Thursday, June 19, 2014

கற்பூர வாசனை தெரிந்த கழுதை!


முன்னொரு காலத்தில் சவகர் என்ற குதிரை வியாபாரி வாழ்ந்துவந்தார். அரசன் முதல் ஆண்டி வரை இவரிடம் தான் குதிரைகள் வாங்கிவந்தனர். ஆண்டி எதற்காக குதிரைகளை வாங்குகிறார் என்று நாம் இப்பொழுது ஆராய வேண்டாம். அது நம் கதைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்று. உலகத் தரமான குதிரைகள் இவரிடம் கிடைக்கும் என்பது நமீதா வந்து சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரிந்தது.

சவகர் எப்போதும் சற்று வித்தியாசமாக எதையாவது யோசிக்கும் குணமுடையவர். குதிரை வியாபாரம் மட்டும் செய்துவந்த சவகருக்கு திடீரென ஒருநாள் கழுதை வியாபாரம் செய்யலாம் என்று தோன்றிற்று. அசரீரியெல்லாம் வந்து சொல்லவில்லை. தானாகவே தோன்றியது. கழுதை வியாபாரம் ஒன்றும் குதிரை வியாபாரத்தைப் போல எளிமையானதல்ல. நாட்டில் பாதி பேருக்கு கழுதை என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. இருந்தாலும் தன் மனதில் ஒரு யோசனை தோன்றிவிட்டால் அவரே அவர் பேச்சைக் கேட்கமாட்டார்.அதனால் எப்படியேனும் கழுதை வியாபாரம் செய்தே தீருவதென முடிவெடுத்தார்.

கழுதை வியாபாரத்தை குதிரைகளை வைத்துச் செய்யமுடியாது. அது என்ன தோசை மாவா ? தோசைக்கு என்று மாவரைத்துவிட்டு இட்லி சுடுவதற்கு ? அதனால் கழுதைகளை வாங்கித்தான் கழுதை வியாபாரம் செய்யமுடியும் என்று நான் சொல்லாமலே அவருக்குத் தெரிந்திருந்தது.உடனேயே கழுதை வாங்குவதற்காகப் புறப்பட்டுவிட்டார். ஊர் ஊராகச் கழுதைகள் எங்கு கிடைக்கும், எப்படிப்பட்ட கழுதைகளை நல்ல விலைக்கு விற்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொண்டார். ஒரு ஊரில் கற்பூர வாசனை தெரிந்த அதிசயக் கழுதை ஒன்றைப் பற்றிய தகவல் கிடைத்தது.உடனடியாக அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென முடிவெடுத்து அதிக விலை கொடுத்து அந்தக் கழுதையை வாங்கிவந்தார்.

தன் வீட்டிற்கு வந்ததும் அதற்கு கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றிப்போட்டார். பெரும்பாலும் அவர் வீட்டிற்கு எதை வாங்கிவந்தாலும் இவ்வாறு செய்வது வழக்கம். ஏன் திருஷ்டி பொம்மைக்குக் கூட திருஷ்டி சுற்றிவிட்டுத்தான் வீட்டுக்குள் அனுமதிப்பார்.ஆனால் இந்தமுறை வீட்டிற்கு வந்திருப்பது கற்பூர வாசனை தெரிந்த கழுதையாயிற்றே. மிக்க சந்தோசத்துடனேயே திருஷ்டி சுற்றினார். ஆனால் அவரின் துரதிர்ஷ்டம் கற்பூரத்தைப் பற்றவைத்ததும் அந்தக் கழுதை பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. என்னதான் கற்பூர வாசனையைப் பற்றித் தெரிந்தாலும் அதை எதற்குப் பயன்படுத்துவார்கள் என்றெல்லாம் அதற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!ஓடிய கழுதையை மிகச் சிரமப்பட்டுத்தான் பிடித்துவந்தார்கள். 

