Friday, January 29, 2016

ஓவியம்!

சமீபமாகத்தான் இந்த வீட்டினை நல்ல விலை கொடுத்து வாங்கினான். வாங்கியதிலிருந்தே வித்தியாசமாகச் சில நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. வாங்கிவைத்திருக்கும் திண்பண்டங்களில் குறிப்பாக முறுக்குகள் மட்டும் காணாமல் போய்க்கொண்டே இருக்கின்றன. இதுவரையிலும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட முறுக்குகள் காணாமல் போயிருக்கும். இவன் ஒரு முறுக்குப் பிரியன் என்பதால் முறுக்குகளை மட்டுமே வாங்கி ஸ்டாக் வைத்திருந்தான். வேறெந்தத் திண்பண்டங்களையும் வைத்திருப்பதில்லை. பிடிக்கவும் பிடிக்காது.

இவற்றையெல்லாம் தின்பது எலியோ, புலியோ, குரங்கோ அல்ல. சுவற்றில் வரைந்து வைத்திருக்கும் ஒரு ஓவியம். ஆச்சர்யமாக இருக்கிறதா? அவனுக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனால் முறுக்கினைக் கையில் வைத்திருப்பது போன்ற அந்த ஓவியம் இவனது அலமாரியில் இருந்து முறுக்குகளைத் திருடித் தின்று கொண்டிருந்தது. யாரிடமாவது சொன்னால் நம்புவார்களா? நம்புவது கூடப் பிரச்சினையில்லை. யாரிடமாவது போய் “ என் ரூம் செவுத்துல இருக்கிற ஒரு படம் முறுக்க எடுத்துத் திங்குதுங்க” என்று சொன்னால் சிரிக்கமாட்டார்களா?

ஆனால், அதுதான் உண்மை. உண்மையை யார் நம்புகிறார்கள்? அது அலமாரியில் வைக்கப்படும் முறுக்கினைத் தின்றுவிடுகிறது என்பது தெரிந்ததும் வேறு இடத்திற்கு மாற்றினான். எங்கு மாற்றினாலும் முறுக்கென்று அந்த அறைக்குள் வந்தால் அது அந்த ஓவியத்திற்காகத்தான் இருந்தது. முறுக்குகளுக்கும் அந்த ஓவியத்திற்கும் ஏதோ பூர்வஜென்மத் தொடர்பு இருக்க வேண்டும்.

அந்த ஓவியம் வேறெதையும் செய்யவில்லை. முறுக்கினை மட்டும் திருடித்தின்றது. மற்றபடி பேசவோ, பாடவோ, கேர்ள்ஃபிரண்டுக்கு போன் செய்யவோ இல்லை. ஓவியத்தை அழித்துப் பார்த்தான். கட்டிடத்தை இடித்தாலும் இந்த ஓவியம் மட்டும் காற்றில் அதே இடத்தில் அதே உருவத்தில் இருக்கும்போலத் தெரிந்தது. இந்த வீட்டினை விற்றுவிட்டு வேறு இடத்திற்கு வாடகை வீட்டிற்காவது போய்விடவேண்டுமென்று நினைத்தான். உடனே எப்படி?

வீட்டினை விற்கும் வரைக்கும் இங்கேயே இருந்துதானே ஆகவேண்டும். அதுவரைக்கும் தனக்கு இருக்கும் முறுக்குத் தின்னும் ஆசையினைக் கைவிடுவதற்காக வேறு திண்பண்டங்களைத் தேடிப்போனான். முறுக்கினை அடுத்து இவனுக்குப் பிடித்த திண்பண்டமென்றால் அது லட்டுதான். 

சில லட்டுகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தால் அந்த ஓவியத்தின் கையில் இப்பொழுது முறுக்கிற்குப் பதிலாக லட்டு இருந்தது.

1 comment:

விஸ்வநாத் said...

அது கண்ணாடியால் (mirror) செய்யப்பட்ட ஓவியமோ ?