங்க கூட பழகினேன். எச்சரிக்கையாத்தான் இருந்தேன். ஆனா! இட்ஸ் ஓகே. இப்போ சாப்பிட்டதெல்லாம் ஏற்கெனவே தனித்தனித் தனிமங்களா பிரிஞ்சு அது அதுக்கான பெட்டில சேர்ந்துடுச்சு. அத முதல்ல கிளியர் பண்ணனும்.பை ”

” ஆரவ் ரொம்ப பழைய ரோபோட் போல, பரத் கொஞ்சம் புதுசு. ஏன்னா ஆரவ் ஒரு ரோபோட்னு பரத் மொதல்லையே கண்டுபிடிச்சிட்டான். பட் பரத் ஒரு ரோபோட்னு ஆரவால கண்டுபிடிக்க முடியல. அதோட இப்போ வர்ற ரோபோட்டுகள் எல்லாம் அதி நவீனமா வருதுங்க. மனுசனுக்கும் அதுக்கும் வித்தியாசமே கிடையாது. இன்னொரு ரோபோட்டால நம்ம எதிர்ல இருக்கிற மனுஷனா ரோபோட்டானு கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கெல்லாம் வர்றதா சொல்லுறாங்க. இது எங்க போய் முடியுமோ? “ கவலைப் படுவதைப் போன்ற முகபாவத்துடன் கூறினான் சிந்தீப்.

“ என்ன எழவுடா இது? மனுஷங்க எல்லாரும் எங்கதான் போனாங்க?”

“ ஒருவேளை நம்ம ரண்டுபேரு மட்டும்தான் பூமில மிச்சமிருக்கிற மனுஷங்களோ? “ - சிந்தீப்.

“ க்க்கும்.” என்று முனகிக்கொண்டே மிச்சமிருந்த உணவுகளையும் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தான் தரன்.

கொஞ்சம் அரசியல், கொஞ்சம் காதல், கொஞ்சம் பிகர் கரக்ட் செய்தல் என்றவாரு மீண்டும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர் இருவரும். இவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த அறையில் சிறு சண்டை ஏற்பட்டு, எங்கிருந்தோ வந்த பீங்கான் தட்டு சிந்தீப்பின் தலையை நோக்கி வந்தது. அப்பொழுது டேபிளில் இருந்த சிந்தீப்பின் கர்சீப் கீழே விழவும், அதை எடுக்கக் குனிந்ததும் மிக இயல்பாய் இருந்தபோதும் தரனுக்கு செயற்கையாகவே தோன்றியது.

“ஒருவேளை?” குழம்பினான் தரன்.

தரனின் சந்தேகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சந்தீப்பும் தான் ஒரு ரோபோட் என்று ஒப்புக்கொண்டான்( ஒப்புக்கொண்டது).

“ நானும் ஆரவை ஒரு ரோபோட்னு முதல்லயே கண்டுபிடிச்சிட்டேன். ஏன்னா அது ரொம்ப பழைய மாடல். சுமார் 4 மாசத்துக்கு முன்னாடி தயாரிக்கப்பட்டது. அதுல எங்கள மாதிரி, ஐ மீன் என்னையும் பரத்தையும் மாதிரி மனுஷங்க சாப்பிடுற சாப்பாட்டு ஐட்டங்களை சாப்பிட்டு அதுல இருக்கிற தனிமங்களைத் தனித்தனியா பிரிச்சு சேமிச்சு அப்புறம் டிஸ்போஸ் பண்ணுற வசதி இல்லை. அப்புறம் பரத்தும் எனக்கு முந்தைய மாடல்தான். அதான் அதுவும் இவ்ளோ நேரம் தாக்குப்பிடிக்கலை. எனிவே நான் ஒரு மனுஷனைப் பார்க்கனும், பழகனும்னு நினைச்சேன். உங்கிட்ட பழகினது மூலமா எனக்கு அது கிடைச்சிடுச்சு!’

“ உன் விருப்பம் நிறைவேறிடுச்சு, ஆனா என்னால ஒரு மனுஷனைப் பார்க்க முடியலையே, எல்லாமே உயிரிள்ளாத மெஷின்களாத்தானே இருந்துட்டு இருக்கு. நான் எப்பத்தான் ஒரு மனுஷனைப் பார்க்கப்போறேன்? ச்சே. வாழ்க்கையே வெறுத்திடுச்சு” என்றவாறு இருக்கையிலிருந்து எழுந்து வாசலுக்கு வந்தான் தருன். நியூட்ரினோ அவனை மீண்டும் வீட்டிற்குச் சுமந்து வந்தது.