அந்தக் கழுதையை வாங்கியதிலிருந்து சவகருக்கு ஒருவித செருக்கு அவன் மனதில் ஏற்பட்டது. ஊரிலேயே ஏன் உலகத்திலேயே யாரிடமும் இல்லாத அதிசயப் பொருள் தன்னிடம் உள்ளது என்று நினைத்து நினைத்துச் சந்தோசப்பட்டான். அவன் சந்தோசம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.அந்தக் கழுதைக்காக தன்னிடமிருந்த சொத்துக்களை எல்லாம் விற்று அதற்குத் தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தான். தினமும் காலையில் இட்லி வாங்கிக்கொடுத்தான். அது இட்லியைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. மதியம் பார்சல் சாப்பாடு வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. இரவில் புரோட்டா, பூரி என்று வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. ஆக மொத்தத்தில் அது காகிதத்தை மட்டுமே தின்றது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக சுவையான உணவுப் பொருட்களை எல்லாம் அது கேட்கவேயில்லை. விடுவானா சவகர் ? உடனே அதை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று “ கற்பூர வாசனை தெரிந்த கழுதை ஒன்று காகிதத்தையே தின்கிறது, அதனைக் காகிதம் தின்னாதவாறு மருந்தொன்று கொடுங்கள்” என்று கேட்டான். மருத்துவருக்கு ஆச்சர்யம்; தனது இருபத்தைந்து கால மருத்துவச் சேவையில் இப்படியொரு கழுதையைப் பார்த்ததேயில்லையே என்றவாரு அதைப் பார்க்கச் சென்றார். உண்மையில் அது கழுதையைப் போலவே இருந்தது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக அதற்குக் கொம்பெல்லாம் முளைத்திருக்கவில்லை.

பேப்பர் தின்னாமல் இருப்பதற்காக ஒரு பேப்பரை எடுத்து சில மருந்துகளின் பெயரை எழுதினார். ஆனால் மருத்துவரின் கையிலிருந்த குறிப்பேட்டினைப் பிடுங்கி ஒரு முழுங்காக முழுங்கிவிட்டது கழுதை. மருத்துவர் இஞ்சி தின்ன குரங்கைப் போல முழித்துக்கொண்டிருந்தார். அதென்ன இஞ்சி தின்ன குரங்கு? குரங்குகளைப் பற்றி கழுதைக் கதையில் சொல்லவேண்டாமென்பதால் வேறொரு கதையில் பின்னர் சொல்கிறேன். முதலில் நாம் இந்தக் கதையை முடிப்போம். டாக்டரின் குறிப்பேட்டை முழுங்கியதும் டாக்டருக்கு கடுங்கோபம் ஏற்பட்டது.சவகருக்கும் கடுங்கோபம் ஏற்பட்டது. ஆனால் சவருக்கு டாக்டர் மேல்தான் கோபம் ஏற்பட்டது. ”பேப்பர் தின்பதை நிறுத்துவதற்காக இவரிடம் கூட்டிவந்தால் இவரே பேப்பரைத் தருகிறாரே ?” என்று நினைத்துக்கொண்டு “ நீயெல்லாம் என்னையா பேப்பர் விக்குற ? “ என்று கேட்கவேண்டும் போல இருந்தது. மன்னிக்கவும், பேப்பர் பேப்பர் என்று எழுதி எனக்கே அப்படிக் கேக்கவேண்டும் போலத்தான் உள்ளது. அவன் மட்டும் எம்மாத்திரம் ?

இவர்கள் இப்படிக் கோபப்பட்டுக்கொண்டிருந்த போது கழுதை மறுபடியும் பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. ஆனால் இந்த முறை அது யார் கையிலும் சிக்கவில்லை. ஒருவேளை கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்ற பெருமை அதற்கும் வந்துவிட்டதோ என்னவோ ? சவகர் இத்தனை நாட்களாகக் காட்டிய கருணையை சிறிதும் மதிக்காமல் சென்றுவிட்டது இந்த எருமை. கழுதையைக் கழுதை என்று எப்படித் திட்டுவது? அதனால்தான் எருமை என்று திட்டுகிறேன்.