“மனுஷங்களே இல்லையா? மனுஷங்களைப் பார்க்கவே முடியாதா? எல்லா மனுஷங்களும் செத்துப் போயிட்டாங்களா? ஒருவேளை மனுஷ இனமே அழிஞ்சுடுச்சா? இங்க நான் மட்டும் இருந்து என்ன செய்யப்போறேன்? செத்தே போலாம்” என்ற சிந்தனைகள் தரனுக்குள் ஓட கயிற்றினை எடுத்துக்கொண்டு வாசலில் இருந்த மரத்தில் தூக்கிட்டுக்கொண்டான். அவனது கழுத்து நெறிபட்டு அழுந்த, அவனது மொத்த உடல் எடையும் புவியீர்ப்பினால் இழுக்கப்பட்டு, கழுத்து அறுபட்டு, அறுபட்ட இடத்தில் பச்சை நிறத்தில் சிலிக்கான் தகடுகளும், ஒயர்களும் பிய்ந்து தொங்கின.


தரன் வீட்டை விட்டுப் புறப்பட்டதிலிருந்து, திரும்ப வீட்டிற்கு வந்து தூக்கிட்டுக் கொண்டது வரை அனைத்தையும் கவனித்துவந்த டாக்டர்.கோவிந்த் தனது பிரத்யேக அறையிலிருந்துகொண்டு கீழ்க்கண்டவாறு பேச ஆரம்பித்தார். அவர் பேசுவதை அருகிலிருந்த கணினி தனது திரையில் எழுதிக்கொண்டிருந்தது.

“ மதிப்பிற்குரிய ஐ.ஜி. அவர்களுக்கு,

முன்னாள் அமைச்சரின் மகனான தரன் தற்கொலை குறித்து தாங்கள் என்னிடம் அளித்திருந்த வேலை நிறைவடைந்துவிட்டதாக நினைக்கிறேன். தரனைப் பற்றித் தாங்கள் கொடுத்த தகவல்களையும், தரனின் மூளையிலிருந்து பெறப்பட்ட சில நினைவுகளையும், அவரது ஹார்மோன் லெவல்களையும் வைத்து நாங்கள் உருவாக்கிய ரோபோட் இன்றும் தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்துகொண்டது. இது நான்காவது முறை. மொத்தமாகச் செய்யப்பட்ட ஐந்து சோதனைகளில் நான்கு முறை தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்திருக்கிறது.தரனிற்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டிருந்தால் அவர் நிச்சயமாக தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்திருப்பார். வேறு வழிகளில் இறந்திருந்தால் அது கொலையாகவோ, விபத்தாகவோ இருக்கலாம். நன்றி.”

திரையில் எழுதியிருந்த வாசகங்களைப் படித்துவிட்டு, திரையின் கீழே அவரது கை ரேகையையும் பதித்து செண்ட் இட் டூ ஐ.ஜி என்று கட்டளையிட்டுவிட்டு வெளியேறினார் டாக்டர். கோவிந்த்.

Sunday, April 13, 2014

வங்கிகளும் ஏ.டி.எம் களும் தோன்றியது எப்படி? - வரலாற்றுத் தகவல்!

சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னர் என்றோ, இரண்டு யுகங்களுக்கு முன்னர் என்றோ ஆரம்பிப்பதற்கு இதொன்றும் கட்டுக்கதை இல்லை. வரலாறு என்றாலே சுமார் என்றுதான் ஆரம்பிக்க வேண்டுமென்று யாராவது சட்டம் போட்டிருக்கிறார்களா என்ன? அப்படிப் போட்டிருந்தால் போட்டுவிட்டுப் போகட்டுமே? நாம் என்றைக்குச் சட்டங்களைச் சட்டை செய்துள்ளோம்? துணியைச் சட்டை செய்வது தானே நமது வழக்கம்?

வரலாற்றுத் தகவல் என்றாலும் இது முற்றிலும் உண்மைக் கதை. வங்கிகளும், ஏ.டி.எம் செண்டர்களும் இல்லாத ஒரு நாட்டை உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா? முடிந்தால் கற்பனை செய்து பாருங்கள். சிரமம்தானே?

இன்றைய இயந்திர வாழ்வில் தவிர்க்கமுடியாத அங்கங்களாக மாறிவரும் பேங்குகளும், ஏ.டி.எம்களும் முதன் முதலில் எங்கே எப்படித் தோன்றின என்று தெரியுமா? தெரியாதவர்கள் தொடர்ந்து படியுங்கள். தெரிந்தவர்களும் தொடர்ந்து படிக்கலாம். ஏனெனில் பேங்க்குகளும் ஏ.டி.எம்களும் உருவான வரலாறென்று நீங்கள் அறிந்திருப்பது அனைத்தும் கற்பனைக் கதைகள். இங்கே சொல்லியிருப்பவை மட்டுமே உண்மை.

கி.பி.1885 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 30 ஆம் நாள் நான், கமல் மற்றும் ரஜினி ( சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. கமல், ரஜினி என்ற பெயரில் உங்கள் சித்தப்பாவோ, பெரியப்பாவோ இருந்தால் இவை அவர்களைக் குறிப்பன அல்ல) ஆகிய மூவரின் தவத்தினை மெச்சி இறைவன் எங்கள் கண் முன்னால் தோன்றினார். ஒவ்வொருவரையும் நலம் விசாரித்துவிட்டு வேண்டும் வரங்களைக் கேட்கச் சொன்னார்.

முதலில் கமலின் முறை. “எனக்கு ஒளிமயமான எதிர்காலம் வேண்டும்” என்று கேட்டார். உடனேயே அங்கொரு குண்டு பல்பு தோன்றியது. கமலைக் காணவில்லை.

ஓரிரு நொடிகளுக்குப் பின்னர்தான் எனக்கு விபரீதம் புரிந்தது. கடவுளை நோக்கி “ யோவ், என்னய்யா பண்ணிவச்சிருக்க?” என்று பல்பைச் சுட்டிக் கேட்டேன்.

தனக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த குண்டு பல்பைப் பார்த்த கடவுளுக்கும் அதிர்ச்சி. தவறிழைத்தவர் போல நாக்கைக் கடித்துக் கொண்டு “ மந்திரத்த மாத்திச் சொல்லிட்டேன் போல” என்று கூறி மீண்டும் வேறொரு மந்திரத்தை உச்சரித்தார். இப்பொழுது குண்டு பல்பு, சி.எப்.எல் பல்பாக மாறியிருந்தது. ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த போது “குண்டு பல்பு அதிகமா கரண்ட இழுக்கும்னு பேசிக்கிறாங்க” என்றார் கடவுள். கொஞ்சம் தலை சுற்றுவது போலிருந்ததால் நான் எதுவும் பேசவில்லை. 

அடுத்து ரஜினியின் முறை. தன்னிடம் எந்நேரமும் பணம் இருந்து கொண்டே இருக்க வேண்டுமென்று தனது வரத்தினைக் கேட்டார். உடனே எங்களைச் சுற்றிலும் சுவரும், ஒரு ஏ.டி.எம்.மெஷினும் தோன்றின. கடவுளுக்கும் சென்றாயனுக்கும் வித்தியாசம் இருக்க முடியாதென்று தோன்றியது. ஏ.டி.எம் மெஷினாக ரஜினி மாறியது குறித்து எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும் கூடவே ஒரு குறும்புச் சிரிப்பும் ஏற்பட்டது. எவனோ ஒருவன் வந்து இந்த மெஷினில் இருக்கும் பணம் அத்தனையையும் எடுத்துவிடப் போகிறான், பிறகு அந்த மெஷினில் பணம் இல்லாமல் போய், கடவுளின் வரம் கேலிக்கூத்தாகப் போகிறதென்று நினைத்தேன். நான் நினைத்ததைக் கடவுளும் புரிந்து கொண்டிருப்பார் போலும். அவருக்கும் அதே குறும்புச் சிரிப்பு வந்தது. அதே சமயம் மண்டையோட்டுச் சின்னத்துடன் “மெஷின் ரிப்பேர், பணம் வராது” என்று எழுதப்பட்ட அட்டை எங்கிருந்தோ வந்து ஏ.டி.எம் மெஷினின் ஸ்கிரீனினை மூடியது.

இப்பொழுது கடவுள் என் பக்கமாகத் திரும்பினார். அடுத்த வரத்தினை நான் தான் கேட்டாக வேண்டும். ஏனெனில் என்னையும் கடவுளையும் தவிர அந்த அறையில் வேறு யாருமில்லை. என் நண்பர்களுக்கு நேர்ந்த கதியைக் கண்டு கதிகலங்கிப் போயிருந்த நானோ வரம் கேட்கும் ஆசையிலிருந்து முற்றிலும் மாறிப்போயிருந்தேன். கடவுள் இங்கிருந்து மறைந்தால் போதுமென்று தோன்றினாலும், எனது நண்பர்களுக்கு ஏற்பட்ட சோதனையை நினைத்துக் கண் கலங்கிக் கொண்டிருந்தேன்.

மீண்டும் தொண்டையைச் செருமியவாரே வேண்டும் வரத்தைக் கேட்கச் சொன்னார். ஏதோ பிளானிங்கில் இருப்பதாகவே தோன்றியது.

“இல்ல எனக்கு வரம் எதுவும் வேண்டாம்”

“நேரில் வந்துவிட்ட பிறகு வரம் கொடுக்காமல் போவது என் குல வழக்கத்திற்கு மாறானது. வேண்டும் வரத்தினைக் கேள் “

மேலும் மறுத்தால் கடவுள் கெட்ட வார்த்தைகளில் என்னை வசைபாடக் கூடுமோ என்ற அச்சத்தில் சிறிது யோசித்து “ அவுங்க ரண்டு பேருக்கும் கொடுத்த வரத்த திரும்ப எடுத்துட்டு அவுங்கள பழையபடி மாத்திடுங்க “ என்று எனது வரத்தினைக் கேட்டேன்.