இப்படிப் பிடுங்கிக்கொண்டு ஓடிய கழுதை ஒரு அழகான காட்டில் நுழைந்தது. அதென்ன அழகான காடு, அசிங்கமான காடு ? காடுகளுக்கிடையில் அழகிப்போட்டியா நடக்கிறது ? சரி விடுங்கள், இதிகாச காலத்திலிருந்து இதையே எழுதிப்பழகிவிட்டோம்.

அப்படி அழகான காட்டுக்குள் நுழைந்த நமது நாயகனான கற்பூர வாசனை தெரிந்த கழுதை ( வெறும் கழுதை என்று எழுதினால் எங்கே மறந்துவிடுவோமோ என்பதற்காக ஒவ்வொருமுறையும் கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்றே எழுதித் தொலைக்கவேண்டியுள்ளது ) முதலில் அங்கிருந்த ஒரு ஆட்டிடம் சென்று தான் அதிசயமான விலங்கு என்றும் தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்றும் கூறிக்கொண்டது. ஆனால் ஆடோ கழுதையை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்த சில நுனிப்புல்லை மட்டும் ”வரக் வரக் “ என்று கடித்துக்கொண்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்விட்டது. ஒருவேளை ஆட்டிற்கு காதில் ஏதேனும் கோளாறோ என்னவோ ?

ஆட்டின் இந்தச் செயலால் மனம் நொந்த கழுதை அடுத்து மானிடம் சென்று தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்று கூறிக்கொண்டது. மானிற்கும் கற்பூரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. இங்கேயும் அசிங்கப்பட்டது கழுதை. அடுத்து யானையிடம். அதற்கும் தெரியவில்லை.

இறுதியாகச் சிங்கத்திடம் சென்று தனக்கு கற்பூர வாசனை தெரியும் என்றும் எனவே தான் ஒரு அற்புத விலங்கென்றும் தான் தான் இனிமேல் இந்தக் காட்டிற்கே ராஜா என்றும் கூறியது. சிறிது நேரம் உட்கார்ந்து யோசித்தது சிங்கம். உண்மையில் அதற்கு ராஜா என்பதின் அர்த்தமே தெரியாது. சில நாட்கள் மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்ததால் கழுதைக்கு மட்டும் ராஜா என்பதின் அர்த்தம் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் காட்டின் ராஜா சிங்கம் என்பதால்தான் சில மனிதர்கள் தங்களை “நான் சிங்கம்டா” என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்று அதற்கு ஞாபகத்தில் வந்தது. எனவே தான் காட்டிற்கு ராஜாவாகிவிட்டால் அதே மனிதர்கள் “ நான் கழுதைடா” என்று சொல்லிக்கொள்வார்களல்லவா ? அதற்காகத்தான் இத்தனை போராட்டங்கள்!

சிங்கம் யோசித்து முடித்ததும் தனக்கு இந்தக் காட்டை ஆளும் பாக்கியம் கிடைக்கும் என்றும், ரஜினியே கூட “ பன்னிங்கதான் கூட்டமா வரும் , கழுதை கண்ணமூடிட்டுத்தான் வரும் “ என்று பஞ்ச் வசனம் பேசுவார் என்றும் நினைத்து நினைத்துப் புல்லரித்தது, பேப்பர் அரித்தது. ஆனால் நடந்தததோ வேறு. உண்மையில் சிங்கம் இதுவரையில் யோசிக்கவெல்லாம் இல்லை. அது தூங்கிக்கொண்டிருந்து. அதுமட்டுமல்லாமல் இரண்டு நாட்களாக எந்த இரையும் கிடைக்காமல் கோபத்தில் இருந்தது. கண் விழித்துப்பார்த்தால் எதிரில் கழுதை. அது கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்று அதற்கு எப்படித்தெரியும்? பாவம்! சடாரென ஓங்கி ஒரு அடி அடித்துக் கழுதையைக் கீழே தள்ளியது. கண்களில் பொறிதட்டக் கீழே விழுந்த கழுதைக்கு ஒன்று மட்டும் புரிந்தது. கழுதைக்கு மட்டுமல்ல வேறு எந்த விலங்கிற்கும் கற்பூர வாசனை தெரியாதென்பது!