கையோடு கொண்டுவந்திருந்த பில் (சைனா கம்பெனி) ஒன்றில் இருந்த “ ஒருமுறை விற்கப்பட்ட பொருள் திரும்ப ஏற்கப்படாது. வாங்கும் போதே பொருட்களைச் சோதனை செய்து வாங்கிச் செல்லவும்” என்பதைக் காட்டினார். எனக்குப் புரிந்தது. உங்களுக்கும் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். புரியாவிட்டாலும் ஒன்றும் பிரச்னையில்லை. இதை வைத்து டாக்டர் பட்டமா வாங்கப் போகிறீர்கள்?

எனக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. பின்னே, ஹோட்டலுக்குச் சென்று இட்லி இருக்குதா என்ற கேள்விக்கு தோசை, பூரி, புரோட்டா எல்லாம் இருக்குது சார். அதுவும் சாப்பிடற பொருள்தான் சார் என்றால் உங்களுக்குச் சிரிப்பா வரும் ? எனக்குக் கோபம்தான் வரும்.

கோபத்தைத் தாருமாறாகக் காட்டியிருக்கலாம்தான். ஆனால் என் நண்பர்களுக்காகப் பொறுமை காக்க வேண்டியிருந்தது. சிறிது நேர யோசனைக்குப் பின்னர் “அந்த மெஷின்ல இருக்கிற பணம் எனக்கு வேணும்” என்றேன். இப்படிக் கேட்டால் ரஜினியின் “எந்நேரமும் எங்கிட்ட பணம் இருந்துட்டே இருக்கனும்” என்பதற்காகக் கொடுக்கப்பட்ட வரம் ஓவர் ரூலாகி கடவுள் குழம்பிவிடுவார் என்று நினைத்தேன். அப்படி நேர்ந்தால் ஒருவேளை ரஜினியையும், கமலையும் அவர் பழைய நிலைக்கே மாற்றிவிடலாம் என்பது எனது எண்ணம்.

எனது நோக்கம் கடவுளுக்குப் புரிந்திருக்க வேண்டும்.  இந்தப் பத்தியிலிருந்து மேலாக எண்ணிக் கொண்டே போனால் சரியாக எட்டாவது பத்தியில் கடவுளுக்குத் தோன்றிய குறும்புச் சிரிப்பு இப்பொழுதும் தோன்றியது. உங்களுக்கு எட்டு ராசியான நம்பராக இல்லாவிட்டால் எண்ணிக்கையை ஒன்று என ஆரம்பிக்காமல் வேறு எண்ணில் ஆரம்பிக்கலாம்.

நான் கேட்ட வரத்தினை எனக்கு அளித்ததாகக் கூறிவிட்டுக் கையில் ஒரு ஏ.டி.எம்.கார்டினைக் கொடுத்து “இத வச்சு அந்த மெஷின்ல இருக்கிற பணத்த எடுத்துக்க” என்று கூறி அதிலிருந்து எப்படிப் பணமெடுப்பது என்பதையும் விளக்கிவிட்டு கிளம்புவதற்குத் தயாரானார்.

“ஒரு நிமிஷம் நில்லுங்க, நான் ஒருதடவ ட்ரையல் பார்த்துக்கறேன்” - மெஷினிலிருக்கும் எல்லாப் பணத்தையும் எடுத்துவிட்டு மீண்டும் கடவுளின் வரத்தை பொய்யாக்கும் எனது நோக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

நின்றார். 

அவர் கூறியபடியே ஏ.டி.எம்.கார்டினை மெஷினில் தேய்த்து எடுத்துவிட்டு, மெஷினில் மொத்தமாக எவ்வளவு பணம் இருக்கிறதென்று தெரிந்துகொண்டேன். ஏனெனில் அப்பொழுது வங்கிகள் எதுவும் இருக்கவில்லை என்பதால் மெஷினில் எவ்வளவு பணம் இருக்கிறதென்று பார்க்கும் நடைமுறை இருந்தது. இப்பொழுது அந்த வசதிதான் உங்கள் வங்கிக் கணக்கில் எத்தனை பணம் இருக்கிறதென்று பார்ப்பதற்காக மாற்றப்பட்டுள்ளது. அந்த மெஷினில் இருந்த அனைத்துப் பணத்தையும் எடுப்பதற்கான எனது எண்ட்ரியை அழுத்தினேன். உள்ளே “ச்சுர் ச்சுர் ச்சுர்” என்று சக்கரம் சுழல ஆரம்பித்தது. கடவுளுக்கு வயிற்றைக் கலக்கியிருக்க வேண்டும். அவரது முதல் வரம் தனது சாவினை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக எனக்குத் தோன்றியது.

அதுவரையிலும் குறும்புச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்த கடவுள் திடீரென ஏதோ ஒரு மந்திரத்தை உச்சரித்தார். அடுத்த கணமே மெஷின் தனது வேலையை நிறுத்திக் கொண்டு, பத்தாயிரம் ரூபாய் பணத்தினை மட்டும் வெளியே நீட்டியது. மறுமுறை நான் முயற்சித்த போது ” அடுத்த 24 மணி நேரத்திற்கு நீங்கள் பணம் எடுக்க முடியாது” என்ற சீட்டினைத் துப்பியது. நான் கடவுளைப் பார்த்தேன். அவர் எங்கள் ரூமுக்கு வெளியே புதிதாக முளைத்திருந்த வங்கிக் கிளையைப் பார்த்தார்.