Wednesday, April 23, 2014

டிஜிட்டல் உயிர்!

காலை மணி பதினொன்றைத் தொட்டபோது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த குறிப்பினை, பூஜ்ஜியம் ஒன்றாக மாற்றி, ரேடியோ அலைகளின் வழியாக தரனின் காதுகளில் பொறுத்தப்பட்டிருந்த ஸ்பீக்கரில் “ உங்கள் நண்பர்களைப் பார்க்கப்போவதாகக் கூறியிருந்தீர்கள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாமா?” என்றவாரு வினவியது 23 ஆம் நூற்றாண்டின் அதிவேகக் கணினி. ஏற்கெனவே தயாராகியிருந்த தரன் தலையை மட்டும் மேலும் கீழுமாக அசைத்தான். தரனின் இந்த ஒப்புதலை சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த கேமராக் கண்களின் மூலமாகப் பெற்ற அந்தக் கணினி தனது வேலைகளை ஆரம்பித்தது.

கணினியிலிருந்து பூஜ்ஜியம் ஒன்றாகப் பெறப்பட்ட தகவலை ”தரன் தயாராகிவிட்டார்; கிளம்பி வரவும்” என்பதாகப் புரிந்துகொண்டு பார்க்கிங்கிலிருந்து கிளம்பி நேராக வாசலில் வந்து நின்றுகொண்டு தரனின் வரவுக்காகக் காத்திருந்தது நியூட்ரினோ என்று பெயரிடப்பட்ட கார்.

தரன் ஏறிக்கொண்டதும் ஏற்கெனவே கணினியிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஹோட்டல் சுஹில் இண்டர்நேசனலை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்ததுடன், தரனின் மற்ற இரண்டு நண்பர்களின் கார்கள் எங்கே வந்து கொண்டிருக்கின்றன என்பதையும், அவை எப்பொழுது ஹோட்டலை வந்தடையும் என்பதையும் தரனின் முன்பாகக் காற்றுத் திரைகளில் அடிக்கடி காட்டிக்கொண்டிருந்தது நியூட்ரினோ. இதனால் “எங்க இருக்கிற, எப்போ வருவ?” போன்ற கேள்விகளும், தொலைபேசி உரையாடல்களும் எப்பொழுதோ ஷிப்ட் டெலிட் செய்யப்பட்டிருந்தன.

தரன்,சிந்தீப்,பரத்,ஆரவ் ஆகிய நால்வரும் கடந்த 25 நாட்களுக்கும் முன்பாக சோசியல் நெட்வொர்க் ஒன்றில் அறிமுகமாகி, பழகி, நண்பர்களாகி இன்று அவர்களது முதல் சந்திப்பை ஹோட்டல் சுஹில் இண்டர்நேசனலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். 

ஆரவ் ஏற்கெனவே ஹோட்டலுக்கு வந்துவிட்டான் என்ற தகவலையும் கணினியிலிருந்து பெற்று அதையும் தரனின் முன்பாக மின்னிக் காட்டியது.

தரன் ஹோட்டலை அடையும் முன்பே மற்ற மூவரும் ஆஜராகியிருந்தனர்.

“ஹே மச்சி, வாடா வாடா. ஆரம்பிக்கலாமா? “ என்றவாரு தட்டுக்களில் பரிமாறப்பட்டுக் காத்திருந்த உணவு வகைகளைக் காட்டிக் கேட்டான் சிந்தீப்.