”நான் கேட்டபடி எனக்கு அந்த மெஷின்ல இருக்கிற பணம் வேணும். நீங்க கொடுத்த வரம் என்னாச்சு?”

“உன் கைல இருக்கிற பணம் அந்த மெஷின்ல இருந்து வந்ததுதானே?”

“எனக்கு எல்லாப் பணமும் வேணும்”

“அத நீ பேங்க்ல தான் கேக்கணும். ஒரு நாளைக்கு இவ்ளோதான் எடுக்கனும்னு ரூல் வச்சிருப்பாங்க போல; எனக்கும் அவுங்களுக்கும் சம்பந்தம் இல்லை”

அவர் ஜெயித்துவிட்டதாகத் தோன்றியது. வெளியில் கிளம்பியவரிடம் கேட்பதற்கு மேலும் ஒரு கேள்வி பாக்கியிருந்தது.

“அது சரி, இப்போ நான் தினமும் வந்து பணத்த எடுத்துட்டுப் போயிட்டா கடைசில ஒரு நாள் இந்த மெஷின்ல இருக்கிற பணமெல்லாம் தீர்ந்திடுமே. அப்போ ரஜினிக்கு நீங்க கொடுத்த வரம் பொய்யாகாதா?”

“ அதுக்குத்தானே பேங்க்க உருவாக்கியிருக்கேன். இனி அவுங்க இந்த மெஷின்ல பணம் தீராம பார்த்துக்குவாங்க. இந்த மெஷின்ல தீர்ந்தாலும் இதே மாதிரி ஆயிரம் பேங்க்குகள், ஏ.டி.எம்னு ஜெராக்ஸ் எடுத்தாச்சு. அதனால அந்த வரத்துக்கு இனி சாவே கிடையாது. ” என்று கூறிவிட்டு மறைந்திருக்க வேண்டும். ஆனால் அன்று ஏனோ மறையவில்லை. நடந்தேதான் சென்றார்.

இப்படியாகத்தான் பேங்க்குகளும் ஏ.டி.எம்.களும் தோன்றின. எப்பொழுதேனும் நீங்கள் ஏ.டி.எம்.ற்குப் பணம் எடுப்பதற்காகச் சென்றால் என்னையும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரஜினி மற்றும் கமலையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள். அதுவே நீங்கள் எங்கள் தியாகத்திற்குச் செய்யும் நன்றிக்கடனாக அமையும்.

Friday, February 14, 2014

அவதூறு!

அது அவதூறுதான். அதை அவதூறாகத்தான் கருத வேண்டும். அவதூறல்லாமல் வேறென்ன?
செய்யாத ஒன்றைச் செய்ததாகவும்நடக்காத ஒன்றை நடந்ததாகவும் கூறிப் பழி கூறுவதை என்னவென்பது?


எனக்குச் சைவ உணவுகளைக் காட்டிலும் அசைவ உணவுகள் அதிகமாகப் பிடிக்கும்தான். தினமும் மூன்று வேளைக்குமே அசைவ உணவென்றாலும் சந்தோசம்தான். அதற்காக மனிதக் கறியையுமா தின்பேன்?இப்படியெல்லாமா ஊருக்குள் என்னைப் பற்றிச் செய்திகளைப் பரப்புவீர்கள்?உங்களைப் பார்த்து யாராவது மனிதக் கறி வேண்டுமா என்று கேட்டால் நீங்கள் தலையை ஆட்டிக்கொண்டு அவர்கள் பின்னால் செல்வீர்களா என்னஇல்லை ஒரு கிலோ என்ன விலை என்று கேட்டு வாங்கிவந்து வீட்டில் சமைப்பீர்களா ?கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல் இப்படியா அவதூறு பரப்புவதுஎன்னைப் பற்றி என்னவென்று நினைக்கும் இளைய தலைமுறை?

எனக்கு அவதூறு பரப்புபவர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை. அதெப்படி ஒருவரைப் பற்றிய கெட்ட விசயங்கள் மட்டும் இவ்வளவு வேகமாகப் பரவி விடுகிறதுநல்ல செய்திகளென்றால் சம்மந்தப்பட்டவர்களே வந்து குறிப்புகளைச் சொல்லி, நெளிந்து பின் இறுதியாக அவர்கள் வாயாலேயே சொன்னால்தான் புரிகிறது. தவறான விசயங்கள் மட்டும் வாயைத் திறக்கும் முன்பே தெரிந்துவிடுவது எப்படி?


எல்லோருக்குமே தவறானது என்று சொல்லப்படுவதைச் செய்யும் ஆவல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் யார் முதலில் செய்கிறதுயாரோ ஒருவர் முதலில் செய்தால்தானே அவன் அவ்ளோ பெரிய தப்புப் பண்ணினான்நான் இந்தச் சின்னத் தப்புத்தானே பண்ணினேன் என்று தப்பிக்க முடியும்.