“ கண்டிப்பா, பேசுறதெல்லாத்தையும் தான் நாம நிறையப் பேசிட்டோமே?  என்னதான் டிஜிட்டல்ல, 3D ல பார்த்தாலும் நேர்ல பாக்குறது மாதிரி இருக்கிறதில்லைல? “

“ ஆமா மச்சி, இருந்தாலும் இதென்ன பழைய காலமா? நேர்ல வந்து பேசுறது, பழகுறது மாதிரியேயான உணர்வுகளைத்தான் இப்போ இருக்கிற டெக்னாலஜி ரொம்பச் சுலபமா செய்யுதே? இருந்தாலும் ஒரே இடத்துல உட்கார்ந்துட்டு சாப்பிடறது, அரட்டை அடிக்கிற ரியல் ஃபீலிங் வர்றதில்லை” - பரத்.

” சரி, முதல்ல சாப்பிடலாம்; சாப்பிட்டுட்டே பேசலாம், செம பசி” என்றவாரு உணவுத் தட்டுக்களை இழுத்தான் தரன்.

“ ஹே, நீங்க சாப்பிடுங்க, எனக்கு கொஞ்சம் வயிறு ஒரு மாதிரியா இருக்கு. எதுவும் சாப்பிடுற மூடுல நான் இல்ல”- ஆரவ்.

“ அடங்கொக்கா, நீ தானடா அடிக்கடி சாப்பாட்டு ஐட்டத்தையெல்லாம் போட்டோ எடுத்து அப்லோடு பண்ணிட்டிருப்ப? சொல்லபோனா நம்ம மீட் பண்ணப்போறோம்னு ரிமைண்டர் செட் பண்ணும்போதே உனக்குப் பிடிச்ச சாப்பாட்டு ஐட்டங்களையும், அத ஆர்டர் பண்ணிடட்டுமான்னும் என் கம்ப்யூட்டர் கேட்டுச்சே? “

“ அது அப்டித்தான், இருந்தாலும் இப்போ முடியாது”

“ ஒன்னு பண்ணு, மொதல்ல கொஞ்சம் தண்ணி குடி, அப்புறமா கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கலாம். நாங்க வேணா வெய்ட் பண்ணுறோம்” - தரன்.

“ இல்ல நீங்க சாப்டுங்க, என்னால கொஞ்சம் கூட சாப்பிட முடியாது”

“ நீங்க ரோபோட்டா- சாரி நீ ஒரு ரோபோட் தானே? “ - கொஞ்சம் கோபமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் பரத். பரத் இப்படிக் கேட்டதும் ஏதோ புரிந்ததாகப் பரத்தைப் பார்த்தான் தருன்.

“ ம்ம்ம்” என்றவாரு தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே இருக்கையிலிருந்து எழுந்தது ஆரவ் என்ற ரோபோட்.“சாரி கைய்ஸ்,எனக்கு ரொம்ப நாளா மனுஷங்க கூடப் பழகனும்னு ஆசை, அதான் ஒரு ஃபேக் ஐடி கிரியேட் பண்ணி மனுஷங்க மாதிரி சில விஷயங்களைச் செஞ்சுட்டு இருந்தேன். பட் நீங்க இப்படி கண்டுபிடிப்பீங்கனு நான் நினைக்கலை. எனிவே இனி என்னை உங்க கூட சேர்த்துக்க மாட்டீங்க, பை!” என்றவாரு பதிலுக்குக் காத்திருக்காமல் அங்கிருந்து அகன்றது ஆரவ்.

“அடப் பாவிங்களா இப்டியெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா? , பாவிங்களா கூட தப்பு, பாவிங்கன்னா மனுஷனைச் சொல்லுறது. பாவிக்கு அஃறிணைல என்ன வரும்?” சிரித்தவாறே சாப்பிட ஆரம்பித்தான் தருன்.

எதையெதையோ பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் மூவரும். திடீரென பரத்தைப் பார்த்த சிந்தீப் “ ஆமா, அவன் ரோபோட்னு உனக்கு எப்படித் தெரிஞ்சது? “

“ அது பார்த்தாவே தெரியுதே?”