தவறென்பதும்,சரியென்பதும் நீங்களே உருவாக்கிக் கொண்ட வட்டம்தானேவட்டத்தையும் நீங்களே வரைந்துகொள்கிறீர்கள்பின் அதைத் தாண்டக்கூடாதென்ற விதியையும் உருவாக்கிக்கொள்கிறீர்கள்பின் யார் முதலில் விதியை மீறுவதென்றும் எதிர்பார்க்கிறீர்கள்உங்களுக்கு விதியை மீறும் எண்ணமில்லாவிட்டால் விதியை யார் மீறினால் என்னமீறாவிட்டால் என்ன? இப்படியிருந்துவிட்டால் அவதூறுகள் அவ்வளவு வேகமாகப் பரவிவிடுமா என்ன?

அப்படியென்ன அவதூறு செய்துவிட்டார்கள் என்றா கேட்கிறீர்கள்நீங்கள் யாரோ எவரோஇருந்தாலும் நான் இதைச் சொல்லியாக வேண்டும். நான் மாமிசத்திற்கு ஆசைப்பட்டு அது கிடைக்காமல் போனதால் மாமிசத்திற்காக மனிதனைக் கடித்தேனாம். இப்படித்தான் ஊரெல்லாம் பரப்பிவிட்டிருக்கிறார்கள். இதைப் படித்தபோது எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. திட்டமிட்டுப் பரப்பிவிடப்பட்ட மிகப் பெரிய பொய் இதுவென்று நான் யாரிடம் சொல்லமுடியும் ?நான் சொல்வதை யார் கேட்பார்கள்?

முதலில் நான் யாரென்று உங்களுக்குச் சொல்லவேண்டுமே. உங்களுக்கு இலக்கியத்தில் ஈடுபாடிருந்தால் நகுலனின் “ ஒரு ராத்தல் இறைச்சி” என்ற சிறுகதையைப் படித்திருப்பீர்கள். அக்கதையில் வரும் நவீனன் என்னும் எழுத்தாளர் வளர்த்த நாய்தான் நான். அந்தக் கதையைப் படித்திருந்தால் என் வழக்கு உங்களுக்கு இன்னேரத்திற்கெல்லாம் புரிந்திருக்கும். படிக்காவிட்டால் என்ன நானே என் வாழ்க்கையையும் வளர்ந்தவிதத்தையும் கொஞ்சம் சுருங்கச் சொல்கிறேன்கேட்டுவிட்டு யார் பக்கம் நியாயமிருக்கிறதென்று சொல்லுங்கள்.

என்னை எப்பொழுது என் தாயிடமிருந்து பிரித்து நடுரோட்டில் விட்டார்கள் என்பது எனக்கு ஞாபகமில்லை. அப்பொழுது பசியால் அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த சிறுவர்களால் துன்புறுத்தப்பட்டது மட்டும் ஞாபகம் இருக்கிறது. சிலர் கல்லால் அடித்தார்கள்சிலர் குச்சியால் விரட்டினார்கள்சிலர் அவர்கள் வைத்திருந்த பெரிய நாயை ஏவி விட்டார்கள்அவையும் தன் இனமான இன்னொரு இளம் தலைமுறை என்பதைக் கூட யோசிக்காமல் தன் எஜமானர்களின் உத்தரவின்படி என்னைக் குதறின. இப்படியாகவும்இன்னும் கொடுமையாகவும் கழிந்தது முதல் சில நாட்கள்.

துன்பங்களே வந்துகொண்டிருந்தால் பூமி உருண்டை என்று கலீலியோ சொன்னது பொய்யாகிவிடுமே. பூமி உருண்டையென்பது மெய்யாகும் விதமாக என்னையும் ஒருவர் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.அவர் வேறு யாருமல்ல;என் மேல் அவதூறு பரப்பியிருக்கும் எழுத்தாளர் நவீனன் தான். என் மேல் அவதூறு பரப்பவே அவர் என்னை வளர்த்தார் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் அப்படியும் இருக்கலாம்.

எனக்கும் அவருக்குமான உறவுஒரு மனிதன் சாகக் கிடக்கும் நாயின் மேல் காட்டும் பரிதாபமாகத்தான் ஆரம்பித்தது. இவர் இப்படி அவதுறு பரப்புவேன் என்று அன்றே சொல்லியிருந்தாலும் நான் இவரோடுதான் வந்திருப்பேன். பின்னே என்னைத்தான் எல்லோரும் கல்லால் அடித்தார்களே?வேறென்ன செய்யமுடியும் நான்அப்பொழுது எனக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் கொடுத்ததற்காக இப்படி அவதூறு பரப்பலாமா என்னநாய்க்கு எதற்கு உடையென்றா கேட்கிறீகள்ஒரு கிழிந்து போன சட்டையை என்னிடம் கொடுத்தபோது இதையேதான் நானும் கேட்க நினைத்தேன். ஆனால் வெளியே என் குரலோ வள் வள்” என்று வந்ததாக ஞாபகம்.