“ எங்களுக்குல்லாம் தெரியலையே? உனக்கு மட்டும் எப்படி?”

” அப்போ நீயும்? “ - சிந்தீப்.

“ இதுக்கு மேல நானும் தாக்குப்பிடிக்க முடியாது. நானும் ரோபோட் தான். நானும் அதே காரணத்துக்காகத்தான் உங்க கூட பழகினேன். எச்சரிக்கையாத்தான் இருந்தேன். ஆனா! இட்ஸ் ஓகே. இப்போ சாப்பிட்டதெல்லாம் ஏற்கெனவே தனித்தனித் தனிமங்களா பிரிஞ்சு அது அதுக்கான பெட்டில சேர்ந்துடுச்சு. அத முதல்ல கிளியர் பண்ணனும்.பை ”

” ஆரவ் ரொம்ப பழைய ரோபோட் போல, பரத் கொஞ்சம் புதுசு. ஏன்னா ஆரவ் ஒரு ரோபோட்னு பரத் மொதல்லையே கண்டுபிடிச்சிட்டான். பட் பரத் ஒரு ரோபோட்னு ஆரவால கண்டுபிடிக்க முடியல. அதோட இப்போ வர்ற ரோபோட்டுகள் எல்லாம் அதி நவீனமா வருதுங்க. மனுசனுக்கும் அதுக்கும் வித்தியாசமே கிடையாது. இன்னொரு ரோபோட்டால நம்ம எதிர்ல இருக்கிற மனுஷனா ரோபோட்டானு கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கெல்லாம் வர்றதா சொல்லுறாங்க. இது எங்க போய் முடியுமோ? “ கவலைப் படுவதைப் போன்ற முகபாவத்துடன் கூறினான் சிந்தீப்.

“ என்ன எழவுடா இது? மனுஷங்க எல்லாரும் எங்கதான் போனாங்க?”

“ ஒருவேளை நம்ம ரண்டுபேரு மட்டும்தான் பூமில மிச்சமிருக்கிற மனுஷங்களோ? “ - சிந்தீப்.

“ க்க்கும்.” என்று முனகிக்கொண்டே மிச்சமிருந்த உணவுகளையும் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தான் தரன்.

கொஞ்சம் அரசியல், கொஞ்சம் காதல், கொஞ்சம் பிகர் கரக்ட் செய்தல் என்றவாரு மீண்டும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர் இருவரும். இவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த அறையில் சிறு சண்டை ஏற்பட்டு, எங்கிருந்தோ வந்த பீங்கான் தட்டு சிந்தீப்பின் தலையை நோக்கி வந்தது. அப்பொழுது டேபிளில் இருந்த சிந்தீப்பின் கர்சீப் கீழே விழவும், அதை எடுக்கக் குனிந்ததும் மிக இயல்பாய் இருந்தபோதும் தரனுக்கு செயற்கையாகவே தோன்றியது.

“ஒருவேளை?” குழம்பினான் தரன்.

தரனின் சந்தேகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சந்தீப்பும் தான் ஒரு ரோபோட் என்று ஒப்புக்கொண்டான்( ஒப்புக்கொண்டது).

“ நானும் ஆரவை ஒரு ரோபோட்னு முதல்லயே கண்டுபிடிச்சிட்டேன். ஏன்னா அது ரொம்ப பழைய மாடல். சுமார் 4 மாசத்துக்கு முன்னாடி தயாரிக்கப்பட்டது. அதுல எங்கள மாதிரி, ஐ மீன் என்னையும் பரத்தையும் மாதிரி மனுஷங்க சாப்பிடுற சாப்பாட்டு ஐட்டங்களை சாப்பிட்டு அதுல இருக்கிற தனிமங்களைத் தனித்தனியா பிரிச்சு சேமிச்சு அப்புறம் டிஸ்போஸ் பண்ணுற வசதி இல்லை. அப்புறம் பரத்தும் எனக்கு முந்தைய மாடல்தான். அதான் அதுவும் இவ்ளோ நேரம் தாக்குப்பிடிக்கலை. எனிவே நான் ஒரு மனுஷனைப் பார்க்கனும், பழகனும்னு நினைச்சேன். உங்கிட்ட பழகினது மூலமா எனக்கு அது கிடைச்சிடுச்சு!’

“ உன் விருப்பம் நிறைவேறிடுச்சு, ஆனா என்னால ஒரு மனுஷனைப் பார்க்க முடியலையே, எல்லாமே உயிரிள்ளாத மெஷின்களாத்தானே இருந்துட்டு இருக்கு. நான் எப்பத்தான் ஒரு மனுஷனைப் பார்க்கப்போறேன்? ச்சே. வாழ்க்கையே வெறுத்திடுச்சு” என்றவாறு இருக்கையிலிருந்து எழுந்து வாசலுக்கு வந்தான் தருன். நியூட்ரினோ அவனை மீண்டும் வீட்டிற்குச் சுமந்து வந்தது.

“மனுஷங்களே இல்லையா? மனுஷங்களைப் பார்க்கவே முடியாதா? எல்லா மனுஷங்களும் செத்துப் போயிட்டாங்களா? ஒருவேளை மனுஷ இனமே அழிஞ்சுடுச்சா? இங்க நான் மட்டும் இருந்து என்ன செய்யப்போறேன்? செத்தே போலாம்” என்ற சிந்தனைகள் தரனுக்குள் ஓட கயிற்றினை எடுத்துக்கொண்டு வாசலில் இருந்த மரத்தில் தூக்கிட்டுக்கொண்டான். அவனது கழுத்து நெறிபட்டு அழுந்த, அவனது மொத்த உடல் எடையும் புவியீர்ப்பினால் இழுக்கப்பட்டு, கழுத்து அறுபட்டு, அறுபட்ட இடத்தில் பச்சை நிறத்தில் சிலிக்கான் தகடுகளும், ஒயர்களும் பிய்ந்து தொங்கின.


தரன் வீட்டை விட்டுப் புறப்பட்டதிலிருந்து, திரும்ப வீட்டிற்கு வந்து தூக்கிட்டுக் கொண்டது வரை அனைத்தையும் கவனித்துவந்த டாக்டர்.கோவிந்த் தனது பிரத்யேக அறையிலிருந்துகொண்டு கீழ்க்கண்டவாறு பேச ஆரம்பித்தார். அவர் பேசுவதை அருகிலிருந்த கணினி தனது திரையில் எழுதிக்கொண்டிருந்தது.

“ மதிப்பிற்குரிய ஐ.ஜி. அவர்களுக்கு,

முன்னாள் அமைச்சரின் மகனான தரன் தற்கொலை குறித்து தாங்கள் என்னிடம் அளித்திருந்த வேலை நிறைவடைந்துவிட்டதாக நினைக்கிறேன். தரனைப் பற்றித் தாங்கள் கொடுத்த தகவல்களையும், தரனின் மூளையிலிருந்து பெறப்பட்ட சில நினைவுகளையும், அவரது ஹார்மோன் லெவல்களையும் வைத்து நாங்கள் உருவாக்கிய ரோபோட் இன்றும் தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்துகொண்டது. இது நான்காவது முறை. மொத்தமாகச் செய்யப்பட்ட ஐந்து சோதனைகளில் நான்கு முறை தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்திருக்கிறது.தரனிற்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டிருந்தால் அவர் நிச்சயமாக தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்திருப்பார். வேறு வழிகளில் இறந்திருந்தால் அது கொலையாகவோ, விபத்தாகவோ இருக்கலாம். நன்றி.”

திரையில் எழுதியிருந்த வாசகங்களைப் படித்துவிட்டு, திரையின் கீழே அவரது கை ரேகையையும் பதித்து செண்ட் இட் டூ ஐ.ஜி என்று கட்டளையிட்டுவிட்டு வெளியேறினார் டாக்டர். கோவிந்த்.