எனக்கு ராஜூ என்று கூடப் பெயர் சூட்டியிருந்தார். ஆனால் என்னை ராஜூ என்று அழைப்பதை விடவும் ஸ்கோ ஸ்கோ” என்று அழைப்பதே பெருமையாக இருக்கும். என்னை ராஜூ என்றழைத்தாலும் சரிஸ்கோ என்றழைத்தாலும் சரி நன்றாக வாலையாட்டுவேன். இதற்காகவெல்லாம் நான் வேதனைப்படவில்லை.

அவரோ தனிமையில் இருந்தார். அவரது காதலி அவரைக் கலியாணம் செய்துகொள்ளவில்லை. நான் அவரது வீட்டிற்குச் சென்ற இரண்டாவது வருடத்தில் அவரது பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்துபோயினர். இதற்கெல்லாம் அவர் அசந்ததாகத் தெரியவில்லை. அடிக்கடி என்னுடன் பேசவும் செய்தார். அவர் பேசியதில் முக்கியமாக “ மஹாலட்சுமி தியேட்டரில் கைதி வந்திருக்கிறது. பார்க்கலாமாஎன்ன சொல்கிறாய்? “ உனக்குக் கதை பிடிக்குமா?குறுநாவல் பிடிக்குமா? “ என்றெல்லாம் கேட்பார். நானும் அவரின் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலாக வாலையாட்டுவேன். கேள்விகள் என்றில்லைஎன்னைப் பார்த்து இருமினாலும்தும்மினாலும்விரட்டினாலும்கத்தினாலும் கூடவாலாட்டுவேன். உங்கள் வீட்டு நாயும் இதையெல்லாம் செய்கிறதுதானே?


செய்யாவிட்டால் நல்ல மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள்.

ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் அந்தப் புதுப் பழக்கம் வந்தது. ஒருநாள் அவரது வேலைக்காரர் - அல்லது எனக்குச் சோறுபோடுபவர் என்றும் சொல்லலாம் - எனக்கு மாமிசம் வாங்கிவந்திருந்தார். நான் முதல் முதலாகஅன்றுதான் மாமிசத்தைக் கண்ணால் பார்த்தேன் என்று சொல்லவேண்டும். இது ஏதோ புதிய உணவாகத்தான் தெரிந்தது. ஆனாலும் அதன் சுவையை என்னால் மறக்கமுடியவில்லை. இந்த உணவையே தினமும் ஏன் இவர்கள் தருவதில்லை என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனாலும் அவர்கள் போடுவதைத்தானே நான் தின்றாக வேண்டும்அதுதானே ஒரு அடிமையின் மிக முக்கியக் கடமை?

எப்படியோ மாமிசத்தின் சுவை என் வாயில் ஒட்டிக்கொண்டது. அவர்களையும் குறை சொல்வதற்கில்லை. அடிக்கடி மாமிசம் வாங்கிப் போடத்தான் செய்தனர். ஆனால் இதில்தான் என்னைப் பற்றிய அவதூறுக்கான முதல் அத்தியாயம் தொடங்குகிறது.


நவீனன் எழுதியிருக்கும் அந்தக் குறிப்பில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எனக்கு இறைச்சி நாளாம். இறைச்சி வேண்டித் தவம் கிடந்தேனாம். இறைச்சி கிடைக்கும் வரை நான் அவரையே சுத்திச் சுத்தி வந்தேனாம். எப்படியெல்லாம் திரித்திருக்கிறார்நான் தினமும்தான் அவரைச் சுத்திச் சுத்தி வந்தேன். தினமும்தான் அவரை நக்கினேன். அதையெல்லாம் அவர் எப்படி மறந்தார்இதை விடுங்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் இறைச்சிக்காகக் காத்திருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறாரேநாய்களுக்கு வெள்ளியும் சனியும் எப்படித் தெரியும்அது தெரியாமல் நானெப்படிக் காத்திருக்கமுடியும் ?

நீங்களாக ஒன்றைப் பிறருக்குக் கொடுத்தால் அவர் உங்களிடமிருந்து அதைப் பெற்றுக் கொள்ளக் காத்திருப்பதாகவும்அவரின் ஒவ்வொரு செயலையும் உங்களின் உபகாரத்தோடு சம்மந்தப்படுத்திப் பார்த்து மகிழ்வதும்,உங்களை நீங்களே தர்மப்பிரபுவாக நினைத்துக்கொள்வதும்உயர்ந்தவரென்று பிறர் பாராட்டவேண்டுமென்பதுதானே உங்களின் நோக்கம்?

இதைவிடக் கொடுமையென்னவென்றால் நவீனன் அவரது குறிப்பில்எனக்கு இறைச்சி போடும் முன்னதாக அவருக்குக் காபி கொடுக்கப்படுவதைப் பார்த்து நான் நினைத்துக் கொள்வதாக ஒரு யூகம் செய்திருக்கிறார். அதுவும் தவறு. எனக்கு இறைச்சி வருவதற்கு முன் அந்த வேலைக்காரன் அவருக்குக் காபி கொடுப்பான். அதனை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்பொழுது நான் உங்க மனிதஜாதியே இப்படித்தான். எதிரில் ஒரு நாலு கால் மிருகம் பட்டினி கிடப்பது மறந்துவிடும். உங்களுக்கு இரண்டு கால் தான். இருந்தாலும் நீங்கதான் பிரதானம் என்கிற திமிர்” என்று சொல்வதுபோல் இருக்கிறதென்று யூகித்திருக்கிறார். நான் ஒருநாளும் இப்படி நினைத்ததில்லை. சொல்லப்போனால் அவர் காபி குடிக்கும்போது அந்தக் காபியில் எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் நன்றாக இருக்குமென்று வேண்டுமானால் சில சமயம் நினைத்ததுண்டு.

எனக்கு வயதாக வயதாக என் எஜமானனின் மேல் அதிக பற்றுதல் உண்டானதென்னவோ உண்மைதான். அடிக்கடி அவரது காலை நக்குவது எனக்கு மிகப்பிடிக்க ஆரம்பித்தது. அவரது காலை நக்காவிட்டால் எதையோ இழந்ததாகவே உணர்வேன். இதைப் பற்றியும் ஒரு யூகம் செய்திருக்கிறார். அதுதான் அவர் என்னைப் பற்றிச் செய்த மிகச் சரியான யூகம். அதையும் அந்தக் குறிப்பிலேயே எழுதியிருக்கிறார். நான் அவரது காலை நக்குவதையும்அவர் அதைச் சகிக்காமல் என்னை அடிப்பதையும் பற்றி அந்தக் குறிப்பில் நீ ஏன் என்னை அடிக்கிறாய்? நீ இறைச்சி வாங்கித் தருவதற்கென்றா நான் இதைச் செய்கிறேன்நானோ நாய் ஜென்மம். மனிதன் காலை நக்குவதில் அதுவும் உன்னைப் போல் தயை காட்டுபவர்களின் காலை நக்குவதில் எங்களுக்கு ஒரு தனி ருசி. நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றவாறு எழுதியிருக்கிறார். இது உண்மைதான். எல்லா நாய்களுமே தன் எஜமானனை நக்கத்தானே செய்கின்றன.

ஆனால் அதற்குப் பிறகு அவர் ஏனோ எப்பொழுதுமே கான்வாஷ் ஷூ அணிந்து கொண்டேயிருந்தார். அவரது ஷூவையும் நான் நக்கத்தான் செய்தேன். அவரது காலைக் காட்டிலும் அவரது ஷூ இன்னும் நன்றாகவே இருந்தது. இது இப்படியே போய்க்கொண்டிருந்தது.

இதற்குப் பிறகுதான் என் மீதான அவதூறின் இறுதிக்கட்டம் தொடங்கியது. ஒருநாள் அவரது நண்பரொருவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். இருவரும் என்னென்னவோ பேசிக்கொண்டேயிருந்தார்கள். நீண்ட நேரத்திற்குப் பிறகு அவரது நண்பர் என்னைப் பார்த்து எதையோ சொன்னார். பின் இருவரும் சென்றுவிட்டனர்.


அதற்குப் பிறகு ஒருவாரம் நான் அந்த வீட்டில் இருந்தேன். பின் எங்கிருந்தோ வந்த ஒரு வண்டியில் நிறைய நாய்கள் அடைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூண்டில் என்னையும் ஏற்றிவிட்டார்கள். எதற்காக என்று இதுவரைக்கும் தெரியவில்லை.


நடந்தது இதுதான்.

ஆனால் நவீனனின் குறிப்பில் அந்த நண்பர் வந்தது வெள்ளிக் கிழமை என்றும்,அன்று எனக்கு இறைச்சி நாளென்றும்நீண்ட நேரமாகியும் எனக்கு இறைச்சிபோடாததால் நான் என் எஜமானனான நவீனனை இறைச்சிக்காகக் கடித்து விட்டதாகவும் எழுதியிருக்கிறார். எத்தனை பெரிய அவதூறுஇறைச்சிக்காகச் சொந்த எஜமானனையே கடித்துவிடும் அளவிற்கா நான் மோசமாகிப் போனேன். என் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இந்தப் பழியை நான் எப்படிப் போக்குவது?

கடந்த 45 வருடங்களாக என்னைப் பற்றி மக்களிடம் பரவியிருக்கும் இந்த
மாயப்பிம்பத்தை நான் எப்படி உடைத்தெரியப் போகிறேன்எனக்கு யார் நீதி சொல்லப் போகிறார்கள்நீங்களா ?


பின்குறிப்பு : இக்கதை வெட்டிபிளாக்கர்ஸ் நடத்திய சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்டது. இக்கதையில் வரும் ஒரு ராத்தல் இறைச்சி கதையைப் படிக்க இங்கே தொடவும்!